Saturday 22 November 2014



 உலக இந்து சம்மேளனம் (World Hindu Congress) நேற்று தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போனாலும் அரசியல் மொழியை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது போலிருக்கிறது. போகட்டும். இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று.
* தொடக்க விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டது உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள் அனைவரையும் பெருமைப் பட வைக்கும் விஷயம். சிறப்பிடம் தந்து அவரை இந்த விழாவுக்கு அழைத்த அமைப்பாளர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள். “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. குறிப்பிட்டார். தம் மக்களின் வாழ்வுரிமைப் பிரசினையை, “இந்துக்களின் துயரம்” என்று தமிழ் மாகாண முதல்வர் ஒருவர் உலக அரங்கில் முன்வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான பௌத்தர்கள் வாழும் நாடான இலங்கையின் அரசு, இதுவரை மரியாதைக்குரிய தலாய் லாமா அவர்களை சீனாவில் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு தன் நாட்டுக்கு அழைக்கவில்லை என்பதையும் குத்திக் காட்ட அவர் மறக்கவில்லை. காலனிய ஆட்சி கிறிஸ்தவ மதமாற்றங்களின் மூலம் இலங்கைத் தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முயன்றதையும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
world_hindu_congress_2014_1
* 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல். இந்த அடைமொழி நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அந்த ஆட்சி தற்காலிக கூட்டணிகளின் பிடிமானத்தில் அமைந்த ஒன்று. எனவே, இந்தப் புகழுரைக்கு இப்போதைய அரசே முற்றிலும் தகுதியுடையதாகிறது. * இந்துக்கள் ஒன்றிணைந்து பாரதத்தை உலக குருவாக ஆக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்தார். “ஒரு உண்மையான இந்து ஒவ்வொரு வேற்றுமையிலும் ஒருமையைக் காண்கிறான். வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைக் காணும் இந்த இந்து தர்மத்தின் இயல்பே நமது சமூகத்தை சமநிலையுடனும் அமைதியாகவும் வைத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
* உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார். இந்துக்களுடனும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களுடனும் நீடித்த அன்புடனும் பரிவுடனும் இருப்பவர் அவர். சீனத்தின் வல்லாதிக்கத்தால் உரிமை இழந்து அலையும் திபெத்திய மக்களுக்கு இந்து தேசம் அன்பும் ஆதரவும் அளித்து வருவதை என்றும் மறக்காதவர். இந்து, பௌத்த மதங்களிடையேயான நல்லுறவுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்பவர். பௌத்தத்தின் பெயரால் இந்துப் பண்பாட்டின் மீதும், இந்து தெய்வங்களின் மீதும் வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் பகுத்தறிவு ஜந்துக்களும், அம்பேத்கரிய புரட்சியாளர்களும், சிங்கள இனவெறியர்களும் பௌத்த ஞானத்தின் நடமாடும் திருவுருவாகத் திகழும் தலாய் லாமாவின் கூற்றுக்கு செவிமடுக்கப் போவதில்லை தான். ஆயினும், இந்த முக்கிய நிகழ்வில் அவர் தனது கருத்தைத் தெளிவாக இவ்வாறு முன்வைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
* 50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். 45 தனிப்பட்ட அமர்வுகளில் 200 பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர்.
* இளைஞர் சக்தி, பொருளாதாரம், அரசியல், கல்வி, அமைப்புகள், மகளிர், ஊடகம் ஆகிய துறைகளை மையப் படுத்தி தனித்தனி மாநாடுகள் இந்த சம்மேளத்தினூடாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
Hindu Youth Conference
Hindu Economic Conference
Hindu Political Conference
Hindu Educational Conference
Hindu Organizational Conference
Hindu Women Conference
Hindu Media Conference
இந்துக்களைப் பாதிக்கும் அடிப்படையான பிரசினைகளை மனதில் கொண்டு மிகச் சரியாக இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் அமைப்பாளர்கள். இந்த மாநாடுகளில் நடைபெறும் விவாதங்கள் இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் பல பகுதிகளில் ஒடுக்கப் பட்டு துயருறும் இந்துக்களின் மீட்சிக்கும், உலக நன்மைக்கும் வலு சேர்க்கட்டும்.
ஸங்கச்சத்வம், ஸம் வதத்வம் – ஒன்றிணைந்து பயணிப்போம், ஒன்றிணைந்து மொழிவோம்.
யதோ தர்ம: ததோ ஜய: – அறம் எங்குளதோ, அங்குளது வெற்றி.
2014ம் ஆண்டின் உலக இந்து சம்மேளனம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
சம்மேளனத்தின் வலைத்தளம்: http://www.worldhinducongress.org/
சம்மேளனம் குறித்த செய்திகள்:
http://www.thehindu.com/…/unite-to-make-…/article6623672.ece
http://samvada.org/20…/news/vhp-world-hindu-congress-begins/
http://lokmarg.com/hindus-persecuted-in-sri-lanka-wigneswa…/
‪#‎WorldHinduCongress‬ ‪#‎WorldHinduCongress2014‬

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளருக்கு அபராதம் விதிப்பதற்கு முன்பு, அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து, போதுமான இருப்பு தொகை செலுத்தும் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
வங்கி கணக்கில் வாடிக்கையாளர் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகை அந்தந்த வங்கிக்கு ஏற்ப மாறுபடும். வங்கிகளில் கணக்கு துவக்கும்போதே, குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதை வாடிக்கையாளருக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையில், வாடிக்கையாளரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில கொள்கைகள் வகுக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது.
இதன்படி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இதன்படி, கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் பிடித்தம் செய்வதற்கு முன்பாக, கணக்கில் இன்னும் ஒரு மாதத்தில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதை அவர்களுக்கு எஸ்எம்எஸ், இ&மெயில் அல்லது கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு கீழ் குறையும்போது, நிலுவை தொகைக்கு ஏற்ப அபராதம் விதிப்பது பற்றி வங்கி இயக்குனர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும். கணக்கு துவங்கியபோது ஒப்புக்கொண்ட விதிமுறைகளின்படி இது இருக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் அபராத தொகை, வங்கி சேவைகளுக்கு வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருக்க கூடாது. இந்த விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகின்றன. அதுவரை, வாடிக்கையாளரின் மொபைல் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை வங்கி சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. தாமோதரன் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ரிசர்வ் வங்கி குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையை போதுமான இருப்பு தொகை சேரும் வரை நிறுத்தி வைக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


-தினகரன்.
காஸ் சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட, வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்த சுமையை மக்களின் மீது ஏற்றாமல் இருக்க, பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டரின் சந்தை விலை சென்னையில் ரூ.863 ஆக உள்ளது. மானியமாக ஒரு சிலிண்டருக்கு ரூ.459ஐ மத்திய அரசு வழங்குகிறது. பொதுமக்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் ஸி404க்கு வழங்கப்படுகிறது.

