Saturday 4 October 2014


இவர்களை எப்படி கையாலளாம் என்று அமெரிக்கா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக் மற்றும் சிரியா பாலைவனங்களில் பொதுமக்களின் தலை அறுபட்டுக்கொண்டிருக்கிறது.
எதிரிகளை நிர்வாணமாக்கி கொத்து கொத்தாக கொல்வது; பிடிபட்ட கைதிகளை கதறக் கதற கழுத்தை அறுத்து கொல்வது; பெண்களை சிறைபிடித்து கற்பழிப்பது, அடிமைகளாக்குவது போன்ற இவர்கள் செய்யும் நல்ல காரியங்களால் உலகமே இவர்களை வாய்பிளந்து பார்க்கிறது. இவர்கள், தாங்கள் செய்யும் கொடூர செயல்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை, வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது தலைகளை அறுத்து, அதை படம்பிடித்து இணையத்தில் வெளியிடுவதின் மூலம் உலக மக்களிடையே இவர்கள் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளார்கள். அமெரிக்காவை அச்சத்தில் ஆழ்த்திய அல் கொய்தாவே, இவர்களை மிகவும் மோசமானவர்கள், அதீத வன்முறையில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி இவர்களிடமிருந்து விலகி இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஐ.நா சபையும், அமெனஸ்டி சர்வதேச அமைப்பும், இவர்கள் அதிக ப்படியான மனித உரிமை மீறல்கள் புரிந்திருப்பதாக/புரிந்துகொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன . ஆனால் அகில உலகமும் இவர்களை ஒன்றுமே செய்யாமல்/செய்யமுடியாமல் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

யார் இவர்கள்?
2003 ஆம் ஆண்டில் ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அதில் சதாம் ஹுசைன் தோற்றுப்போனார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார். சதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஈராக் நாட்டில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக அபு முசாப் அல் சர்காவி (Abu Musab Al Zarqawi) என்பவன் தாக்குதல்கள் பல நடத்தினான். சர்காவி தன் போராட்டித்திற்காக டான்ஸிம் கொய்தத் அல் ஜிஹாத் பிலாத் அல் ரபிதாயின் (Tanzim Qaidat al-Jihad fi Bilad al-Rafidayn) என்ற வாயில் நுழையாத பெயர் கொண்ட ஒரு போராட்டக் குழுவை உருவாக்கினான். 2006 ஆம் ஆண்டு, சர்காவி அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் மாண்டு போனான்.
பின்னார் சர்காவி தோற்றுவித்த போராட்டக் குழு, முஜாஹிதின் ஷுரா சபை (Mujaheedin Surah Council) என்ற தீவிரவாதக் குழுவுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ (ISI – Islamic State of Iran) என்று பெயர் மாற்றம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு, ஈராக் நாட்டை விட்டு அமெரிக்க இராணுவம் தன் படைகளை திரும்பப் பெற்ற பிறகு ஐ.எஸ்.ஐ பலம் பெற்றது. ஈராக் நாட்டில் உள்ள பிரபல அபு காரிப் சிறைச்சாலையை தாக்கி அங்கிருந்து 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஐ.எஸ்.ஐ கூட்டிச் சென்றது.

ஐ.எஸ்.ஐ ஈராக் நாட்டின் வட மேற்குப் பகுதிகளை தன் வசமாக்கிக் கொண்டது. இதற் கிடையில், 2010 - 2011 ஆம் ஆண்டுகளில் பல மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள மக்கள் அவர்களது அதிபர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இந்த கிளர்ச்சிக்கு ’அரேபிய எழுச்சி’ என்று பெயர். அரேபிய எழுச்சியில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று.சிரியா நாட்டில் பல குழுக்கள் அந்நாட்டின் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு குழுவும் தங்கள் கைவசம் சில பகுதிகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். சிரியா, ஈராக் நாட்டின் அருகாமையில் அதன் மேற்கு பகுதியில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு, ஐ.எஸ்.ஐ சிரியாவின் கிழக்குப் பகுதிகளில் நுழைந்து அவற்றை தன் வசமாக்கிக் கொண்டது.
ஐ.எஸ்.ஐ தன் ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக் நாட்டின் வட பகுதிகளையும், சிரியா நாட்டின் கிழக்குப் பகுதிகளையும் சேர்த்து ஒரு தேசத்தை உருவாக்கியது. அந்த தேசத்திற்கு சூட்டப்பட்ட பெயர்தான் ISIS – (Islamic State of Iraq and Syria). ISIS-ஐ உலக நாடுகள் எதுவும் அங்கீகரிக்கவில்லை. ஐகுஐகு நாட்டின் தீவிரவாதிகள், மன்னிக்கவும் ஆட்சியாளர்கள் அந்த நாட்டின் பெயரிலேயே அடையாளம் காணப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள்.
ISIS இயக்கத்தவர்கள் வஹாபிஸத்தை (இஸ்லாமிய பழமைவாதம்) கடைபிடிப்பவர்கள். இஸ்லாம் மார்க்கத்தில் எந்த புதுமையையும் உட்புகுத்தக்கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். முஸ்லீம் மதத்தின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமில் இருக்கும் ஷியா மற்றும் இன்ன பிற பிரிவுகளை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சுன்னியைத் தவிர ஏனையப்பிரிவுகள் இஸ்லாமிற்கு எதிரானது என்று கருதுபவர்கள். இஸ்லாம் மதத்தை அதன் பழைய உன்னத நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது இவர்களது நோக்கம். உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யவேண்டும் என்பது இவர்களது கொள்கை.
ISIS -ன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி. இவர் தன்னை காலிஃப் என்று சமீபத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார். அதாவது இஸ்லாமிய நாடுகளின் அரசியல் தலைவர் மற்றும் மத குருமார். முதல் உலக யுத்தத்திற்கு முன்பு, ஒட்டமான் துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் அரசர்தான் காலிஃபாக இருந்தார். முதல் உலக யுத்ததில் துருக்கி நாடு அடைந்த தோல்வியையடுத்து, காலிஃப் பதவி காலியாகிவிட்டது. அந்த காலிஃ பதவியை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதற்காக காந்தியின் தலைமையில் கிலாஃப்த் இயக்கம் 1920-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்று ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பது பலருக்குத் தெரியாது. துருக்கி நாட்டில் காலியாகிப் போன காலிஃப் பதவிக்கு இந்தியாவில் போர்க்கொடி தூக்கி பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளுக்கு காரணமாக இருந்த உத்தமர் காந்தியை என்னவென்று சொல்வது?
ISIS -க்கு ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மொத்தமாக 80,000 போராளிகள்/போர் வீரர்கள் இருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது. இதில் வெளிநாட்டு இஸ்லாமியப் போராளிகளும் அடக்கம். செச்சன்னியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஐகுஐகு -ல் திருப்பணி செய்கிறார்கள். இந்தியாவிலிருந்தும், ஏன் தமிழகத்திலிருந்தும் கூட ISIS சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள பல இஸ்லாமிய இளைஞர்கள் ஆர்வம் காட்டிய/முயற்சி செய்த செய்திகள் ஊடகங்களிலும், இணையத்திலும் வெளிவந்திருக்கிறது.
காலிஃப் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் ஒரு அமைச்சரவை செயல்படுகிறது. அவருக்கு ஆலோசனை சொல்ல 12 கேபினட் அமைச்சர்கள் இருக்கிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நிதித்துறை , நீதித்துறை, காவல் துறை, இராணுவம் என பல துறைகள் ISIS -ல் செயல்படுகின்றன. ஷரியத் படிதான் நீதிபரிபாலனம் செய்யப்படுகிறது. ஈராக் நாட்டின் வட பகுதிகளில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் ISIS -ன் வசம். அதன் மூலமாக ஐகுஐகு -க்கு கொள்ளைப் பணம் கிடைக்கிறது. இதை தவிர ISIS -ஐ சேர்ந்த போராளிகள் அவ்வப்பொழுது ஈடுபடும் கொள்ளை, கடத்தல் இவைகளின் மூலமகாவும் ISIS -ன் கஜானா நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக இன்று உலகிலேயே அதிக வருவாய் கொண்ட ஜிஹாத் இயக்கம் என்ற பெருமையை ISIS பெற்றிருக்கிறது.
ISIS ஆட்சிப் பகுதிகளில் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணியவேண்டும், வெளியில் செல்லக்கூடாது; இசை, நாட்டியம் அனைத்திற்கும் தடா; வீட்டில் புகைப்படம் வைத்திருத்தல் கூடாது; புகைப்பிடித்தலும் கூடாது; குழந்தைகளுக்கு கட்டாயம் மதக் கல்வி போதிக்கவேண்டும்; அவர்களுக்கு தப்பித் தவறி கூட அறிவியல், கணிதம், இலக்கியப் பாடங்களை கற்பித்தல்கூடாது. டார்வினின் பரிணாமக் கொள்கையாவது, நியூட்டனின் புவியீர்ப்பு கொள்கையாவது, திருகுரான் முன்னர் அவைகள் அனைத்தும் குப்பைகள் என்பன போன்ற பல நல்ல திட்டங்களை ISIS வகுத்து, அதை தன் மக்களிடையே கட்டாயமாக்கி வருகிறது.
இவைகளைத் தவிர ISIS -ன் ஆட்சி பகுதிகளின் உள்ளேயும், வெளியேயும் களையெடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், குர்து இன மக்கள், எஸ்தி இன மக்கள் என அனைவரும் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டு அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் வீட்டுப் பெண்கள் போராளிகளுக்கு சுழற்சி முறையில் விருந்தாக்கப்படுகிறார்கள்.
சுன்னி பிரிவைச் சேராதவர்களுக்கு ISIS வகுத்த மூன்று நிபந்தனைகள்,
1) மதம் மாறிவிடு, அல்லது
2) ஜிஸ்ஸியா (தலைவரி) செலுத்தி திம்மியாக இரு,அல்லது
3) செத்து மடிந்து விடு.  trdrbb
ISIS -ன் கொடுமைகள் தாளாமல் பெருவாரியான மக்கள்
இவர்களது ஆளுகையை விட்டு தப்பிப் பிழைத்து அருகிலிருக்கும் நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். ஆனால் ISIS இவர்களை விடுவதாக இல்லை. எல்லையைத் தாண்டி, இவர்களைத் தொடர்ந்து, தொடர் அட்டூழியங்கள் புரிகின்றனர்.
உலக நாடுகளுக்கு இன்று ஐகுஐகு சவாலாக இருப்பதற்கு காரணம், அதனுடைய பணபலமும், உலகளவில் அதில் இணைந்து கொள்ளத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகளும் தான். ஒசாமா பின் லேடனின் அல் கொய்தாவிற்குப் பிறகு, அபு பக்கர் அல் பக்தாதியும், ISIS-ம் அமைதி மார்க்கத்தை தங்களுடைய பயங்கரவாதத்தால் பரப்பி, உலகில் மயான அமைதியை ஏற்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

