Friday 24 March 2017


தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை, அரியலூர் கலெக்டர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவரே முன்னின்று ஏரியைத் தூர்வாரவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது, கலெக்டருக்கு  தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. இவரைப் பாராட்டி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களில் செய்திகள் இரண்டு நாளாக வந்துகொண்டிருக்கின்றன.
அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் அருகே, மருக்காலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களா ஏரி. இதைக் காணவில்லை என்று கடந்த வருடம் ஜூலை மாதம் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளார்கள் கிராம மக்கள். அதன் அடிப்படையில் ஏரியைக் கண்டுபிடித்துள்ளார், கலெக்டர்.


ஏரியைக் காணோம் என்று புகார் கொடுத்த உதயகுமாரிடம் பேசினோம். "மங்களா ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தக் காலகட்டத்தில், இந்த ஏரியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல வரத்து வாய்க்கால்கள் சரியாக இருந்ததால், மழைநீர் ஏரியில் கலந்ததால், வற்றாத ஏரியாக இருந்துள்ளது. இருபோகம் விவசாயம்செய்து, எங்கள் பகுதி செழுமையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது. காரணம், இந்த ஏரியை 50 வருடங்களாகத் தூர்வாராமல் விட்டதால், ஏரி தூர்ந்துபோய், சரிசமமான கட்டாந்தரையாக மாறிவிட்டது. ஒரு சிலர், இந்த இடத்தைச் சரிசெய்து விளைநிலங்களாக மாற்றி, பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருசில கட்சிப் பிரமுகர்கள், ஆளுக்குஆள் இடத்தை அபகரித்துக்கொண்டு, வீடு கட்டவும் தொடங்கினார்கள். இதை எதிர்த்து, நாங்கள் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், எங்களை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டினார்கள். அதன் பெயரில், கடந்த ஆண்டு ஏரியைக் காணோம் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவரும் எங்க முன்பே இதை உடனடியாக விசாரித்துத் தகவல் சொல்லுங்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அது மட்டுமில்லாமல், இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு விசாரித்ததில், 6 ஏக்கருக்கும் மேல் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து, ''ஏரியின் இடத்தை அபகரித்துள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியும். இருந்தாலும் உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். நேற்று, 'தண்ணீர் தினம்' என்பதால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு, கலெக்டரே வந்து நின்று ஏரியைத் தூர்வாரவும் உத்தரவிட்டார். உடனடியாக ஜே.சி.பி எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது. இந்த ஏரி, முறையாகத் தூர்வாரி விவசாய பயன்பாட்டுக்கு வந்தால், வடவீக்கம், மருக்காலங்குறிச்சி, தண்டலை, மா மங்களம், வடுகர் பாளையம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைவதோடு 86 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பயன்தரும். கலெக்டர் முயற்சியால் எங்க ஊர் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போகிறது" என்றார்.

பெரம்பலூர் அருகே தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - ரோவர்  கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தனியார் கல்லூரிகளின் பஸ்கள்
பெரம்பலூர் அருகே துறையூர் மெயின்ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி உள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ரோவர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை அந்த பகுதிகளை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு 2 கல்லூரிகளின் பஸ்களும் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தன.
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் பகுதியில் உள்ள அருமடல் பிரிவு ரோட்டில் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி பஸ் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றியது. பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டபோது, பின்னால் வந்த ரோவர் கல்லூரி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய பஸ்சின் முன்புறத்தில் அமர்ந்திருந்த மாணவிகள் சிலர், கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் சில மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
மாணவ, மாணவிகள் படுகாயம்
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் நின்ற 2 பஸ்களையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பெரம்பலூர் அருகே துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியில் படிக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியவெண்மணியை சேர்ந்த மணிகுயில்(வயது 20), புதுவேட்டக்குடியை சேர்ந்த கவுசல்யா(19), நல்லறிக்கையை சேர்ந்த செல்வராணி (20), கோவில்பாளையத்தை சேர்ந்த அறிவுக்கொடி (20) உள்ளிட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தண்ணீர்பந்தலில் உள்ள ரோவர்  கல்லூரியில் படிக்கும் சின்னவெண்மனியை சேர்ந்த சாத்தபிள்ளை (20), காரைப்பாடியை சேர்ந்த மாயவேல் (20) உள்பட 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விபத்தில் படுகாயம் அடைந்திருப்பதும், மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிலர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஓடி வந்தனர். மாணவ, மாணவிகள் அங்கு நலமுடன் இருப்பதை கண்ட பின்னரே அவர்கள் நிம்மதியடைந்தனர். விபத்தில் காயடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினர்.
இதற்கிடையே பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவகுமார் விசாரணை நடத்தினார். விபத்து குறித்து தனியார் கல்லூரி பஸ்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 டிரைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர்.
டிரைவர் கைது
இதனை தொடர்ந்து பெரம்பலூர்– துறையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீநிவாசன்க கல்லூரியின் பஸ் டிரைவர் குன்னம் தாலுகா காரைப்பாடியை சேர்ந்த ராஜதீரனை(27) மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மற்றொரு பஸ்சின் டிரைவரான நம்மக்கோணம் பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் (30) போலீசாரிடம் கூறுகையில், அருமடல் பிரிவு ரோடு பகுதியில் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ்சை எடுத்தபோது குறுக்கே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததாகவும், இதனால் திடீரென பிரேக் போட்டவுடன் பின்னால் வந்த பஸ் மோதிவிட்டதாகவும், தெரிவித்தார். 2 கல்லூரி பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ, மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thursday 23 March 2017


பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். சி, நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையிலுள்ள கையெழுத்து ஒப்பாகவில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனம், ஜெயந்தி அனுப்பிய ரூ.16,618ஐ, அபராதத் தொகையாக ரூ.135 ஐயும் சேர்த்து ரொக்கமாகத் தரும்படி வலியுறுத்தியது. தனது வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்குப் பணம் இருப்பு வைக்கப்பட்டி ருந்தும், குறிப்பிடத்தகுந்த காரணமின்றி, சேவைக் குறைபாடு செய்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, கடந்த 2012 ஜனவரி 23ம் தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். நேற்று நீதிமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட் சுமி ஆகியோர் முன்னிலையில் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி கலியமூர்த்தி, சம்மந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர், ஜெயந்தியின் மனஉளைச்சலுக்கு இழப்பீடுத் ரூ.10 ஆயிரத்தையும், வழக்கு செலவுக்காக ரூ. 3ஆயிரம் என மொத்தம் ரூ. 13ஆயிரத்தை வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டார்.

பெரம்பலூர்-:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது :நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும். இதன்மூலம் தரமான உணவுப் பொருட் களைத்தான் பயன்படுத்துகிறோமா என்ற விழிப்புணர்வு நம்மிடையே உருவாக வேண்டும். மேலும், கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர வேண்டும். 

எனவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர் அனைவரும் தங்கள் பள்ளி களில் பயிலும் சக மாணவ,மாணவிகளும் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப் பொருட்களை உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். வெளியூர் செல்லும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் தங்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் சுகாதாரமான உணவகங்கள் மூலமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) துரை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்ட மைப்பின் நிர்வாக செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் எசனை கிராமம் அருகே உள்ள கீழக்கரைஏரி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்குள் நேற்று காலை அழகான புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் பாறையில் மோதியதில் அந்த மான் பலத்த காயம் அடைந்தது. மேலும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் செந்தில்குமார் உள்பட தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மீட்பு
பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த மானை லாவகமாக பிடித்து வலையில் கட்டி கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த மான் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வனச்சரகர் ரவீந்திரன் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மானை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது அது 2½ வயதுடைய பெண் மான் என்பது தெரியவந்தது.
மேலும் நாய்கள் துரத்தியதால் அந்த மான் தவறி கிணற்றுக்குள் விழுந்ததா? அல்லது தண்ணீர் தேடி வந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்த அந்த புள்ளிமானுக்கு எசனை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மான் பேறையூர் வனப்பகுதியில் விடப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tuesday 21 March 2017


பெரம்பலூர் மந்திரவாதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித மண்டை ஓடுகள், சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் வீடு எடுத்து தங்கி, மகாகாளி உக்கிர பூஜை நடத்த இளம்பெண் உடலை தோண்டி எடுத்து வைத்திருந்ததாக மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மந்திரவாதி கார்த்திகேயன் (வயது 31), அவரது மனைவி நசீமா (21) உள்பட 6 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். ஆவிகளுடன் பேசுதல் உள்ளிட்டவற்றுக்காக பெண்ணின் உடலை வைத்திருந்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான வேலைகளில் கார்த்திகேயன் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கார்த்திகேயனின் வீட்டில் இருந்து மனித மண்டை ஓடுகள், வசிய மை டப்பாக்கள், சாமி சிலைகள் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியவகை உயிரினமான கடல்குதிரைகளையும் கைப்பற்றினர். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 30 கடல்குதிரைகளை வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோர்ட்டில் ஒப்படைப்பு
இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார், மந்திரவாதி கார்த்திகேயனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நேற்று கொண்டு வந்தனர். பின்னர் இவ்வழக்கின் ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கோர்ட்டு பணியாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை அவர்கள் சரிபார்த்தனர்.
20 மனித மண்டை ஓடுகள், பித்தளை விநாயகர் சிலை, மரத்தால் ஆன காளி சிலை, மண்டை ஓட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள், 10 வசிய மை டப்பாக்கள், 7 வசியப்பொடி டப்பாக்கள், இளம்பெண்ணின் உடலை அடைத்து வைத்திருந்த மரத்தால் ஆன சவப்பெட்டி, இளம்பெண்ணின் உடலை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் கவர்-துணிகள், தாமிர தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார் ஆகியவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாந்திரீகத்திற்காக கார்த்திகேயன் பயன்படுத்திய மண்டை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை எங்கிருந்து அவர் பெற்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் போலீசார் கோர்ட்டில் விளக்கம் அளித்தனர்.