மானியம் அதிகரித்து கொண்டே வருவதால் மத்திய அரசுக்கு பெரும் சுமை ஏற்பட்டு வருகிறது. இத னால் மானிய காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய தால் திட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து, தற்போது காஸ் சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட மத்திய அரசு புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மானிய சலுகை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் வசதி படைத்தவர்களுக்கு காஸ் மானியம் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் கூறுகையில், ‘காஸ் மானியத்தில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாடு உள்ளது. வசதி படைத்தவர்கள் நான் உட்பட, காஸ் மானியம் பெற தகுதியானவரா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதற்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் எந்தெந்த பிரிவினருக்கு மானியம் ரத்தாகும் என்பது அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை‘ என்றார். எனவே, விரைவிலேயே இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தினகரன்.
எறையூரில் பிடிபட்ட மலைப்பாம்புடன் வன அலுவலர்கள்- படம் :வசந்த ஜீவா.
எறையூர்  அருகே 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி பீட் பகுதியில், எறையூர் காலனி அருகேயுள்ள காப்புக்காட்டில் நேற்று இரையை தின்றுவிட்டு நகர முடியாமல் திணறிக்கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்றை சிலர் பார்த்தனர். அதுபற்றி பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமதுவுக்குத் தகவல் தெரிவித்தனர். கலெக்டர் மூலம் மாவட்ட வன அலுவலர் ஏழுமலைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வன அலுவலர் ஏழுமலை உத்தரவின்பேரில், வனவர் வீராசாமி, வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, வனக்காவலர் சந்திரசேகர் ஆகியோருடன் மலைப்பாம்பினைப் பிடிக்கும் குழு எறையூருக்கு விரைந்தது.
அங்கு அந்த குழுவினர் மலைப்பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் போட்டு பெரம்பலூர் மாவட்ட வன அலுவலகத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் சிறுவாச்சூர் அருகே பச்சைமலையிலுள்ள அடர்வனத்திற்குக் கொண்டு சென்று மலைப்பாம்பு விடப்பட்டது. பிடிபட்ட அந்த மலைப்பாம்பு 6 அடி நீளமுடையதாகும்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஏழுமலை தெரிவித்ததாவது : தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1972ன்படி மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். அதனைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். மலைப்பாம்பு இருப்பது கண்டறியப்பட்டால் வனத்துறையினரிடமோ, தீய ணைப்பு துறையினரிடமோ உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.



Friday 21 November 2014


தாஜ்மகால்  மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1654-ம் ஆண்டு கட்டியதாகும்.  தாஜ்மகாலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.தற்போது தாஜ்மகாலின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இதுபற்றி உத்தரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி அசம்கான் கூறுகையில், தாஜ்மகாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டின் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக தாஜ்மகால் உள்ளது.  இதில் கிடைக்கும் வருவாய் ஏழை முஸ்லீம்களை நோக்கி செல்ல வேண்டும்.

இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிட வேண்டும். எனவே, தாஜ்மகாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களே ஒரு நிஜாமை நியமித்து கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும்” என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். அசம்கானின் கருத்தால் சர்ச்சை உருவாகி இருக்கிறது.

பாரதீய ஜனதா தலைவர் ஷானவஸ் ஹுசைன் ஆசம் கானின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.” இந்திய தொல்லியல் ஆய்வுதுறையால் பராமரிக்கப்பட்டு வரும்  தாஜ்மகால் புகழ்பெற்ற பாரம்பரியமான ஒன்று என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்க ஆசம் கான் முயற்சி மேற்கொள்கிறார். தாஜ்மகாலை அரசியல் ஆக்க கூடாது” என்று தெரிவித்தார்.

டெல்லி வக்பு வாரிய தலைவர் சவுத்ரி மைதீன் அகமதுவும் ,ஆசம் கான் கருத்தை நிராகரித்துள்ளார். ”இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையில் சிறந்த பரமரிப்பை மேற்கொள்ள முடியும். இது போன்ற கோரிக்கைகளை வைப்பது சரியானது அல்ல”என்றார்.

-தந்தி.

இந்தியாவின் உயர்மட்ட முஸ்லீம் மதகுருக்களில் ஒருவரான டெல்லி இமாம், தனது மகனை துணை இமாமாக நியமித்தற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான டெல்லி ஜும்மா மசூதியில் நாளை  இமாம் சையது அகமது புகாரியின் மகன் ஷாபான் சையது புகாரிக்கு ‘துணை இமாம்’ பட்டாபிஷேக நிகழ்ச்சி  நடைபெறுகிறது.

இந்த நிலையில், டெல்லி வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தாக மசூதி உள்ளது. முஸ்லீம் மதத்துக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பவர்களும், ஷாகி இமாமும் ஒருதலைபட்சமாக தங்கள் வாரிசுகளை முடிவு செய்ய முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், இந்த நடவடிக்கையில் எந்த சட்ட புனித தன்மையும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. ஜனவரி 28ல் புகாரி தனது முடிவு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் ”என உத்தரவிட்டது.

முன்னதாக,‘துணை இமாம்’ பட்டாபிஷேக நிகழ்ச்சி இமாம் புகாரி சார்பில் இந்திய, வெளிநாட்டு தலைவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்திய பிரதமர் மோடியை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீபை அழைத்து இருந்ததால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