- sp chokkalinkam

Friday 3 October 2014


நாக்பூர்: ''தமிழகத்தில், ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் அதிகரித்து விட்டன; அதை தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், மோகன் பாகவத் ஆற்றிய உரை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் ஏற்படுத்தும் விதத்தில் பதக்கங்கள் குவித்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்த ஆண்டு. ராஜேந்திர சோழன் ஆட்சியின் ஆயிரமாவது ஆண்டு இது.
மேற்கத்திய நாடுகளின் சுய நலக் கொள்கைகளால், ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகள், மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பயங்கரவாதத்தை வேருடனும், வேரடி மண்ணுடனும் அகற்றாத வரை, ஆங்காங்கே இதுபோன்ற பயங்கரவாதிகளும், இயக்கங்களும் தோன்றத் தான் செய்யும். இவற்றை அழிக்க ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த முயற்சி அவசியம். நாட்டின் உள்ளேயும், வெளியிலும், சில சக்திகள், இந்த நாட்டை சீர்குலைக்க வேண்டும் என திட்டமிட்டு செயலாற்றுகின்றன; மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதை ஆட்சியாளர்கள் விழிப்புடன் கண்காணித்து தடுக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் கேரளாவில், ஜிஹாதி என்ற பெயரில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. அந்த நடவடிக்கைகளை தடுக்க, அங்கு பெரிய அளவில் எந்த முயற்சியும் இல்லை. அந்த மாநிலங்களின் கடற்கரை கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. மேற்கு வங்கம் மற்றும் அசாமில், அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து குறிப்பிட்ட மதத்தினர் அதிகமாக ஊடுருவி, இந்த மாநிலங்களில் உள்ள மக்கள்தொகையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நக்சல் தீவிரவாதம் மற்றும் ஜிஹாதி பய ங்கரவாதத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தடுக்க வேண்டும். இவ்வாறு, மோகன் பாகவத் பேசினார்.

அவரின் உரையை, தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தூர்தர்ஷன் தலைமை இயக்குனர், அர்ச்சனா தத்தா கூறும் போது, ''இது எங்களைப் பொறுத்த மட்டில் ஒரு செய்தி தான். இதற்காக நாங்கள் எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை,'' என்றார்

விஜய தசமி நாளில் பிரதமர் மோடி, முதன் முதலாக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நாம் ஒரு அடி முன்னேறினால் நாடு 125 கோடி அடி முன்னேறும்’’ என்றும், அனைவரும் கதர் துணி வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
வானொலியில் மோடி பேச்சு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதன் முதலாக அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
இன்று (நேற்று) விஜயதசமி. விஜயதசமி, தீமையை நன்மை வெற்றி கொண்ட நாள். இந்த நாளில் உங்கள் அனைவருடனும் என் மனதில் உதிக்கும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல் வானொலி உரையை உங்களிடையே தொடங்கி இருக்கிறேன்.
எதிர்காலத்திலும் நான் மாதத்தில் 2 அல்லது ஒரு நாளை ஒதுக்கி உங்களுடன் வானொலி மூலம் பேசுவேன். அது ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியாக இருக்கும்.
அழுக்கை, குப்பையை ஒழிப்போம் மும்பையில் இருந்து கணேஷ் என்பவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
அதில் அவர், இந்த நன்னாளில் நம்முடைய மனங்களில் உறையும் குறைந்தது பத்து வகையான அழுக்குகளை நீக்க நாம் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று எழுதி இருக்கிறார். இந்த விஜயதசமி நன்னாளில் அழுக்கையும், குப்பைகளையும் முற்றாக ஒழிப்பதில் நாம் வெற்றி காண்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.
‘தூய்மை இந்தியா’ திட்டம் மகாத்மா காந்தி பிறந்த நன்னாளில் 125 கோடி இந்திய மக்கள் இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் இதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நேற்று இந்த திட்டத்தை தொடங்கியபோது ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். 9 முக்கிய பிரமுகர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும். அந்த 9 பேரும் மேலும் 9 பேரை இதே போல செய்வதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். நீங்களும் இதில் கலந்து கொள்ளுங்கள். நீங்களும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உங்களுக்கு பரிச்சயமான 9 பேரை இதே போன்ற பணியில் ஈடுபடுவதற்கு அழைப்புவிடுங்கள். அதிக தூரம் எல்லாம் போகவேண்டாம். உங்கள் அருகில் உள்ள நண்பர்களிடம் கூறுங்கள். அவர்கள் மேலும் 9 பேரிடம் எடுத்துச் சொல்லட்டும். அந்த 9 பேர் மேலும் 9 பேரிடம் எடுத்துச் சொல்லட்டும். இப்படி மெல்ல மெல்ல இத்தேசம் முழுதும் சுத்தமான ஒரு சூழல் உருவாகும். இந்த பணியை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கதர் வாங்குங்கள் மகாத்மா காந்தியைப் பற்றி பேசும்போது கதர் பற்றி பேசவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குடும்பங்களில் பலவிதமான ஆடைகளும், பலவிதமான துணி வகைகளும் பல்வேறு நிறுவனங்களின் துணிவகைகளும் இருக்கலாம். அவற்றில் ஒன்றாக கதர் ஏன் இருக்கக் கூடாது?
குறைந்தது ஒரு கைக்குட்டை அல்லது துண்டு, போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை அல்லது திரைச்சீலை என்று ஏதாவது ஒன்றாவது கதர் துணியில் இருக்கட்டும். நீங்கள் கதர் துணியை வாங்கும்போது ஒரு ஏழையின் வீட்டில் தீபாவளி விளக்கு எரிகிறது. இதனை செய்து பாருங்கள்.
வலிமையே வரம் 125 கோடி இந்தியர்கள் அளவற்ற திறன் மற்றும் வலிமையை வரமாக பெற்றவர்கள்.
நம் விஞ்ஞானிகள் நம்முடைய வல்லமையை நிரூபித்து இருக்கிறார்கள். மிகவும் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறார்கள். மங்கள்யான் திட்டம் நம்முடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திட்டமாகும். நமக்கு தேவையானது எல்லாம் நம்முடைய வலிமையை நாம் சரியான முறையில் புரிந்துகொள்வதுதான்.
மாற்றுத்திறனாளிகள் மின்னஞ்சல்கள் வழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பலரும் என்னை தொடர்பு கொண்டு எழுதுகிறார்கள். கவுதம் பால் என்று ஒருவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி எனக்கு எழுதி இருக்கிறார்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் நாம் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் எழுதியதை உண்மையாகவே நான் மிகவும் விரும்பினேன்.
முதல்–மந்திரியாக இருந்தபோது... நான் குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்தபோது ஏதென்ஸ் மாநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சென்றார்கள். வெற்றியுடன் திரும்பி வந்தார்கள். அந்த குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் 2 மணி நேரம் செலவழித்தேன். அது என் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாகும்.
இந்த தேசம் அனைவருக்கும் சொந்தமானது. வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் மக்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.
நல்ல ஆலோசனை குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்த பாடங்களை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என்று மக்கள் பலரும் எனக்கு மின்னஞ்சலில் எழுதி இருக்கிறார்கள். இது நல்ல ஆலோசனை.
நீங்கள் அனைவரும் இதுபோன்ற நல்ல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல சம்பவங்களை, உண்மையாக நடந்த சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் அதை நாட்டு மக்கள் அனைவருடனும் நான் பகிர்ந்துகொள்வேன்.
சேவை செய்வோம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்து நம்முடைய தாய்த் திருநாட்டுக்கு சேவை செய்வோம். நம்முடைய அற்புதமான நாட்டை மேலும் உயர்த்துவோம். புதிய சிகரங்களை நோக்கி நாட்டை அழைத்துச் செல்வோம்.
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அடிகளை எடுத்து வைப்போம். நாம் அனைவரும் ஒரு அடி முன்னேறினால் இந்த நாடு 125 கோடி அடி முன்னேறும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

-தினத்தந்தி.




