Friday 26 September 2014


சிமென்ட் விலை உயர்வால் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சலுகை விலையிலான "அம்மா' சிமென்ட் விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீடு கட்டும் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன். அதன்படி, மலிவு விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும். இந்த சிமென்ட் மூட்டைகள் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டைக்கு ரூ. 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.
இந்த சிமென்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.
ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல-மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிடங்குகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.
பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.220 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
அம்மா சிமென்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் மாதமொன்றுக்கு சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதத்துக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது. இது தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த சிமென்ட்டில் நான்கில் ஒரு பங்காகும்.
அண்டை மாநிலங்களிலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திரத்திலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.80 முதல் ரூ.100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
இது இப்போது மூட்டைக்கு ரூ.310 என்ற அளவில் ஆந்திரத்தில் இருந்து விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமென்ட் அளவு மாதத்துக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது.
இது முந்தைய வருகையில் 35 முதல் 60 சதவீதம் மட்டுமே ஆகும். இது தமிழகத்திலுள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது.
சிமென்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் அம்மா சிமென்ட் திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

-தினமணி.

0 comments:

Post a Comment