-தினத்தந்தி.
தாராளமயமாக்கல் வந்த பிறகு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு முன்பாக இந்தியாவில் தடம் பதித்து கடந்த 35 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ஒரே நிறுவனம் ஜேசிபி என்றால் அது மிகையல்ல.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையான அடிப்படை கட்டமைப்புத் துறையில் ஜேசிபி-யின் பங்கு அளப்பரியது. வீதியில் ஏதோ ஒரு கட்டிடத்தை இடிக்கின்ற ஒரு கனரக வாகனத்தை பார்த்த நொடியிலேயே அதை ஜே.சி.பி. என்று அழைக்கின்ற அளவுக்கு பிரபலமாகியுள்ளது.
கட்டிடங்களை இடிப்பதற்கு மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வந்ததற்கு நிறைய கதைகள் உண்டு. ஜே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால் பம்ஃபோர்ட் தனது 21 வது வயதில் 1966-ம் ஆண்டு முதன் முறையாக தன் தந்தையுடன் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு இந்திய வாகன சந்தை பற்றியெல்லாம் தெரியவில்லை. எனினும், லண்டனில் தான் செய்த வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஜே.சி.பி.யை இந்தியாவில் தடம் பதிக்க வைக்கிறார்.
1979-ம் ஆண்டு ஜே.சி.பி. தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கினார். இந்தியாவில் முதல் முறையாக வாகன உற்பத்திக்காக தனி தொழிற்சாலை ஆரம்பித்த முதல் நிறுவனம் ஜே.சி.பி.தான் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த 35 ஆண்டு பயணத்தில் இந்தியாவின் நீள அகலம் முழுக்க பயணித்த ஜே.சி.பி க்கு கிடைத்த வரவேற்புகள் ஏராளம். இதுதான் ஜே.சி.பி என்னும் நிறுவனத்தின் பெயரை வாகனத்தின் பெயராக கொண்டாடுகிற அளவுக்கு பிரபலமாக்கியுள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் ஆரம்பித்து கடைக்கோடி கிராமங்கள் வரை ஜே.சி.பியின் டயர் படாத இடமென்று எதுவும் இல்லை எனலாம். எவ்வளவு பெரிய கோட்டையாக இருந்தாலும் ஒரே தட்டில் தரைமட்டம் ஆக்கிவிடும் ஜே.சி.பி, இடித்த உபரி பொருட்களை அப்புறப்படுத்துவது, இடிக்கப்பட்ட இடத்தை சமன்படுத்துவது என ஒற்றை இயந்திரமாக பல வேலைகளை செய்கிற அளவுக்கு வடிவமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதனை பின்பற்றி ஏகப்பட்ட நிறுவனங்கள், கன ரக வாகனங்களை தயாரிக்க ஆரம்பித்தன.
ஜே.சி.பி.யின் ஒருநாள் வாடகையே பல ஆயிரங்களை தொடுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களை ஓட்ட பயிற்சி பெற்றவர்களும் அவற்றின் உரிமையாளர்களும் பல ஆண்டுகள் காத்திருந்து பெறுகிற வருவாயை, ஜே.சி.பி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஒரு சில மாதங்களில் பெற்று விடுகிறார்கள். இதனால் அரசு மறுவாழ்வு பயிற்சிகளில் கூட ஜே.சி.பி. நிறுவனத்தின் பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக ஜே.சி.பி நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு அதிகாரி ஜம்சீத் சிங் கூறுகையில், “கடந்த 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜே.சி.பி நிறுவனம் இதுவரை 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இவற்றில் 2 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இதுவரை புணேயில் 2 தொழிற் சாலைகளும், ஹரியாணா மாநிலம் பல்லாபார்க்கில் ஒரு தொழிற் சாலையும் இருந்த நிலையில் ஜெய்ப்பூரில் மேலும் 2 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 12 தொழிற் சாலைகள் உள்ள நிலையில் இதற்கடுத்து, இந்தியாவில்தான் 5 தொழிற்சாலைகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுவரை கனரக வாகனத்துக்கான தொழில்நுட்ப உதிரி பாகங்களை அதிகம் தயாரித்த நிறுவனம் தற்போது, வரும் காலங்களில் ‘டெலஸ்கோப் ஹேன்ட்லர்’ எனப்படும் சுமைதூக்கி கருவிகளை அதிகளவில் தயாரிக்கவுள்ளது என்றார்.
வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு ஜே.சி.பி.யை கையா ளுவது குறித்து தமிழ்நாடு கனரக மற்றும் பளுதூக்கும் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த் தனன் கூறியதாவது: பொதுவாக வாகனங் களை வசதிக்காக பயன்படுத்துபவர் களுக்கு இணையாக அவற்றை வணிக நோக்கில் பயன்படுத்து பவர்களும் அதிகளவில் உள்ளனர். ஆட்டோவில் ஆரம்பித்து மஹிந்திரா வேன், டெம்போ டிராவலர்களை மாத வாடகைக்கு விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கியவர்கள், அவற்றை கொண்டு சம்பாதிப்பதைக் காட்டிலும் இ.எம்.ஐ கட்டி நொடிந்து போனவர்கள் தான் அதிகம். ஆனால் ஜே.சி.பி. வந்த பிறகு நிறைய பேர் வெறும் வாகன உரிமையாளர்கள் என்ற அளவில் மட்டுமன்றி தொழில் முனைவோராகவும் மாறியுள் ளனர். இன்றைக்கு ஒரு ஜே.சி.பி.யின் விலை ரூ.25 லட்சத்துக்கு சந்தைகளில் கிடைக்கிறது. 25 லட்சமா என்று நிறைய பேர் இதனை வாங்குவதில்லை.
இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் போன்ற பொதுத்துறை வங்கிகள் ஜே.சி.பி நிறுவனத்தின் கனரக வாகனங்களை வாங்குவதற்கு எளிதில் கடனுதவி அளிக்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு 700 முதல் 900 ரூபாய் ஜே.சி.பி-க்கு வாடகையாக பெறலாம். இதுவே மாதக்கணக்கிலென்றால், 95000 வரை வாடகை பெறலாம். ஜே.சி.பி. இயக்குவதற்கான பட்டய வகுப்புகள் கூட உள்ளன.
இவ்வளவு பணத்தை முதலீடு செய்து ஜே.சி.பி.யை வாங்கிய பின் ஏதாவது கோளாறு என்றால் என்ன செய்வது என்று தயங்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஜே.சி.பி.யை சரி செய்வதற்கான ஆட்கள் உள்ளனர். எப்படி வீட்டில் வாஷிங்மெசின், பிரிட்ஜ் எல்லாம் பழுதடைந்தால், உடனே வந்து சர்வீஸ் செய்து தருகிறார்களோ, அதே போல்தான் ஜே.சி.பி.க்கும் சர்வீஸ் வசதி உண்டு. குறிப்பிட்ட காலம் வரை இலவச சர்வீஸ் வசதியும் உண்டு என்று அவர் கூறினார். 

-தி இந்து.

பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் இறுதி வாரத்தில் மாநில அளவில் ‘கேம்பஸ் இண்டர்வியூ' நடத்தப் படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தொழில்நிறுவனங் கள் கூட்டுமுயற்சி மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத் துக்கு உட்பட்டபொறியியல் கல்லூரி களில் அடுத்த ஆண்டு படிப்பை முடிக்கும் இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கேம்பஸ் இண்டர்வியூ (வளாக நேர்முகத்தேர்வு) டிசம்பர் இறுதிவாரம் முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய 3 மண்டலங் களில் நடத்தப்படும் 10 வளாக நேர்முகத்தேர்வுகளில் காக்னிசன்ட், அக்சஞ்சர் சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வுசெய்யும். இதற்காக தொழில்நுட்ப தேர்வுகள், தகவல்தொடர்புத்திறன் தேர்வு ஆகியவற்றுடன் ஆன்லைன் தேர்வும் நடத்தப்படும்.
நிறுவனங்களின் தேர்வுகள், மாணவர்களிடமிருந்து அவை எதிர்பார்க்கும் திறன்கள் தொடர் பாக அனைத்து பொறியியல் கல் லூரிகளுக்கும் தகவல் தெரிவிக் கப்படும். அத்துடன் இதுகுறித்த விவரங்கள் அண்ணா பல்கலைக் கழக இணையதளத்திலும் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 -தி இந்து.
    