பிரிட்டிஷ் பிணைக்கைதி ஆலன் ஹென்னிங் தலையை துண்டித்து கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சிரியா, ஈராக்கில், சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஒன்றை பிரகடனம் செய்து, தன் ஆதிக்கக்கொடியை அந்த இயக்கம் நாட்டி வருகிறது. தனது சக சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும், குர்து இன மக்களுக்கும் கூட இந்த இயக்கம் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

ஈராக்கில் இந்த தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது போரில் உலக நாடுகள் ஒன்று திரண்டு கை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, பிரான்சு, பிரிட்டன், இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி என 30க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகள் தாக்குதலில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்நாடுகள் தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் பிரிட்டிஷ் பிணையக்கைதியான ஆலன் ஹென்னிங் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஆலன் ஹென்னிங்கை தீவிரவாத குழு, பாறை முழங்காலில் நிற்கவைத்து தலையை துண்டித்து கொலை செய்துள்ளது. ஆலன் ஹென்னிங்கை கொலை செய்தவற்கு முன்னதாக பிரிட்டிஷ் நாட்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான அறிக்கையை வாசிக்க கூறியுள்ளனர். அடுத்ததாக அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் காஸ்சிக்கை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் மிரட்டியுளனர்.

கொலை செய்யப்பட்டுள்ள ஆலன் ஹென்னிங் (வயது 47) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வடமேற்கு சிரியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருந்து எடுத்து சென்ற போது துப்பாக்கி ஏந்திய ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைய கைதிகளாக பிடிக்கபட்டார்.  ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்களான ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பின்னர் டேவிட் ஹெய்ன்ஸ் (வயது  44) என்ற இங்கிலாந்து பிணைக்கைதியையும் கொன்றனர். தற்போது ஆலன் ஹென்னிங்கையும் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா கொலையாளியை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று சபதம் தெரிவித்துள்ளது.

-தினத்தந்தி

Thursday 2 October 2014

      வெற்றித்திருனாளான ஆயுத பூஜை வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை சாமிக்கு படைப்பதில் தொடங்கி , அடிப்படையில் விவசாய சமுதாயமாக வாழும் நம் ஊர் மக்கள் தங்கள் கத்தி, அரிவாள், உழவுப்போருட்கள், ஏர் , கலப்பை , தாங்கள் பயன்படுத்தும் வாகனம் முதற்கொண்டு கழுவி சுத்தப்படுத்தி பொட்டு இட்டு வணங்கி வருகிறார்கள்.

கடைத்தெருவில் மாவிலை தோரணம் கட்டி கடை வாசலில் வாழை மரம் கட்டி போவோர் வருவோருக்கு பொரிக்கல்லை சுண்டல் வழங்கி ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பட உதவி - சுரேஷ் அய்யாசாமி.

மாலை வேளையில் தயாராகும் வாழை மர அலங்காரம்
இரவு நேரத்தில்  ஜொலிக்கும் வ.களத்தூர்
கோவிந்தசாமி ஆசிரியர் ஜவுளிக்கடை முன்பு.
அய்யர் கடை படையல்
அடகுக்கடை அலங்காரம்
பொரிக்கல்லை சுண்டல் வழங்கும் நம் சொந்தங்கள்

காலையில் வ.களத்தூர் சிவன்கோவில் உழவாரப்பணி.
வ.களத்தூர் கடை வீதியில் ஜொலிக்கும் முத்து வீடியோ கடை
வ.களத்தூர் வன்னாரம்பூண்டி அய்யாசாமி மர இழைப்பக ஆயுதங்கள் படையலுக்கு தயாராக.
வன்னாரம்பூண்டியில் ஆயுத பூஜை விழா...




காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை
Liquer3
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?
-என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், இந்த டாஸ்மாக் நிறுவனம், அரசின் சுங்கவரி மற்றும் மதுவிலக்குத் துறையால் தான் நிர்வகிக்கப்படுகிறது!
மது விற்பனையால் கிடைக்கும் சுங்கவரி மற்றும் கலால் வரியால் பெறப்படும் வருவாயே தமிழக அரசின் ஆண்டு வருவாயில் சரிபாதியாக இருக்கிறது. இதைக் கொண்டுதான் தமிழக மக்களுக்கு இலவசத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி தரவும், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி தரவும், அதே குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைக் குடிகாரர்களாக்குகிறது தமிழக அரசு. இது கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதல்லாமல் வேறென்ன?
முதல்முறையாக 1937-ல் சென்னை ராஜதானியில் ராஜாஜி முதல்வராக இருக்கையில் மதுவிலக்கு கொள்கை அறிவிக்கப்பட்டது. பிற்பாடு காங்கிரஸ் ஆட்சி பதவி விலகியதும், 1944-ல் ஆங்கிலேய அரசு தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி.
அப்போது அவர் எழுதிய கட்டுரையில்,  ‘மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால்,  ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களும் குறையும்-  என்று எழுதினார்.
தமிழகத்தின் தற்போதைய நிலைமை என்ன? ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையான வசனம் வரும்- இங்கு மதுவைத் தொடாத ஆணாக இருக்க வேண்டுமென்றால் அவன் பச்சைக்குழந்தையாகத் தான் இருக்க முடியும் என்று! ஆண்களை மலடாகவும், குடும்பங்களை குப்பையாகவும் ஆக்கும் மதுவுக்கு நமது அரசே ஆதரவாக இருக்கிறது!
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னரே மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அந்த  முடிவை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி 1971-ல் எடுத்தபோது, கொட்டும் மழையிலும் அவரை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து, மன்றாடினார் முதுபெரும் தலைவர் ராஜாஜி. அதை கருணாநிதி பொருட்படுத்தவில்லை. அதன் விளைவு, யாரும் காணாமல் ஒளிந்து மது அருந்தியவர்கள் கூட கூச்சமின்றி மதுக்கடைக்குப் படையெடுப்பது துவங்கியது.
மதுவிலக்கு கொள்கையின் தள்ளாட்டம்:
மதுவிற்பனையில் கழகங்களிடையே போட்டி...
மதுவிற்பனையில் கழகங்களிடையே போட்டி…

1937-லிருந்து 2001 வரை,  1944- 47, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது 2001 வரையிலான சுமார் 68 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் மட்டுமே மதுவிற்பனை தமிழகத்தில் தாராளமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு சாவுமணி அடித்தது, எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது 1983-ல் டாஸ்மாக் நிறுவனம் துவங்கியபோது தான்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்),  1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான  அதிமுக அரசால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி, இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்’ எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான். எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து, தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.
2001-ல் அதிமுக ஆட்சியின்போது, மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகக் கூறி, அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மதுவிலக்கைத் தளர்த்தினார். அது இன்று பூதாகரமாகி, அரசையே இயக்கும் அளவுக்கு பிரமாண்டமாகி இருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து  மதுவிற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது.
2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அபோதுதான், டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 2003- இல்  ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.
அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்படுகிறது.
2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ஆண்டுதோறும் அதிகரித்துவரும் டாஸ்மாக் வருவாய் (காண்க: பட்டியல்) அரசுக்கு இனிப்பாக இருக்கலாம்; ஆனால் அது நாட்டையே அழிக்கும் விஷம் என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.
தலையை ஆட்டுவிக்கும் வால் டாஸ்மாக்:
தமிழக அரசின் வற்றாத அமுதசுரபியாகக் கருதப்படும் டாஸ்மாக், முற்றிலும் அரசு நிறுவனம். கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு, அவற்றை தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, மதுவிற்பனையை முறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, மதுவை விற்று வருகிறது.
டாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்