Monday 20 March 2017



பெரம்பலூர் 4ரோடு மின்நகரில் வசிப்பவர் துரைசாமி. மின்வாரியத்தில் உதவி நிர் வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் 2வது மகன்தான் சதீஸ்குமார். எம்சிஏ படித்து சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். 2013 ஜூன் 5ம்தேதி கொளத்தூர் பஸ்டாப்பில் நண்பருடன் நடந்து சென்றபோது இருசக் கர வாகனம் மோதி கீழே விழுந்து தலை யில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென் றார்.
பதறியடித்தபடி சென்னைக்கு ஓடிய பெற்றோர் மகனை காப்பாற்ற சென்னை யிலும் திருச்சியிலும் என 7மாதங்கள் மருத்துவ மனையிலேயே வைத்திருந்து சிகிச்சை மேற்கொண்டும் நினைவு திரும்ப வில்லை. மருத்துவத்தின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி விட்டோம். இனி ஆண்டவன் நினைத்தால் மட்டுமே சதீஸ்குமாரை நினைவு திரும்பச் செய்ய முடியும் எனக்கூறி மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர். இதனால் 4வரு டங்களாக வீட்டிலுள்ள ஒரு அறையை மருத்துவ மனையைப்போல் ஆக்கி மகனை பாதுகாத்து வரும் பணிகளை பெற்றோர்கள் சளைக்காமல் செய்து வருகின்றனர்.

கழுத்துவழியாக மெட்டல் டியூப் பொருத்தி சுவாசம், மூக்குவழியாக திரவ உணவு, இடுப்பு வழியாக சிறுநீர் வெளியேற்றம் இவையெல்லாம் பராமரிப்பது தாய் மகா லட்சுமிதான். 4ஆண்டு கோமா நிலையில் இருப்பதே முற்றிலும் தெரியாதபடிக்கு தினமும் உடலை டவல் பாத் முறையில் சுத்தம் செய்வது, தலை முடியை டிரிம் செய்வது அனைத்தும் பாசமுள்ள தாய்க்குப் பழகிவிட்டது. தனக்கு வழங்கும் பழச்சாரின் சுவை தெரியாதது மட்டுமல்ல தான் உயிரோடு இருப்பதையே அரிய முடியாதபடியும், தாயின் ஸ்பரிசத்தை உணர முடியாத நிலையிலும் தான் சதீஸ்குமார் படுக்கையில் உள்ளார்.
அவருக்கு பிரசர் பரிசோதிக்கவும், உட லின் வெப்பத்தைப் பரிசோதிக்கவும் வீட்டிலேயே வசதி செய்து, மகன் தும்மி னால்கூட துடித்துப் போகும் தாயின் துணையுடன் பாதுகாப்பாக பராமரிக்கப் பட்டு வருகிறார். விபத்து இழப்பீடு கோரிய வழக்கு விசாரணைக்கு பெரம்பலூர் நீதி மன்றத்திற்கு ஸ்ட்ரெக்சரில் கொண்டு செல்லப்பட்ட சதீஸ்குமாரைப் பார்த்து, தனது இருக்கையை விட்டுக் கீழிறங்கி வந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸீமா பானு, தாயின் பணிகளை நினைத் துக் கண்கலங்கியுள்ளார்.
அந்தக் கண்ணீரின் அர்த்தம் அவரது தீர்ப்பிலும் தீர்க்கமாய் தெரிகிறது.காணும் கடவுளைப் போன்ற மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், வாழும் வயதுடைய சதீஸ்குமாரை வைத்துக் கொண்டு, ஐம்பது வயதுகளைக் கடந்துவிட்ட பெற்றோர்க ளின் அளப்பரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நீதிபதியும் இதுவரை சொல்லாதபடிக்கு ரூ1கோடியே 4 லட் சத்து 16 ஆயிரத்தை இழப்பீட்டுத் தொகை யாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
31வயது இளைஞனை 3மாதக் குழந்தை யாக பாவிக்க பாசமுள்ள தாயால் மட்டுமே முடியும். ஆண்டவன் மனதுவைத்தால் தான் சதீஸ்குமார் நினைவு திரும்புவார் என்கிறது மருத்துவத் துறை. மனது வைக் காமலா மகாலட்சுமியை தாயாகக் கொடுத் திருப்பார்.