       வ.களத்தூரில் நேற்று மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வ.களத்தூர் RSS தொண்டர்களின் ஏற்பாட்டில் பெரம்பலூர் சேவா பாரதி மற்றும் வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்களிப்போடு நடைபெற்ற இத்திருவிளக்கு பூஜையில் திரளான அளவில் பெண்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வ.களத்தூரில் இதற்க்கு முன் திருவிளக்கு பூஜை நடைபெற்று இருந்தாலும் ஆகம விதிகளின்படி நடத்த, பெரம்பலூர் மாவட்ட சேவா பாரதி அமைப்பின் செயலாளர்திரு.சிவபாண்டியன்அவர்களின் ஏற்பாட்டில் பெரம்பலூரிலிருந்து வருகைபுரிந்த சேவாபாரதி குழுவினரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. வ.களத்தூர் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று அவகளின் பாதுகாப்போடு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பித்தக்கது.
VHP செயலாளர் பாஸ்கர் ஜி யுடன் வ.களத்தூர் இளைஞர்கள்
திருவிளக்கு பூஜையின் சிறப்பு அழைப்பாளராக தென்தமிழக VHP செயலாளர்திரு. பாஸ்கர் ஜி கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வ.களத்தூர் RSS தொண்டர்கள் செய்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை 6 மணி அளவில் வ.களத்தூர் மாரியம்மன் கோவிலில்திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது . அடுத்த கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நாள் என்பதால் மார்கழி மாத போவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.




Wednesday 19 November 2014

சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தமிழக-ஆந்திர கடற்பரப்பு எல்லையில் இருக்கும் ஒரு சிறிய தீவு பழவேற்காடு. 16-ம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பழவேற்காடு, பின்னர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பு அதிகரித்த பிறகு அவர்கள் வசம் வந்தது.
இங்கே, 11-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட சமய ஈஸ்வரர் ஆலயமும், 13-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட ஆதி நாராயண பெருமாள் ஆலயமும், உள்ளன. இவை மட்டுமல்லாமல், டச்சுக்காரர்களின் இடிந்த கோட்டைகள், கொத்தளங்கள் மற்றும் கல்லறைகள் இருக்கின்றன. மேலும் இது ஒரு பறவைகள் சரணலாயமாகவும் உள்ளது. ஆகவே, பழவேற்காடு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-1