இதனை நிர்வகிக்க இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் ஐவர் நியமிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் வருவாய் குறையும் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிரமாகப் பாடுபட்டு கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்றனர். நாட்டு மக்கள் கள்ளச் சாரயம் குடிப்பதை விட நல்ல சாராயம் குடிப்பதே நாட்டிற்கு நல்லது என்பது தானே அரசின் கொள்கை?
இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை (ஐஎம்எஃப்எஸ்) கொள்முதல் செய்வது, அவற்றை வர்த்தகம் செய்வது ஆகியவையே டாஸ்மாக்கின் பணிகள். இதற்கென மாநிலம் முழுவதும் 41 கிடங்குகள் இயங்குகின்றன. விவசாய விளைபொருளைப் பத்திரப்படுத்த கிடங்குகள் உள்ளனவோ இல்லையோ, மதுவகைகளை பத்திரப்படுத்த கிடங்குகள் அதிநவீனமாக அமைக்கப்படுகின்றன.  தற்போது மாநிலம் முழுவதும் 4,035 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தை இயக்க 350 அரசு ஊழியர்களும், பல்வேறு துறைகளிலிருந்து தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட 300 அரசுப் பணியாளர்களும், தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்யும் 28,000 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 95 அதிகாரிகளும் உள்ளனர். இது டாஸ்மாக் இணையதளம் தரும் தகவல். இந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியச் செலவினம் மிகவும் குறைவே. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் பெருகிவிட்டன. அது தனிக்கதை.
தவிர, மதுவகை கொள்முதலிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசுக்கு வருவாய் என்பது மாறி, ஆளும் கட்சிக்கு தேர்தல்கால ஆபத்பாந்தவனாக இக்கொள்முதல் முறை மாறியிருக்கிறது. எனவே தரமற்ற சரக்குகள் விற்பனையில் புகுந்து, ஏற்கனவே தள்ளாடும் குடிமகனை மேலும் நாசமாக்கி நடுத்தெருவில் வீழ்த்துகின்றன.
டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டி அமைக்கப்படும் மதுக்கூடங்கள் (பார்) நடத்துவது தான் அரசியல்வாதிகளின் இப்போதைய முக்கியமான தொழில். பெரும்பாலும் ஆளும்கட்சிப் பிரமுகர்களே பினாமி பெயர்களில் இவற்றை நடத்துவதால், இங்கும் முறைகேடுகள் உச்சம். உதாரணமாக, இங்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள காகிதக் கோப்பை ரூ. 5-க்கு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுகிறது. குடிமகனின் வருவாயைச் சுரண்டுவதில் டாஸ்மாக் நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன இந்த பார்கள்.
ஆக மொத்தத்தில், அரசுக்கு பல்லாயிரம் கோடிக் கணக்கில் வருமானம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு முறைகேடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான லஞ்சம், ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்குக் கிடைக்கும் கோடிக் கணக்கான பார் வருவாய், அரசியல்வாதிகள் நடத்தும் மது உற்பத்தி ஆலைகளின் பலகோடி லாபம் ஆகிய பல அம்சங்கள் பின்னிப் பிணைந்தது மது விற்பனை உலகம். அரசு என்னும் தலையை டாஸ்மாக் என்னும் வால் ஆட்டும் விந்தைக்கு ஆதாரம் இதுவே.
தமிழகத்தில் மதுவிற்பனைக்கு எதிராக பரவலாக குரல்கள் ஒலித்தாலும் கூட, அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளாததற்கும் இதுவே காரணம். பொன்முட்டையிடும் வாத்து போன்ற டாஸ்மாக் வர்த்தகத்தைக் கைவிட தமிழக அரசு தயாரில்லை. ஆக, மக்களைக் காக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டாஸ்மாக் இன்று மக்களை சிறுகச் சிறுகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
குடிப்பழக்கத்தின் கொடிய விளைவுகள்:
மதுவின் கொடுமைகள் குறித்து தனியே விளக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் எந்தத் தெருவிலும் விழுந்துகிடக்கும் இளைஞனே மதுவின் கோரத்திற்கு நேரடிச் சான்று. மதுப்பழக்கத்தால் நாசமாகும் இளைஞர் சமுதாயம்; குலையும் குடும்ப உறவுகள்; சிதையும் பொருளாதாரம்; மங்கும் உழைப்புத் திறன், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.
Liquer2

வயது வந்தவர்கள் கூட மறைந்து குடித்த காலம் மாறி, பள்ளி செல்லும் எட்டாம் வகுப்பு மாணவனே குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆண்களோடு சரிநிகர் சமானமாக பெண்களும் குடித்துவிட்டு கும்மாளமிடும் கலாசாரம் எல்லை மீறி, குற்றச்செயல்கள் பெருகுகின்றன. குடியே ஒரு பெருமையாக மாறிவரும் நாசகாரக் கலாசாரமும் உருவாகி வருகிறது.
இன்று அரசியல் கூட்டங்கள் மதுப்புட்டி விநியோகம் இல்லாமல் சாத்தியமில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது. மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் மது தவிர்க்க முடியாத அம்சம் என்ற பாவனையும் உருவாகி வருகிறது. இதனால் குடிநோய்கள் பெருகுகின்றன.
தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை முடக்குவதாகவும், கல்லூரி மாணவர்களைத் தடம்புரளச் செய்வதாகவும், மது அரக்கன் உருவாகி இருக்கிறான்; உள்நாட்டுத் தயாரிப்பான கள்ளைக் குடித்தால் குற்றம், வெளிநாட்டு மதுவகையான பிராந்தியைக் குடித்தால் சரியானது என்ற தவறான நிலைப்பாடு அரசாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குடலும் ஈரலும் வெந்து மாயும் தமிழ் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இதில் வேதனை என்னவென்றால், மது விற்பனை வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் அனைவரும் அறிந்தவையாக உள்ளன. இந்த விற்பனையை விசேஷ நாட்களில் அதிகரிக்குமாறு அரசே உத்தரவிடுகிறது. ஆனால், மதுவின் தீமையால் இறக்கும் குடிமக்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரப் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. ஆயினும், மருத்துவமனைகளில் கல்லீரல் அழுகல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
மதுப்பித்து, ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, சாராய மயக்கம், கணைய அழற்சி, குடற்புண், இதயநோய், மனநல பாதிப்பு, சுயநினைவிழப்பு போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை குடிப்பழக்கம் உருவாக்குகிறது. ஆரோக்கியமான சமுதாயம் அமைய குடிப்பழக்கம் விரோதி என்பதை அரசு மறந்துவிட்டது.
மூதறிஞர் ராஜாஜி ஒரு கதை சொல்வார். “ஒருவனிடம் ‘மதுவை அருந்துதல், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தல், அவளது கைக்குழந்தையைக் கொலை செய்தல்’ என்ற மூன்றில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று சைத்தான் உத்தரவிட்டது. மற்றவை பெரும் பாவம் எனக் கருதிய அந்த மனிதன்,  மதுவை அருந்தினான். போதை ஏறியதும் அவன்,  அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தான். அதற்கு இடையூறாக இருகப்பதாக என்று எண்ணி அழுத குழந்தையையும் கொலை செய்தான். எனவே, எல்லாப் பாவங்களுக்கும் மூலமான மதுவை ஒழிக்க வேண்டும்;  பூரண மதுவிலக்கு மூலம் மதுவைக் கட்டுப்படுத்தினாலே ஏராளமான குற்றங்கள் குறையும்” என்பார் ராஜாஜி.
நாம் என்ன செய்ய வேண்டும்?
“கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே” என்கிறார் திருவள்ளுவர் (குறள்- 926). இதற்காக ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரமே படைத்த அவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், குறள் வழி நடப்பதை மதுபோதையால் தவிர்க்கிறோம்.
மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் தமிழில் இல்லை. ஆனால், பழம்பெருமை பேசிக்கொண்டே முச்சந்தியில் கிடக்கும் குடிகன்களைக் கடந்துபோகிறோம்.
நமது அண்டை மாநிலமான கேரளம் குடியின் நாசத்தை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேட்த் துவங்கிவிட்டது. நாமோ, அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும் என்ற சிந்தையுடன் இலவசம் வழங்கும் அரசையே தேர்ந்தெடுக்கத் துடிக்கிறோம்.
செருப்புக்குத் தோல் வேண்டியே இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”
- என்று பாடுவார் மகாகவி பாரதி,  பாஞ்சாலி சபதத்தில். சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இலவசப் பொருள்களைப் பெற, நம்மை நாமே விற்று வருவது செல்வக் குழந்தையைக் கொல்வது போலத் தானே?
Liquer4
மதுவிலக்குப் போராளி சசிபெருமாள்.

விலையில்லாப் பொருள்களைப் பெற வரிசையில் நிற்கும் தமிழ்க் குடிமக்கள், தங்கள் விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் விலைபேசும் டாஸ்மாக் தான் அதற்கான வருவாய் ஆதாரமாக உள்ளது என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? மக்கள் இதனை உணராதவரை, மாநில அரசு திருந்தப்போவதில்லை.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் முன்னணி அரசியல்வாதிகளான மருத்துவர் ராமதாஸ், வைகோ, தமிழருவி மணியன், பொன்.ராதாகிருஷ்ணன், நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களும், சசிபெருமாள், செந்தில் ஆறுமுகம், மதுரை மாணவி நந்தினி போன்ற சமூகப் போராளிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 9 அன்று மாநிலம் தழுவியமதுவிற்கு எதிரான உண்ணாவிரதம் ABVP யினால் நடத்தப்பட உள்ளது.
 அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் போன்ற மாணவர் இயக்கங்கள் இப்போது மதுவின் கொடுமையை மக்களிடம் விளக்க முற்பட்டிருப்பது நல்ல அறிகுறி. இளைஞர் சமுதாயமும் மகளிரும் வெகுண்டு எழுந்தால் மட்டுமே, குடிமக்களை ‘குடிமக்களாக்கும்’ அரசின் மது வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
1950-ல் இயற்றப்பட்ட நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் முக்கிய குறிக்கோளே, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான். உண்மையில் பேச்சுரிமை, எழுத்துரிமை போல, மதுவிலக்கைக் கோருவதும் உறுதிப்படுத்துவதும் குடிமக்களாகிய நமது உரிமை; நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதற்பெரும் கடமையும் கூட.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை

தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது தரப்பில்

தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள்

நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை அடுத்து அங்கு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இழிவானது மற்றும் வெட்கக்கேடானது என்று சுப்பிரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேசவிரோத சக்திகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

-தினத்தந்தி.


ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 1998-ம் ஆண்டுக்கு பின்னர் தங்கம் வென்றுள்ள இந்தியா ஆடவர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் பலப்பரீட்சையில் இறங்கின. இரு பரமஎதிரிகள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிறைவேற்றியது. போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. ஏற்கனவே லீக்கில் 1–2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த சர்தார்சிங் தலைமையிலான இந்திய அணி அதற்கு வட்டியும் முதலுமா பதிலடி கொடுத்துள்ளது.