Pazhaverkadu-Kovilkal-Vazhakku-2
மேற்கூறப்பட்ட இரண்டு கோவில்களையும் சீரமைக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை இம்மாதம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில் சீரமைப்புப் பணிக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது.
வழக்கின் பின்னணி
பழவேற்காடு சுற்றுலாத்தலமாக இருந்தாலும், தொல்லியல் துறை டச்சுக் காரர்களின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரிக்கக் காண்பிக்கும் ஈடுபாட்டை, பழமையையும் பெருமையையும் வாய்ந்த நமது கோவில்களைப் பராமரிப்பதில் காண்பிக்கவில்லை. சொல்லப்போனால், இரண்டு ஆலயங்களும் நமது கலாச்சார மாண்பையும், கட்டிடக்கலையின் சிறப்பையும், சிற்பக்கலையின் பெருமையையும் பகர்கின்றதாக இருக்கும்போது, டச்சுக் காரர்களின் கட்டிடங்கள் நமது அடிமை வாழ்வைச் சித்தரிக்கும் சின்னங்களாகத்தான் இருக்கின்றன என்பதே உண்மை. ஆனால் தொல்லியல் துறையானது அந்த அடிமைச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கக் காண்பித்த ஈடுபாட்டை இவ்விரண்டு ஆலயங்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் காண்பிக்கவில்லை.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-4
எனவே நாளடைவில் இரண்டுகோவில்களும் சீரழிந்து, புதர்களால் சூழப்பட்டு, கோபுரங்களில் செடிகள் முளைத்து பாழடைந்து போயின. இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமய ஈஸ்வரர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்திக் கொண்டது. அதன் பின்பும் கோவிலைச் சீரமைக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில்களின் நிலையைக் கண்டு மனம் வருத்தமுற்ற ஊர் மக்கள், மீனவர் சமுதாயத்தின் உதவியுடனும் ராமகிருஷ்ணா மடத்தின் ஆதரவுடனும், கோவில்களைச் சுற்றியிருந்த புதர்களையும் செடிகொடிகளையும் அகற்றி, தங்களால் முடிந்த அளவுக்குச் சீரமைத்தனர். எந்தப் பணியையும் முன்னெடுத்துச் செய்யாமல் இருந்த அறநிலையத்துறை, ஊர்மக்கள் நன்றாக சீரமைத்த பிறகு, ஆதி நாராயண பெருமாள் கோவிலையும் கையகப்படுத்திக்கொண்டது.
இதனிடையே 13வது நிதி ஆணையம் (13th Finance Commission) தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பிற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதிலிருந்துரூபாய் 52 லக்ஷம் பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டது. இதனால் கோவில் ஓரளவிற்குத் தன்னுடைய பழைய பெருமைமிகு நிலைக்குத் திரும்பும் என்று ஊர் மக்களும் பக்தர்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒதுக்கப்பட்ட பணத்தைக்கொண்டு கோவிலைச் சீரமைக்கும் பெயரில் புல்டோசர் வைத்து கோவிலைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அறநிலையத்துறை, பக்தர்களின் நம்பிக்கையையும் சேர்த்து தகர்த்து எறிந்தது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-10
அறநிலையத்துறையின் அராஜகப் போக்கைப் பொறுக்காமல்தான், கோவில் பாதுகாப்பைத் தன் தலையாய நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வரும் ஸ்ரீகுமார் என்கிற பக்தர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார்.
கோவில்களின் அற்புதமும் அறநிலையத்துறையின் அலட்சியமும்
ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுமே செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை. செம்புறைக்கற்களுக்கு செம்பூரான்கற்கள் என்றும் பெயர். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் LATERITE STONES என வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிரானைட் கற்கள்தான் உண்டே தவிர செம்புறைக்கற்கள் கிடையாது. எனவே இவை கர்நாடக, கேரள அல்லது ஆந்திரப் பகுதிகளில் இருக்கும் செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத 11 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் அண்டைய பிராந்தியப் பகுதிகளிலிருந்து செம்புறைக்கற்களை பெருமளவில் கொண்டு வந்து, கோவிலின் ஒவ்வொரு நிலையையும் முறையாக நிர்மாணித்து, ஒவ்வொரு சிற்பத்தையும் கவனமாகப் பார்த்துச் செதுக்கி, ஒவ்வொரு மண்டபத்தையும் சரியாகக் கணக்கிட்டு கட்டுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அது ஒரு பிரம்மாண்ட காரியமாகும்.
செம்புறைக்கற்கள் இரும்பு ஆக்ஸைடு உள்ளடக்கியவை ஆதலால், பூமிக்கு அடியில் இருக்கும் வரை மிருதுவாக இருப்பவை. ஆனால் பூமியிலிருந்து தோண்டி வெளியே எடுக்கப்பட்டவுடன் வெய்யிலும் காற்றும் பட்டால் மிகவும் கடினமாக ஆகிவிடக்கூடியவை. அவை நுண்ணிய துவாரங்கள் கொண்டவையாதலால் நீர்ப்படுகையாகவும் செயல்படுபவை. அவை சுண்ணாம்புக் கலவையுடன் கலக்கும்போது இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நீண்ட காலம் உறுதியாக இருக்கும் தன்மையைப் பெறுகின்றன.
அக்காலத்தில் இரண்டு கோவில்களையும் கட்டிய வல்லுனர்களும் பணியாளர்களும் வெறும் உளியையும் சுத்தியலையும் வைத்துக்கொண்டு பிரம்மாண்ட கோபுரங்களை நிர்மாணித்து, பெரிய மண்டபங்களை அமைத்து, அழகான சிற்பங்களையும் செதுக்கியிருப்பது வியந்து போறத்தக்கதாகும். கோட்டையைப் போன்ற மதிலும், பெரிய கோபுரமும், அகன்ற நுழைவாயிலும் கொண்டது ஆதி நாராயண பெருமாள் கோவில். நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மராமத்துப் பணிகளும் கருக்கு வேலைகளும் கூடியது. வெளிமண்டபம் முழுவதும் ராமாயணக்கதைகள் 8 அங்குல அளவில் சிறிய சிற்பவடிவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தில் நடன மங்கையர் சிற்பங்களும், தசாவதாரங்களின் சிற்ப வடிவங்களும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஒவ்வொரு நீளமும் அகலமும் அற்புதமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டவை. தூண்களும் மேற்கூரைகளும் பலப்பல உருவங்களைக் கொண்டவை. ஒரு தூணில் பலாப்பழத்தை உரித்துத் தின்னும் குரங்கின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அது பார்ப்போரின் கண்களைக் கவரும் விதத்தில் தத்ரூபமாக இருக்கிறது. மேற்கூரையில் நான்கு குரங்குகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஒரே குரங்கைப் போன்று நம் பார்வைக்குத் தெரியும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் மச்சக்கன்னிகள் (பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியும் கொண்ட உருவங்கள்), மனித-விலங்குகள் (மனித உடல் பாதி மிருக உடல் பாதி கொண்ட உருவங்கள்), பல தலைகள் கொண்ட உருவங்கள் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரலாற்றைச் சித்தரிக்கும் கல்வெட்டுகளும் இருக்கின்றன.
ஆதி நாராயண பெருமாள் ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் காட்சி தருகிறார். அபய ஹஸ்தத்துடன் அருள் புரிகிறார். சன்னிதிக்கு வெளியேயும் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரத ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளுடன் கூடிய பலி பீடம் அழகாக உள்ளது.
ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு அருகில் சமய ஈஸ்வரர் கோவிலும் உள்ளது. இதுவும் செம்புறைக்கற்களால் அற்புதமாகக் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலிலும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. கல்வெட்டுக்களும் உள்ளன.
நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியர்கள் நமது கோவில்களை எப்படி அழித்தார்களோ, அதைவிடக் கொடூரமாக அறநிலையத்துறை இந்தக் கோவில்களை அழிக்க முனைந்திருக்கிறது. புனர் நிர்மாணம், சீரமைப்பு என்கிற பெயர்களில், கோவில்களின் சுற்றுச்சுவரை முழுமையாகத் தரைமட்டமாக ஆக்கிவிட்டது. கோவில் வாயில்களையும் இடித்து வாயிற்படிக்கட்டுகளையும் உடைத்துவிட்டது. தூண்கள் தகர்த்தெரியப்பட்டு கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. சரளைக்கற்கள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் செங்கற்களையும் சிமெண்டையும் கொண்டு பூச்சுவேலை நடக்கின்றது. ஆங்காங்கே முளைத்திருக்கும் செடி கொடிகளைக் கூடச் சரியாக நீக்கவில்லை. கோவில் அடித்தளத்தின் வலிமையைக் கூட்டாமல் கோபுரத்தின் எடை கூடும் விதத்தில் கான்கிரீட் விமானம் கட்டப்பட்டுள்ளது. இது தூண்கள் மீது அதிகப்படியான எடையை அழுத்தும் விதமாக உள்ளது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-8
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-9
வாயிலில் இருந்த வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான பிரம்மாண்டமான மரக்கதவு உடைக்கப்பட்டு, உடைக்கப்பட்ட பகுதிகள் வெளியே கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. அதே போல 12 அடி உயரம் கொண்ட மரத்தினாலான அழகிய தூண் ஒன்றையும் தகர்த்து வெளியே வைத்திருந்தனர். அந்த அழகிய தூணும் மேலும் 1000 கிலோ எடையுள மரத்தினாலான பொருட்களும் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அலட்சியமாக இருந்த அறநிலையத்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. பழைய வரலாறுகளைச் சொல்லும் ஆவணங்களாக விளங்கும் கல்வெட்டுகள் மணல் பூச்சுகளினாலும், வெள்ளையடிப்பினாலும், சிமெண்டு சுண்ணாம்பு பூச்சுகளினாலும் அழிக்கப்பட்டுள்ளன.
 Pazhaverkadu-Kovilkal-Vazhakku-7
ஒரு கோவிலைப் புதுப்பிக்கும் போது, ஆகம விதிகளின் படி, சுவாமி விக்ரகங்களை நீரிலோ அல்லது அரிசியிலோ தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஆனால் அறநிலையத்துறை இந்தக் கோவிலின் விக்ரகங்களை ஏதோ வேண்டாத பொருட்களைப் போல கண்ட மேனிக்குப் போட்டு வைத்துள்ளது. பாதகமான இந்தச் செயலினால் அறநிலையத்துறை ஹிந்துக்களின் மனங்களையும் மத உணர்வுகளையும் கடுமையாகப் புண்படுத்தியுள்ளது.
Pazhaverkadu-Kovilkal-Vazhakku-11
ஆலயங்கள் பாதுகாப்புப் பணியில் ஸ்ரீகுமார்
சென்னையைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் உறுப்பினரான ஸ்ரீகுமார் ஆலயப் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, அறநிலையத்துறையிடமிருந்து பல தகவல்களைப் பெற்று, தன் பணிகளைச் செவ்வனே செய்து வருபவர்.
தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்கள் பழவேற்காட்டில் அறநிலையத்துறையின் கொடுமையான செயல்களைச் செய்தியாக வெளியிட்டதைப் பார்த்த ஸ்ரீகுமார், தானும் நேரிடையாக அங்கே சென்று பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறநிலையத்துறைக்குப் மனுக்களை அவர் அனுப்பியதில், அறநிலையத்துறை சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துள்ளது. அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு ஆய்வு செய்த ஸ்ரீகுமார், அறநிலையத்துறை பல விதிகளை மீறிச் செயல்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.
அவர் கண்டுபிடித்ததன்படி, அறநிலையத்துறையின் விதி மீறல்கள் எப்பேர்பட்டவை என்று பார்ப்போம்:

விதிகளும் மீறல்களும்
  • ஒரு கோவிலைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு முன்பு மாநில தொல்லியல் துறையைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அவர்களை ஆலோசிக்காமலே ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது அறநிலையத்துறை.
  • கோவில்களின் புதுப்பித்தலுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள பணி ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்க தமிழக அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் பழவேற்காடு கோவிலைப் பொறுத்தவரை அறநிலையத்துறை ஆணையரே அங்கீகாரம் அளித்துள்ளார்.
  • அதே போல ரூபாய் 50 லட்சத்திற்கு அதிகமாகச் செலவு பிடிக்கும் வேலைகளைச் சரிபார்க்கும் அதிகாரம் நெடுஞ்சாலைத்துறை அல்லது பொது பணித்துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளருக்குத்தான் உண்டு. ஆனல் இந்தக் கோவில் விஷயத்தில் அவர்களின் ஆலோசனையையோ அல்லது அனுமதியையோ பெறவில்லை.
  • கோபுரம், விமானம், மண்டபங்கள் போன்றவற்றைச் சீரமைக்கும் பணியையோ அல்லது புதிதாகக் கட்டும் பணியையோ, அரசு அமைத்துள்ள ஸ்தபதிகள் குழுவில் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற, ஸ்தபதியிடம்தான் அளிக்க வேண்டும். ஆனால் இந்தக் கோவிலின் பணி அரசுக் குழுவில் இல்லாத அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மன் என்கிற நபருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்தபதியின் திட்டமும் திட்ட மதிப்பீடுகளும் நெடுஞ்சாலைத்துறை அல்லது பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரின் கையொப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும். அது இங்கே செய்யப்படவில்லை.
  • ஒரு கோவிலைப் புதுப்பிக்கும்போது, அக்கோவிலில் உள்ள சிற்பங்கள், விக்ரகங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், வடிவமைப்புகள், வேலைப்பாடுகள் மற்றும் பல பழமை வாய்ந்த பொருட்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை இந்த முக்கிய விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல்கள்
இரண்டு கோவில்களின் சிறப்புகளையும், அறநிலையத்துறையின் அலட்சிய விதி மீறல்களையும் தன்னுடைய மனுவில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகுமார், பின்வரும் வேண்டுதல்களை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
  • கோவிலைச் சீரமைப்பதற்குத்தான் அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர, கோவிலை இடித்துவிட்டுத் திரும்பவும் கட்டுவதற்கு அல்ல. ஆனால் அறநிலையத்துறை ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் பல இடங்களில் விதிகளை மீறி இடித்துத்தள்ளி மீண்டும் புதிதாகக் கட்டிவருகிறது.
  • இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு, தொல்லியல் துறை வல்லுனர்களையோ, ஆகம விதிகள் அறிந்தவர்களையோ ஆலோசிக்காமல், தன்னுடைய இஷ்டத்திற்கு மனம்போன போக்கில் செயல்பட்டுள்ளது அறநிலையத்துறை.
  • செம்புறைக்கற்களால் கட்டப்பட்ட கோவில் என்பதால் அதைச் சீரமைக்க விஷயம் தெரிந்த பணியாளர்களைத்தான் வேலைக்கு அமர்த்த வேண்டும். ஆனால் சாதாரண கட்டிடத் தொழிலாளர்களை அமர்த்தி பொதுப்பனித்துறை பொறியாளர்களின் மேற்பார்வையில் விட்டுள்ளது அறநிலையத்துறை.
  • அறநிலையத்துறையின் அலட்சியத்தை செய்தித்தாள்கள் வெளியிட்டவுடன் வேலையை நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சில காலம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற நினைப்பில் மீண்டும் கோவிலை இடித்துக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • ஆதி நாராயண பெருமாள் கோவிலின் சீரமைப்பை நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சமய ஈஸ்வரர் கோவிலைச் சீரமைக்கும் பணியைத் துவக்கியுள்ளது. அந்தப் பணியையும் அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மனிடமே ஒப்படைத்துள்ளது. இதை அனுமதித்தால் ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இந்தக் கோவிலுக்கும் ஏற்படும்.
  • ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர் பெருமாள் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த கோவில்களைச் சீரமைக்கும் திறமையோ, விஷய ஞானமோ, பொறுப்போ அறநிலையத்துறைக்குக் கிடையாது. எனவே அந்தப் பணியை தொல்லியல்துறையிடம் கொடுக்க வேண்டும். அல்லது தொல்லியல் துறையின் கீழ் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் இப்பணியை ஒப்படைக்கலாம்.
  • இதே பழவேற்காடு ஊரில் டச்சுக் கம்பெனியாரின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரித்து வரும் தொல்லியல் துறை, அவற்றை விட மிகவும் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த இவ்விரண்டு கோவில்களையும் ஏன் பராமரிக்கக் கூடாது?
  • 1986 முதல் 1992 வரை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்குப் பல நவடிக்கைகளை எடுத்தது. எங்கேயோ அன்னிய தேசத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தின் நலனைப் பாராட்டி பணி செய்த கலாச்சார அமைச்சகம், நம்முடைய நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோவில்களைப் புனர் நிர்மாணம் செய்ய அதே ஈடுபாட்டை ஏன் காண்பிக்கக் கூடாது? கலை மற்றும் கலாச்சாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பாதுகாத்துப் பரப்புவதையே தன் குறிக்கோளாக, நோக்கமாக (MISSION STATEMENT) அறிவித்துள்ளது கலாச்சார அமைச்சகம். அதன்படி நமது நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது. எனவே, இவ்விரண்டு கோவில்களை பாதுகாப்பதும் கூட அதனுடைய குறிக்கோளுக்கு ஒத்து வருவதாகவே இருக்கிறது.
  • இவ்விரண்டு கோவில்களை விதிகளை மீறி சீரமைப்பதை நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தும், அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. தன்னுடைய வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆகவே, அரசியல் சாஸனத்தின் 226வது க்ஷரத்தின் படி நவடிக்கையெடுக்கும்படி இந்நீதிமன்றத்தை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
  • மேற்கூறிய காரணங்களை மனதில்கொண்டு, மாண்புமிகு உயர் நீதிமன்றம், ஆதி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சமய ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணியிலிருந்து அறநிலையத்துறையை நீக்கி, அப்பணிகளை தொல்லியல் துறையிடமும் மத்திய கலாச்சார அமைச்சகத்திடமும் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
  • இவ்வழக்கின் மீதான் தீர்ப்பு வரும்வரை பழவேற்காட்டில் அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோருகிறேன்.
ஸ்ரீகுமாரின் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அறநிலையத்துறையின் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கும் மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டிஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.
ஸ்ரீகுமார் இவ்வழக்கில் வெற்றி பெறும் பட்சத்தில், ஆலயங்களின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒரு திருப்பு முனையாக இவ்வழக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்களும், ஆன்மீகப் பாரம்பரியப் பிரியர்களும், பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதிலும் ஐயமில்லை.