ஆசிய விளையாட்டில் 1958–ம் ஆண்டு அறிமுகம் ஆன ஆக்கியில் இந்திய அணி 1966 மற்றும் 1998–ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கம் வெல்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. 8 முறை சாம்பியனான பாகிஸ்தான் 9–வது பட்டத்திற்கு குறி வைத்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் வாகை சூடிய இந்திய அணி நேரடியாக 2016–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
        தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாவாக இருந்து வரும் ஆயுத பூஜையை இழிவுபடுத்திய அன்றைய முதல்வர் திரு. கருணாநிதிக்கு பதிலடியாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை தினமணியில் 10.10.2011 அன்று வெளியிடப்பட்டது. 
இதை ஆயுத பூஜையை முன்னிட்டு மறுபதிவு செய்கிறோம். 
ஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கி இருப்பதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைக்கழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை.

இவரின் கலைஞர் தொலைக்காட்சி விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளிபரப்பியது.

கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை திராவிட - ஆரியப் பித்தலாட்டம் எப்பவும் அரசியலுக்குத்தானே தவிர, குடும்ப நிறுவனங்களின் வியாபார ஆதாயத்துக்கு ஒரு நாளும் குறுக்கே நின்றது கிடையாது.
24MA KARUNANIDHI 168094e
தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம். ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. ”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50-ம் திரைப்பட கதை-வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா'' போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால், "பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி''யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில்,
"மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்'' - (பொருள் அதிகாரம் - 91)
என்று ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தொல்காப்பியம்.
kerala ayudha puja

எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்வது உழிஞை திணை. இதில்,
வென்ற வாளின் மண்ணோ டொன்ற''  -  (பொருள் அதிகாரம் - 68)
என்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது.
"உடன் படு மெய்'' என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் இணைவதை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதி வக்கிரப் பார்வை பார்க்கும் கருணாநிதிக்கு ஆயுத பூசை எப்படிக் கண்ணில் படும்?

சென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால் ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள்தானே? சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய பாவத்திற்காக மள்ளர்கள் ஆரியர்களாகி விடுவார்களா?

"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்

றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்

போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த

கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப'' - (பதிற்றுப் பத்து, பாட்டு-66)

மள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich குறிப்பிடுகிறது. வாகை மலருக்கு வட மொழியில் "சீர்ஷா' என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் "சீர்ஷா” என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் "மேகதூதம்' குறிப்பிடுகிறது.(Floriculture in India  By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay, p.607)

தமிழகத்தில், "வள்ளல்” என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஒளவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டறையில் இருக்கிறது. ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே என்ற கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விவரம், முழுமையாகவும் முறையாகவும் சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும். பலருடைய உரைகளை ஒருங்கிணைத்து "சங்கத் தமிழ்” என்று தனது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தவர்களுக்கு எப்படித் தெரியும்?
aram-seiya

5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார். இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பதுதான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5-ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கிறது.
சித்திரை திங்கள் சித்திரையும்
பிரட்டாதி ஓணமும்'' - (South Indian Inscriptions, Vol 13, No 317, Archeological Survey of India)
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர்பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகளில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336-ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூசையைப் புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ()த்தனமா?

தான் உய்யா விட்டாலும் கவலையில்லை. உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியைப் போதித்த இராமானுசரின் ஸ்ரீபெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு 16-ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கியக் குறிப்புகளிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் இடம்பெறும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா?

அறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா என்று பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?

Wednesday 1 October 2014

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் நடுவர் தீர்ப்பினால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் கதறி அழும் காட்சி. | படம்: ஏ.பி.
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.

மேலும் பதக்கம் அளிக்கும் மேடையில் நின்று கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

அரையிறுதியில் ஜினா பார்க் என்ற கொரிய வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி அபாரமாக விளையாடினார். ஜினா பார்க் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையில் சரிதா தேவி வெற்றிப் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்த்தார்.

ஆனால் நடுவர் சற்றும் எதிர்பாராத வகையில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வென்றதாக அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனையடுத்து சரிதா தேவியின் கணவர் தோய்பா சிங் கடும் கோபமடைந்து நடுவரை நோக்கி திட்டியபடியே குத்துச் சண்டை வளையத்திற்குள் நுழைய முயன்றார்.

சரிதா தேவி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதபடியே கூறும்போது, “எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது என முன் கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இப்படித்தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டிருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் சரிதா தேவி அநீதி முடிவை எதிர்த்து முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை. நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதனையடுத்து இன்று பதக்க நிகழ்ச்சிக்கு கண்ணீருடன் வந்த சரிதா தேவி பதக்க மேடையில் கதறி அழுதார். வெண்கலப் பதக்கத்தை அணிய அவர் மறுத்து விட்டார். கொரிய வீராங்கனையை அழுதபடியே தழுவிய சரிதா தேவி பதக்கத்தை அவரிடம் கொடுத்தார்.

முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மனமுடைந்த நிலையில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

சரிதா தேவியின் குத்துச் சண்டை ஆட்டத்திறனுக்கு முன்பாக அன்று ஜினா பார்க் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் சரிதா தேவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில் நடுவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஜினா பார்க் வென்றதாக அராஜக அறிவிப்பை வெளியிட அனைவரும் திகைத்துப் போயினர்.

அனைத்திற்கும் மேலாக மிகவும் வெளிப்படையாக இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டும் மேல் முறையீட்டிலும் நீதி கிடைக்கவில்லை என்பது நடப்பு ஆசிய போட்டிகள் நடத்தப்படும் நேர்மை மீது கடும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனிடையே, சரிதா தேவிக்கு ஆதரவாக இணையத்தில் ஆதரவு குரல் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் #saritadevi என்ற ஹேஷ்டேக்கில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 

-தி இந்து.

Tuesday 30 September 2014

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் இருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவை விலை குறைவாக உள்ளன. அவற்றை பதுக்கி வைத்துக்கொண்டு பட்டாசுகள் கேட்கும் போது அவை விற்கப்படுகின்றன அதனால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்தனர்.

உடனடியாக மத்திய அரசு, இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சீனா உள்ளிட்ட எந்த வெளிநாடுகளில் இருந்தும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.

அந்த பட்டாசுகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த பட்டாசுகளால் பாதுகாப்பு இல்லை. எனவே சீனபட்டாசுகளை யார்வைத்து விற்றாலும் உடனே போலீஸ்நிலையத்தில் புகார் செய்யுங்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. காரணம் இது கோர்ட்டு தீர்ப்பு. பொதுமக்களை பாதிக்காத வகையில் சம்பவங்கள் நடக்கவேண்டும். பொது மக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. வன்முறை எங்கும் இருக்கவேண்டாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முன்னதாக நிர்மலா சீதாராமன் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தொழிலாளர் வைப்பு நிதி மண்டல ஆணையம் சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவந்துள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 பென்சன் திட்டத்தையொட்டி சென்னை மண்டலத்தில் 10 ஓய்வூதியதாரர்களை நிர்மலா சீதாராமன் பொன்னாடை போர்த்தி கவுரவித்து பேசியதாவது:-

பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றதும் ஏழைமக்களை பற்றியே சிந்தித்து வருகிறார். அதனால் தான் சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி விதவைகள் உள்ளிட்ட ஓய்வூதியம் பெறுபவர்களில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக யாரும் வாங்கக்கூடாது என்று நினைத்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார்.

இதனால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகள் பயன் அடைகிறார்கள். பிரதமர் தன்னை மக்களுக்கு தொண்டு செய்யும் சேவகனாகத்தான் நினைக்கிறார். மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய இயலுமோ அந்த அளவுக்கு செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விழாவில் தொழிலாளர் வைப்பு நிதி மண்டல ஆணையர்கள் பிரசாத், மதியழகன், பங்கஜ் ராமன் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிரதிநிதி இமயம் கக்கன், ரேவதி, சுரேஷ் உள்பட பலர் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

-மாலைமலர்.

கை.களத்தூர்- அய்ய னார்பாளையம் இடையே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத் துள்ள கை.களத்தூரிலிருந்து அய்யனார்பாளையம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண் டும் குழியுமாக கிடந்தது. மேலும் இந்த சாலையின் இடையே செல்லும் ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் மழை காலங்களில் கடந்து செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பிரதம மந்திரி கிராம இணைப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப் பட்டது.

துரிதப்படுத்த கோரிக்கை

இந்நிலையில் பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் தார்சாலை அமைக் கும் பணியும், பாலம் கட்டும் பணியும் ஆமை வேகத்திலேயே நடந்து வருகி றது. குறிப்பாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடப்பதால் லேசான மழை பெய்தால் கூட ஆற்று பள்ளத்தில் நீர் தேங்கி போக் குவரத்திற்கு மிகுந்த இடை யூறு ஏற்படு கிறது. இத னால் வாகன ஓட்டிகள் ஆற்றைக் கடக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண் டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் கட்டும் பணியையும், தார் சாலை அமைக்கும் பணியை யும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் துரிதப்படுத்தி பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு விட வேண்டும் என அய்யனார்பாளையம் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினத்தந்தி.