-VSRC

வ.களத்தூரில் நாளை வியாழக்கிழமை 20-11-2014  திருவிளக்கு பூஜை மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை திருவிளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த திருவிளக்கு பூஜைக்கு அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை 8 நாட்களுக்கு ராணுவத்தின் பல்வேறு நிலை பணிகளுக் கான ஆள்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இம்முகாமில் சான்றிதழ் சரிபார் ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவத் தகுதிகள் குறித்த தேர்வுகள் நடைபெற இருந்தது. முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சார்ந்த தகுதியான நபர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 2015ம்ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கும் என்று ராணுவப் பாதுகாப்புத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்காக தொடர்பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் தவறாமல் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு, தேர்வாகி, நாட்டுக்காகப் பாடுபடும் அரியவாய்ப்பினைப் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இரு பிரிவினருக்கு பொதுவான நிலத்தை, ஒரு பிரிவினருக்கு பட்டா மாற்றம் செய்வதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தேவையூர் ஊராட்சியில் இரு பிரிவினருக்கு பொதுவாக 22 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த இரு பிரிவினரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 5-ம் தேதி அந்த நிலத்தை ஒரு பிரிவினருக்கு மட்டுமே பட்டா மாற்றம் செய்ததாக தெரிகிறது. இதையறிந்த தேவையூர் கிராம மக்கள், அந்த நிலத்தை இருபிரிவினருக்கும் பிரித்து அளிக்க வேண்டும். அல்லது, இருபிரிவினரும் பயன்படுத்தும் வகையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.



தகவலறிந்து, சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற வேப்பந்தட்டை வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த் துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தயில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி மகா தேரோட்டம், 5ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த கொப்பரையை, ஆண்டுதோறும் விழா தொடங்குவதற்கு முன்பு சீரமைப்பது வழக்கம். அதன்படி தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கொப்பரையின் அடிபாகத்தில் உள்ள வளையம் சேதமடைந்ததால் அதை மாற்றி, வர்ணம் தீட்டி, அர்த்தநாரீஸ்வரர் உருவம் வரையப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு வரும் 4ம் தேதி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.

பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்:திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் பெறும் வகையில் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதியை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், சேவைப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கும் இந்த காப்பீடு வசதி பொருந்தும். தேரோட்டத்தின்போது மாட வீதியில் பக்தர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகையை பெறலாம்.

வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டது. இதில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு நிதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதத்துக்கு பிறகு இதன்மூலம் ஓவர்டிராப்டாக ரூ.5,000 கடன் பெறவும் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினாலே போதும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குபவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு பலன்பெறலாம். இதற்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் காப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களை பொறுத்து கூடுதல் நிதியை அரசிடம் இருந்து இந்நிறுவனம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1000க்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் ரூ.30,000 காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினால் போதுமானது.

எல்ஐசி நிறுவனத்தின் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் மிகக் குறைந்த தொகையே பிரிமியமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேரும்போது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்தும், நிலமற்ற குடும்பங்களுக்கு மீதி 50 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஜன்தன் யோஜனாவிலும் ரூ.90 கட்டணத்தில் காப்பீடு வழங்க திட்டமிட்டதாக தெரிகிறது. முதன் முதலாக ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி பிரதமர் நரேந்திரமோடி சுதந்திரதின உரையில் அறிவித்தபோது இந்த காப்பீடு இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது.

74% கணக்கில் பணம் இல்லை:

ஜன்தன் யோஜனாவில் 7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ரூ.5,400 கோடி டெபாசிட் செய்யப்ப்டடது. கடந்த 7ம் தேதி நிலவரப்படி, இதில் சுமார் 5.3 கோடி கணக்குகளில், அதாவது 74 சதவீத கணக்குகளில் பணம் இல்லை என்று நிதி சேவைகள் துறை புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 4.2 கோடி கணக்குகள் ஊரக பகுதிகளிலும், 2.9 கோடி கணக்குகள் புறநகர்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

-தினகரன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டுதேர்வுகள் பிளஸ்2 விற்கு டிசம்பர் மாதம் 10ம்தேதியும், எஸ்எஸ்எல்சிக்கு டிசம்பர் 12ம்தேதியும் தொடங்குகிறது என  மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புக்கான அரை யாண்டுத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கி றது. இதன்படி 12ம்தேதி தமிழ்முதல்தாள், 15ம்தேதி தமிழ் இரண்டாம்தாள், 16ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 19ம்தேதி கணிதம், 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூகஅறிவியல் பாடங்களுக்குத் தேர்வுகள் நடக்கிறது. காலை 10மணிக்குத் தொடங்கி 12.45மணிவரை நடைபெறும் இந்தத்தேர்வுகளை உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 125பள்ளிகளை சேர்ந்த மாணவியர் எழுதவுள்ளனர்.
அதேபோல பிளஸ்2 அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10ம்தேதி தொட ங்கி 23ம்தேதி வரை நடக்கிறது. இதன்படி 10ம்தேதி தமிழ் முதல்தாள், 11ம் தேதி தமிழ்இரண்டாம்தாள், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 15ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 16ம் தேதி வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவி யியல், 17ம் தேதி கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், அரசியல் அறிவியல், நர்சிங், கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல் உள்ளிட்டப் பாடங்களுக்கும், 18ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்டப் பாடங்களுக்கும் நடக்கிறது.
19ம்தேதி கணினிஅறிவியல், உயிர்வேதியியல், டைப்ரைட்டிங், புள்ளியியல் பாட ங்களுக்கும், 22ம்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 23ம்தேதி உயிரியியல், தாவ ரவியல், வரலாறு, வணிகக்கணிதம் பாடங்களுக்கும் நடக்கிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 1.15 மணிவரை நடைபெறும் இத்தேர்வுகளை 65 மேல்நிலைப்பள் ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.
 தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமைஆசிரியர்கள் செய்து வருகின்றனர் எனத்தெரிவித் துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. மாவட்ட அளவில் கடந்த 11,12,13,14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக நல்லமழை பெய்தது. குறிப்பாக வேப்பந்தட்டை தாலுகாவில் நல்லமழை பெய்தது. இதனால் அரும்பாவூர் பெரிய ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகிய 3 ஏரிகள் கடந்த 14ம் தேதி முதல் நிரம்பி வழிந்து வருகின்றன. நிரம்பி வழிந்த தண்ணீரைக் கொண்டும், ஓடைகளில் வந்து சேர்ந்த தண்ணீரைக் கொண்டும் மேலும் சில ஏரிகள் 100 சதவீதக் கொள்ளளவை எட்டி வருகின்றன.