10.09.2014 துக்ளக் தலையங்கத்தில் இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று ஆணித்தரமாக எழுதி விட்டு இதை ஒப்புக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம் என்றும் திரு. சோ அவர்கள் எழுதியுள்ளார். ஹிந்து மஹா சமுத்திரம் என்ற பெயரை பள்ளிப்புத்தகங்களில் இருந்து மாற்ற வேண்டும்  என்று போராடாமல் இருந்தால் சரி. 10.09.2014 தலையங்கத்தில் திரு. சோ அவர்கள்  //இது ஹிந்து நாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான். என்று பாஜகவினர் சிலரும் ஹிந்து அமைப்பினர் பலரும் பிரச்சாரம் செய்யத்தொடங்கி இருக்கின்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூட இப்படி பேசியிருக்கிறார். இது சற்றும் ஏற்க முடியாத பேச்சு. இங்குள்ள அனைவரும் இந்துக்கள் தான் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வலுவாக திணித்து ’எல்லோருமே ஹிந்துக்கள் என்று பேசுவது சற்றும் ஏற்கக் கூடிய விசயம் அல்ல. ‘அனைவரும் இந்தியர்கள் என்றால் ஒப்புக்கொள்ளலாம்’. //
thuglak4
இப்படிப்பட்ட கருத்தை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய சோ பதிவிடலாமா? ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியன் என்ற சொல்லுக்கும் மொழி வேறுபாட்டை தவிர வேறு என்ன இருக்கிறது.
இந்தியா என்பது ஹிந்து என்ற சொல்லின் மருவு என்கிறது விக்கிபீடியா.
The name India is derived from Indus, which originates from the Old Persian word Hinduš.
http://en.wikipedia.org/wiki/India - retrieved on 28.09.2014
இந்தக்கருத்தை ஆங்கில அகராதியான oxford English dictionary மேற்கோள் காட்டியும் உள்ளது. இந்த முடிவிற்கு oxford English dictionary வருவதற்கான பின்னணி என்ன என்பதைச் சற்றே பார்க்கலாம். இந்தியா என்ற சொல்லின் விளக்கத்தை பதிவிட்ட சிகாகோ பல்கலைகழகத்தின் குறிப்புகளை நாம் சற்று பார்க்கலாம். ”Digital Dictionaries of South Asia” என்ற நூலில் ”A Glossary of Anglo-Indian Words and Phrases” என்ற தலைப்பில் இந்தியா என்ற சொல் பல தரவுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இந்த அகராதி, சிகாகோ பல்கலைகழகம் மற்றும் மத்திய ஆராய்ச்சி நூல்நிலையத்தின் வெளியீடாகும். இந்தியா என்பது United Kingdom, United States போன்ற பல நாடுகளின் தொகுப்பு என்ற பிதற்றல்களும், ஆங்கிலேயன் வருவதற்கு முன்னால் அப்படி ஒரு நாடே இருந்ததில்லை என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஊடகங்களில் சில காலமாக வளைய வந்து கொண்டிருக்கிறது. இந்த அரைவேக்காட்டு பிரச்சாரத்திற்கும் பதிலளிக்க திரு. சோ அவர்களின் தலையங்கத்தை பயன்படுத்துவது ஒருவகையில் மகிழ்ச்சிதான். Digital Dictionaries of South Asia, பல தரவுகளிலிருந்து வெளியிட்ட இந்தியா பற்றிய தொகுப்பை இப்போது பார்ப்போம்.
dds logo
//இந்தியா பற்றிய விளக்கங்களின் துல்லியம், சில கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பிரதிபலிப்பதோடு, இப்போது நாடு பற்றி நமக்கு இருக்கும் கருத்தோடு இசைந்து போகிறது; இந்தக் கருத்து தான் Hwen Tsang, இன்னும் பிற சீன யாத்ரீகர்களின் உரைகளில் துலக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. அசோகர் காலத்திய கல்வெட்டுக்களில் (கி.மு..250) இந்தக் கருத்தை கணிசமாக ஒட்டியபடி இந்திய ராச்சியங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன; கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத்தான தஞ்சாவூர் கல்வெட்டில் தஞ்சை சோழ அரசன் வீர சோழனால் இந்தியாவின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது (கற்பனையோ நிஜமோ) தெளிவுபடுத்தப்பட்டிருப்பதோடு, அதிலும் இதே முறை தான் பின் பற்றப்பட்டிருக்கிறது. கல்யாணின் சாளுக்கிய வம்சத்தவர், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பட்டயத்தில், ”ஹிமாலயம் முதல் பாலம் வரை” என்ற ஒரு சொற்றொடர் வருகிறது (Ind. Antiq. i. 81) அதாவது ராமரின் பாலம் என்னும் நமது வரைபடங்களில் காணப்படும் Adam's Bridge. இதன் கீழே அதே காலத்தைச் சேர்ந்த முகம்மதிய விளக்கங்களிலும் இந்தப் பெயர் காணப்படும். விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த ஹிந்து அரசர்களின் (14ம் நூற்றாண்டு முதல்) கல்வெட்டுக்களிலும் இந்தியாவை இது போன்ற விளக்கங்கள் மூலம் குறிக்கிறார்கள்.
இந்தப் பெயரின் தோற்றம் சந்தேகமே இல்லாமல் (சமஸ்கிருதம்), சிந்து, ‘கடல்’, அது மேற்கில் இருக்கும் மகத்தான ஆறு, அதன் கரைகளில் இருக்கும் நாடு, இதை இன்றும் கூட நாம் சிந்த் என்றே அழைக்கிறோம். உலகின் பல பாகங்களில் நிலவும் மாற்றம் காரணமாகவும், இந்தியாவிலேயே கூட பல பாகங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இந்தப் பெயர் இஸ் ஒலியின் இடத்தில் மெய்யொலி இடம் பெறுகிறது அதுவே கடைசியாக பாரசீகத்தில் ஹிந்து என்று ஆகி, கிரேக்கர்களுக்கும், லத்தீன் மொழிக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு மக்களுக்கு INDOI எனவும், ஆற்றுக்கு INDO/S எனவும், INDIKH/ and INDIA என அதன் கரைகளில் இருக்கும் நாட்டுக்கும் மறுவிப் போனது, மேற்கத்தியர்களுக்கு இந்தப் பெயர் அளிக்கப்பட்டு, நாம் முன்னே கூறிய நாடு பற்றிய ஒட்டு மொத்த கருத்தும் அந்நிய நாட்டவர் வாய்களில் இயல்பாக, ஆனால் காலப் போக்கில் மொத்தமாகவே மாறிப் போனது.//
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.
இந்தியா என்ற நிலப்பரப்பை ஒரே நாடாக எப்படி உலகம் தொன்றுதொட்டே கருதி வந்ததோ அது போலவே தென்னகத்துச் சோழனும் வடநாட்டு அசோகனும் மத்திய இந்தியாவின் சாளுக்கியனும் பார்த்துவந்ததை இந்த நூல் மேற்கோள் காட்டியுள்ளது. வெளிநாட்டவன் வைத்த பெயர் இந்தியா என்று கொக்கரிக்கும் தமிழ் வியாபாரிகள் வீர சோழனை வந்தேரி என்று திட்டாமல் விட்டால் சரி தான். பெளத்தமே கதி என்று சொல்லி அடிப்படை பெளத்தம் தெரியாமல் ஹிந்துக்களை மதமாற அழைக்கும் பகுத்தறிவுவாதிகள், உலகத்திலேயே முதன்முறையாக அரசு எந்திரத்தை பயன்படுத்தி மதம்மாற்றம் செய்த ’பெளத்த’ மன்னன் அசோகனின் ஆதாரத்தையாவது நம்புவார்களா?
Ashoka
இந்த நிலப்பரப்பின் பெயர் ஹிந்து என்ற சொல்லின் அடிப்படையாக கொண்டது என்பதை நிறுவியுள்ளது Digital Dictionaries of South Asia. இதன் அடிப்படையில் இந்த நிலப்பரப்பில் வசிப்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்த India, Hindu என்ற சொல்லாட்சி எந்தெந்த காலங்களில் எப்படி யாரால் பயன்படுத்தபட்டது என்பதை Digital Dictionaries of South Asia தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது.
//கி.மு486இல் , “டேரியஸ் என்ற மன்னன் கூறுகிறான்: Ormazdஇன் கருணையால் நான் பாரசீகம் உட்பட இவை தாம் நான் கைப்பற்றிய நாடுகள். நான் என் அதிகாரத்தை அவற்றின் மீது நிறுவி இருக்கிறேன். அவர்கள் எனக்கு கப்பம் கொண்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூறியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் சட்டத்துக்கு கீழ்படிகிறார்கள். Medea.... Arachotia (Harauvatish), Sattagydia (Thatagush), Gandaria (Gadaara), India (Hindush)... " - Nakhsh-i-Rustamஇல் உள்ள Dariusஇன் கல்லறையில், Rawlinson's Herod, iv. 250 பார்க்கவும்.//
இதில் ‘Hindush’ என்று தான் இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. ஆக, ஹிந்துஸ்தான் என்பது இந்த நாட்டின் பெயர் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 486 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கு கூட நம்மவர்கள் கிரேக்க மன்னனுக்கு கப்பம் செலுத்திய செய்தி பதிவாகியுள்ளது. அந்த அடிமைத்தனத்தின் விளைவோ என்னவோ பிற்கால கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அடிமைப்பட்டு கிடக்கும் சிந்தனாவாதிகளால், இந்தியா ஒரே நாடு இல்லை என்றும் ஆங்கிலேயன் வந்த பிறகே இது ஒரு நாடானது என்ற கருத்து மேலோங்கியுள்ளது போலும்!.
கி.மு.440 ல் சிந்து நதி முதல் கடல் வரை இருக்கும் அனைவரும் இந்தியர்கள் அவர்கள் உதயசூரியனுக்கு மிகவும் நெருக்கமாக வசிக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. இதைப் படித்து விட்டு தான் அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழனின் சின்னம் உதயசூரியன் என்று அறிவித்தார் என்று கழகக் கண்மனிகள் முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரே ஒரு சிக்கல் அது சிந்து முதல் குமரி வரை என்று உள்ளது. சிந்துவுக்கு கூட புது விளக்கங்கள் உதயசூரியன் மண்ணில் உதயமாகலாம். இதோ அந்த கிமு 440 ஆண்டின் மேற்கோள்.
//கி.மு.. 440 - “இந்தியாவுக்கு கிழக்கே முழுமையாக மணலாக ஒரு பிரதேசம் விளங்குகிறது. ஆசியாவில் வசிக்கும் அனைத்து பேர்களிலும், அவர்களைப் பற்றித் தெரிந்த வரையில், இந்தியர்கள் தாம் கிழக்குக்கும், உதயசூரியனுக்கும் மிக நெருக்கமாக வசிக்கிறார்கள்.” Herodotus, iii. c. 98 (Rawlinson) //
இந்தியாவின் வரைபடத்தையே கிமு300ல் தத்ரூபமாக விளக்குகிறார் கிரேக்க பயணியும் புவியியலாளருமான மெகஸ்தனிஸ்.
//கி.மு. 300 - இந்தியா அப்போது (H (TOI/NUN*) INDIKH\) வரைபடத்தில் நான்கு பக்கம் கொண்டதாக இருக்கிறது, கிழக்கு நோக்கி ஒன்றும், தெற்கு நோக்கி ஒன்றும், பெரிய கடல் அதைச் சூழ்ந்தும்; வட துருவத்தை நோக்கிய பகுதி Hēmōdus என்ற மலைச் சங்கிலியால் Scythia முதல் பிரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே Sakai என்று அழைக்கப்படும் Scythianகள் பூர்வகுடிகள் வசிக்கிறார்கள்; நான்காவது பக்கமான மேற்கு நோக்கிய முகத்தில், இண்டஸ் எல்லைக்கோடாக இருக்கிறது, இது தான் நீல நதிக்குப் பிறகு மிகப் பெரிய அல்லது அனைத்து நதிகளிலும் பெரியதாக இருக்கிறது.” - Megasthenes in Diodorus, ii. 35. (ம்யூலரின் Fragm. His. Graec., ii. 402)//
 indimapl
இங்கு 'indikh' என்ற சொல் ஆளப்படுகிறது. இங்கிலாந்து என்ற நாடு உருவாவதற்கு பல் நூற்றாண்டுகள் முன்பே எல்லை வரையருக்கப்பட்டது மட்டுமின்றி இந்தியா என்ற பெயரும் பயன்பாட்டில் உள்ளதையாவது, ஆங்கிலேயன் வந்தபின் இந்தியா உருவானது என்று கொக்கரிக்கும் கூட்டங்கள் ஒப்புக்கொள்வார்களா? அல்லது போலி இனவாதம் பேசுவார்களா?
கி.பி. 590ல் இந்தியாவின் விஸ்தீரணத்தை அதைப் பயணித்துக் கடக்கும் நேரத்தைக்கொண்டு விளக்கும் பயணக்குறிப்பை Digital Dictionaries of South Asia கீழ்கண்டவாறு விளக்குகிறது.
//c. 590 - ஹிந்த் நிலத்தைப் பொறுத்த மட்டில் இது கிழக்கே பாரசீக கடலாலும், (அதாவது இந்தையக் கடல்) மேற்க்கிலும், தெற்கிலும், இஸ்லாத்தின் நாடுகளாலும், வடக்கே சீனப் பேரரசாலும் சூழப்பட்டிருக்கிறது..... இந்த ஹிந்த் நிலத்தின் நீளம் Mokraan நாட்டு அரசிலிருந்து, Mansoora நாடு, Bodha, சிந்த் முழுக்கவிருந்தும் Kannuj வரை நீண்டும், பிறகு Tobbat (TIBET) வரையும், சுமார் 4 மாதங்கள், அதன் அகலம் இந்தியக் கடலிலிருந்து Kannuj நாடு வரை சுமார் 3 மாதங்கள்”: Istakhri, pp.6ம் 11ம்.//
பன்நெடுங்காலமாகத் தொடர்ந்த அன்னியப் படையெடுப்புகளால் இந்தியாவின் பெயர் விளக்கம் பல சிக்கல்களை சந்திக்க தொடங்கியது. இந்தியாவை இந்து என்று அழைக்கவேண்டும் என்று ஹுவான் சுவாங் சொன்னதை மேற்கோள் காட்டுகிறது Digital Dictionaries of South Asia.
//c.650. - "Tien-chu (இந்தியா) என்ற பெயர் பல்வேறு, குழம்பிய நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது......... பண்டைய காலங்களில் அவர்கள் Shin-tu என்று அழைத்தார்கள் ஆனால் சில எழுத்தாளர்களோ, இதை Hien-teou என்று அழைத்தார்கள். இதன் உண்மையான உச்சரிப்பின் படி பார்த்தால் இதை In-tu என்று தான் சொல்ல வேண்டும்” - Pèl, Bouddh, i i, 57ல் ஹுவான் சுவாங்.//
இந்து என்ற பெயரைக்கேட்டவுடன் ஆரியம், வெள்ளையனின் கண்டுபிடிப்பு என்றெல்லாம் ஓலமிடுபவர்கள் அவர்கள் சிந்தனைகளை செதுக்கும் சீனா நாட்டின் பயணியின் குறிப்பை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் என்று ஒப்புக்கொள்வார்களா?
சீனர்களும், கிரேக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த நாட்டின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வாங்காதவர்கள் அதனால் அவர்கள் இந்து சார்பு நிலையை எடுப்பவர்களாகத்தான் இருப்பார்கள் இந்த நாடுகளில் சகோதரத்துவம் சமத்துவம் கிடையாது. ஆகவே, சகோதரதுவத்தையும், அமைதியையும் உலகுக்கு கொடுத்த இஸ்லாமியர் சொன்னால் நம் நாட்டு அறிவுஜீவிகள் பொதுவாக ஒத்துக்கொள்வார்கள் சில சமயங்களில் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அப்துல் கலாம் கருத்து தெரிவித்தால் கலாமை கலகம் என்று முத்திரை குத்தும் பழக்கமும் உண்டு. என்ன தான் நிலைக்கெட்ட மனிதர்களாக இருந்தாலும், பாரசீக முஸ்லீமான அபு அல்-ரைஹான் முகமது இபின் அகமது அல்-பிருனியின் 11ம் நூற்றாண்டு குறிப்பிற்கு தடைவிதிக்கக் கோரி மெளண்ட்ரோட்டுக்கு மூடுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்! எப்படி இந்த நாட்டை அவர் வருணிக்கிறார் என்று பாருங்கள்.
Biruni-russian
// c. 1020. - ”இந்தியா (அல்-ஹிந்த்) என்ற ஒரு சமவெளி, தெற்கிலே இந்தியர்கள் கடலால் சூழப் பட்டிருக்கிறது. வானளாவிய மலைகள் அதன் மற்ற இடங்களை சூழ்ந்திருக்கிறது. இந்த சமவெளி வழியாக மலைகளிலிருந்து பெருகி வரும் நீர்கள் வெளியேறுகின்றன. மேலும் இந்த நாட்டை உங்கள் கண்களா நீங்கள் ஆராய்ந்தால், இங்கே உருண்டையான, தேய்ந்து போன கற்கள் இருப்பதை இதன் மண்ணில் காணலாம், ஆனால் நீங்கள் மலைகள் அருகே, ஆறுகள் வலிமையோடு கீழே பெருகி வரும் இடங்களில் தோண்டிப் பார்க்கலாம், அங்கே கற்கள் பெரியவையாக இருக்கின்றன; ஆனால் மலைகளிலிருந்து சற்றுத் தள்ளி நீரோட்டம் சற்று மட்டுப் பட்டிருக்கும் இடங்களில் சிறியவையாக இருக்கின்றன; நீரோட்டம் சலனமில்லாமல் இருக்கும் இடங்களில் மணல் நிரம்பிக் கிடக்கிறது, அங்கே நீர்கள் நிலத்தில் ஊறுவதைப் பார்க்க முடியும், கடல் இருக்கும் இட்த்தில், இந்த இடமே ஒரு காலத்தில் கடலில் இருந்திருக்கலாம் என்றும் நீரோட்டங்கள் கொண்டு வந்த மணல், கற்கள் மூலமே இது உருவாகியிருக்க கூடும் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது...... “ அல் பிரூனியின் Reinaud's Extracts, பத்திரிக்கை. As. ser. 4. 1844.//
அன்பு மணக்குது அருள் சுரக்குது அரபு நாட்டிலே என்று பாட்டு எழுதும் தமிழ் கவிஞர் பாரசீக அல்பரூனியை படித்திருந்தால் தெளிவு பெற்றிருந்திருப்பார். பாரசீகத்தில் இவர்கள் கண்ணில் தென்படுவது திருடர், கொள்ளையர் போன்ற குறிப்புகள் தானே. நீ எதுவாக இருக்கிறாயோ அதுபோல்வே தான் உனக்கு பார்ப்பதெல்லாம் தோன்றும் என்ற முதுமொழியை இப்போது நன்றாக புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு இஸ்லாமியர் இந்திய நிலப்பரப்பை மெகஸ்தனீஸ் போல் 13ம் நூற்றாண்டில் விவரிக்கிறார்.
//1205. - "இந்த மொத்த நாடான ஹிந்தும், Pershaur முதல் கடலின் கரைகள் வரையும், மற்ற திசையில், Siwistan முதல் Chin மலைகள் வரை.........” - Hasan Nizaami, in Elliot, ii. 236. அதாவது, வடக்கே பெஷாவர் தொடங்கி, தெற்கே இந்தியப் பெருங்கடல் வரையும்; Sehwan (இண்டஸ் நதியின் மேற்குக் கரையில்) தொடங்கி சீனாவை கிழக்கே பிரிக்கும் மலைகள் வரை.//
வாஸ்கோடகாமா ஒரு ரோமானியராக இருந்திருந்தால் தன் பெயருடன் இந்தியாவை சேர்த்திருப்பார் என்கிறது 16ம் நூற்றாண்டு குறிப்பு.
vasgodagama
//1533. - "வாஸ்கோடகாமா ரோமானியர்களைப் போன்ற மகோன்னதமான நாட்டைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், அவர் தனது குடும்ப பாணிக்கு அழகு சேர்த்திருப்பார், அதாவது Of India என்ற அடைமொழியை தன்னோடு சேர்ப்பதன் மூலமாக. ஏனென்றால், இத்தகைய கௌரவ சின்னங்கள் ஒருவருக்கு வம்ச வழியாக கிடைக்கும் சின்ன்ங்களை விட பெருமை சேர்ப்பதாக இருக்கும், ஆனால் Scipio தான் ஆப்பிரிக்காவைக் கண்டுபிடித்த அடையாளமாக Africanus என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார், கார்னீலியஸ் என்ற தன் குடும்பப் பெயரை சூட்டிக் கொள்வதால் அல்ல.//
கிறிஸ்து பிறப்பதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் நாட்டில் காலனி படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படும் வரை இமயம் முதல் குமரி வரையிலான நிலப்பரப்பு இந்தியா, ஹிந்த் என்றும் இங்குள்ளவர்களை இந்தியர்கள் ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை இந்தக்குறிப்புகள் உறுதி செய்கின்றன.

மேற்கூறப்பட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்தளித்த ‘Digital Dictionaries of South Asia’வின் லிங்க் இதோ:
இந்தியாவை ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் 'East India Company' என்ற பெயரையே தாங்கி நின்றன.
1600 -  English East India Company (இங்கிலாந்து)
1602 - Dutch East India Company (நெதர்லாந்து)
1628 - Portuguese East India Company (போர்ச்சுகல்)
1664 - French East India Company (பிரெஞ்சு)
இதில் வேடிக்கை என்னவென்றால் போர்ச்சிகீஸ் கிழக்கிந்திய கம்பெனியின் சின்னத்தில்(logo) நம் தென்னிந்திய கோவில் இடம் பெற்றிருக்கிறது போர்ச்சிகீசியர் இந்த நாட்டிற்குள் படையெடுத்து வரும் போது இங்கு ஹிந்துக்கள் முஸ்லீம்கள் பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர். ஆனால் போர்ச்சுகீசியரோ ஹிந்து ஆலயத்தை மட்டும் சின்னத்தில் இடம்பெறச்செய்ததது இந்த நாட்டில் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும் பண்பாட்டில் அனைவரும் ஹிந்துக்கள் என்பதை உணர்த்துகிறது.
 portuguese east india company logo
தமிழ்நாட்டு அரசின் கோபுரசின்னமும் இதே கருத்தை பிரதிபலிக்கிறது. இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் தெரிந்து ஹிந்து என்பது இந்த தேசமும் அதன் குடிகளும் என்று உரக்க முழங்கியவர் நாயக்கர் ராமசாமி.
//பொதுவாகச் சொல்லப்பட வேண்டுமானால் இந்து என்பது இந்தியனைத் தான் குறிக்கும். அரபிக்காரனை ஒரு அரப் என்பது போல், இந்தியனை வட மொழியில் இந்து என்று ஆதியில் அழைக்கப்பட்டது என்பது தான் என் அபிப்ராயம்//
- (குடி அரசு, டாக்டர் பி.வரதராசலு நாயுடு கட்டுரைக்கு விடை, 8.9.1940)- பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து அவர்கள் புத்தகத்தின் 348 ஆம் பக்கத்தில் இந்த மேற்கோள் இடம்பெற்றுள்ளது.
 ஹிந்துக்களை அனுதினமும் அவதூறாக பேசிவந்த நாயக்கர் இராமசாமிக்கு தெரிந்த இந்த உண்மை ஹிந்து மஹா சமுத்திரம் எழுதிய ஐயர் இராமசாமிக்கு தெரியாமல் போனது ஏனோ?



       சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அதிமுகவினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஊர்வலத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சுப்ரமணிய சுவாமி யைக்கண்டித்து முழக்கமிட்டனர். பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினரின் பேரணியால் முக்கிய சாலைகளில் கடைகள் மூடிக்கிடந்தன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பட உதவி : வசந்த ஜீவா.

Monday 29 September 2014


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு தொலைபேசி மூலம் சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.
இந்த வழக்குக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எப்படிப்பட்டவை?
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதே மிகப்பெரிய போராட்டம் என்று சொல்லலாம். நிறைய பிரஷர்கள், சமரச முயற்சிகள் எல்லாம் நடந்தன. ஆனாலும், வழக்கை வாபஸ் பெறுவது என்ற நிலைக்கு செல்லவே இல்லை.
தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
உடல்நலத்தை காரணம் காட்டி அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் ‘அவர் சிறையில் இருக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டும்’ என்றுகூட தீர்ப்புகள் வரலாம். ஆனால், மேல்முறையீட்டில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடக் கூடாது.
இந்த வழக்கின் தீர்ப்பு, அதிமுக என்னும் பேரியக்கத்தின் ஸ்திரத்தன்மையை அசைத்துள்ளதாக கருதுகிறீர்களா?
அப்படியில்லை. இந்தியா ஜனநாயக நாடு. தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ஆரம்பத்தில் நான்கூட, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு மோடி ஏதாவது உதவி செய்வாரோ என்று நினைத்தேன். ஆனால், ‘வழக்கில் நான் தலையிட மாட்டேன். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்’ என்று அவரே என்னிடம் கூறினார். இனி ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
தமிழகத்தில் உங்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வருகிறதே?
தமிழகத்தின் சில இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 256-வது ஷரத்தின்கீழ் தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் சில ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். அதன் அடிப் படையில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த ஆளுநர் உத்தர விட்டுள்ளார். இப்போது தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
2ஜி வழக்கு தீர்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது.
சோனியா, ராகுல் மீதான ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் உங்களின் அடுத்தகட்ட செயல்பாடு என்ன?
இந்த வழக்கு குறித்த என்னுடைய வாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 1-ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது தகுந்த ஆதாரங்களை எடுத்து வைப்பேன். தீபாவளி முடிந்து டிசம்பரில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார். 

-தி இந்து.


தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 கண்ணீர் மல்க பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
கண்ணீர் மல்க பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர். 

 
பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.
அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார். 



கண்ணீருடன் பதவியேற்ற வளர்மதி, கோகுல இந்திரா. | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
2-வது முறையாக முதல்வரானார்:
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.
அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
முதல்வர் பொறுப்பேற்றார்:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.
பெங்களூர் விரைவு:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் மாலை 4.45 மணிக்கு பெங்களூர் விரைந்தார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் விரைந்தனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. 

-தி இந்து.

Sunday 28 September 2014



 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஈடுபட்ட ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான தனியார் பேருந்துகள் மற்றும் கார் வேன், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சனிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டன. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், மாலை 3 மணியிலிருந்து அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சாலைகளில் ஆங்காங்கே இறக்கிவிடப்பட்டனர். இதில், அருகிலுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் நடந்தே சென்றனர்.

திருச்சி, துறையூர், ஆத்தூர், சேலம், கடலூர் உள்ளிட்ட வழித்தடங்களை சேர்ந்த பயணிகள் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல், குழந்தைகளுடன் பேருந்து நிலையத்திலேயே காத்து கிடந்தனர்.

மேலும் தேநீரகம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். வெளியூரிலிருந்து வந்த, பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் பயணித்த பயணிகள் துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்திலேயே இறக்கிவிடப்பட்டனர். அப்பகுதியிலும் செயல்பட்டு வந்த கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பயணிகளும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதையறிந்த, அங்குள்ள அரசு குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து சமைத்து அரசு போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு வெளியே காத்திருந்த பயணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இலவசமாக உணவு வழங்கினர்.
ஜெயலலிதா குற்றவாளி என்ற அறிவிப்பு வெளியானவுடன் அ.தி.மு.க.வினர் கருணாநிதி உருவ பொம்மை எறித்து கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
 அங்கிருந்த 50 அடி உயர திமுக கொடி கம்ப த்தை வெட்டி சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து பெரம்பலூரில் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பஸ் நிலையத்தில் குவிந்திருந்த அதிமுகவினர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு, பலக்கரை அருகே உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
 பெரம்பலூரில்



அதிமுகவினர் அழிச்சாட்டியத்தின் காரணமாக  2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் அடைக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வியாபாரிகள் அதிமுகவினரின் போராட்டத்துக்கு பயந்து பெரம்பலூரில் உள்ள உணவகங்கள், மருந்துக் கடைகள், பெட்டிக் கடைகள், தேனீரகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், மினி பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் நடமாட்டமின்றி பெரம்பலூர் நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளான பாலக்கரை, பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள், காமராஜர் வளைவு, கடைவீதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.