 இந்நிலையில் கடந்த 16ம்தேதி வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூர் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. அதே போல குன்னம் தாலுகா, வடக்கலூர் ஏரியும் நிரம்பி வழியத் தொடங்கியது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் போலக் காட்சி தரும் மிகப்பெரிய ஏரியான அரும் பாவூர் சித்தேரி நேற்று முதல் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. 52.63 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியஏரி நிரம்பி வழிந்த போது, சித்தேரி 5 சதவீதத் தண்ணீர்கூட நிரம்பாமல் மாடுகள் மேய்ந்த நிலையில் தான் காணப்பட்டது.
 தொடர்ந்து பெரியஏரி தண்ணீரும், வேப்படி பாலக்காடு பகுதி மழை நீரும் வந்து சேர்ந்ததால் நேற்று முதல் அரும்பாவூர் சித்தேரி நிரம்பி வழிகிறது. சித்தேரி 18.11 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். அரும்பா வூர் பெரிய ஏரி, சித்தேரி ஆகிய இரண்டு ஏரிகளின் மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள 228.07எக்டேர் ஆயக்கட்டுபகுதி பாசன வசதி பெற்றுப் பயன் பெறும் வாய்ப்புள்ளது. இதனிடையே தொடர் மழையில் சிறிது தொய்வு ஏற்பட்டு வானம் காய்ந்து கிடப்பதால் நிரம்பும் நிலையில் இருந்த மற்ற ஏரிகள் அப்படியே நின்று விட்டன.
நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எதிர்பார்ப்புகளை ஏமாற்றி மாலையில் லேசான மழை தூறல்கள் மட்டுமே பெய்தது.

-தினகரன்.

வளம் பொருந்திய கோசல தேசத்தை. நந்திவர்மன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல; இவன் வேறு) எனும் மகனும், அழகே  உருவெனத் திகழும் சுகுணா, சுந்தராங்கி என இரண்டு மகள்களும் இருந்தனர். ஒருநாள், இளவரசிகள் இரண்டு பேரும் கானகத்தில் விளையாடச் சென்றார்கள்.  அங்கே, மனத்தை அடக்கியாள்பவரும், பரப்பிரம்ம வஸ்துவும், மகா சாஸ்தாவின் திருவடிகளில் சரணடைந்தவருமான சுவேதபாஜு எனும் முனிவர் தவமிருந்து  வந்தார். அங்கு வந்த சகோதரிகள், அவரைக் கண்டதும் விளையாடுவதை நிறுத்தினார்கள். அவர் தவம் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்  பாவம்... முனிவரின் பெருமையை, மகிமையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அங்கே மரத்தில், அவரின் தலைக்கு நேராக இருந்த தேன் கூட்டைப் பார்த்தார்கள். கற்களை எடுத்து வீசி, தேன்கூட்டைக் கலைத்தார்கள். சடசடவெனப் பறந்த  தேனீக்கள், முனிவரின் உடல் முழுவதும் கொட்டித் தீர்த்தன. இதனால் வலி அதிகமானது முனிவருக்கு. தவத்தில் இருந்து கலைந்து எழுந்தவர், தாங்க முடியாமல்  தவித்துக் கதறினார். தவம் கலைவதற்கும் தேனீக்கள் கலைந்து வந்து கொட்டியதற்கும் காரணமான அந்த இரண்டு பெண்கள் மீதும் கடும் கோபம் கொண்டார்.  அவர்கள் செடிகளாகக் கடவது என்று சபித்தார். அதன்படி சுகுணா என்பவள் நிலத்தில் வாழும் ஜவ்வந்தித் தாவரமாகவும், இளையவள் சுந்தராங்கி நீரில் வாழும்  செங்கழுநீர்த் தாவரமாகவும் பிறந்தார்கள். இதை அறிந்த மன்னர், கலங்கிப் போனார். மகள்களுக்கு இந்தக் கதி நேர்ந்துவிட்டதே! என்று கண்ணீர் மல்கக் கதறினார்.  மனம் வருந்தி, அவர்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினார்.

முனிவரும் மகா சாஸ்தாவை நோக்கித் தவம் செய். நல்லது நடக்கும் என அருளினார். அதையடுத்து, தன் மகன் பீமனுக்கு முடிசூட்டிய மன்னன், ராஜ  வாழ்க்கையைத் துறந்து, கானகத்தை அடைந்து, வெறும் காற்றை மட்டுமே உட்கொண்டு, சாஸ்தாவை நோக்கிய தவத்தில் மூழ்கினான். அவனது தவத்தில்  மகிழ்ந்த சாஸ்தா, யானை மீது அமர்ந்தபடி வந்து, அவனுக்குத் திருக்காட்சி தந்தருளினார். உன் தவத்தில் மகிழ்ந்தேன். முனிவரின் சாபம் உன் மகள்கள் இரண்டு  பேருக்கும் வரமாக அமையட்டும். அதாவது, ஜவ்வந்திப் பூவாகவும் செங்கழுநீர்ப் பூவாகவும் மாறியிருக்கிற உன் மகள்கள், இனி என் பூஜையில் கட்டாயம்  இடம்பெறுவார்கள். இந்த மலர்களைக் கொண்டு என்னை அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலனையும், ஹோமங்கள் வளர்த்த புண்ணியத்தையும்  தந்தருள்வேன் என்றார். 

-தினகரன்.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அதுமட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.

பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். இதனை எப்போதும் செய்து கொண்டு இருக்க முடியாது என்பதற்காக, வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.


-தினகரன்