Friday 17 January 2014

         வ.களத்தூர் கிராமத்தில் கானும் பொங்கல் அன்று எருது ஆட்டம் ஒரு முக்கியமான  நிகழ்வாகும். பல வருடங்களாக  இந்த பண்பாட்டு நிகழ்வு எவ்வித தடையும் இல்லாமல் நடந்துவந்தது . உயர் நீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என சிலர் மனுசெய்தபோது , உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த பல கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த  நேரத்தில் ஜல்லிக்கட்டையும் , எருது ஆட்டத்தையும் சேர்த்து குழப்பி, எருது ஆட்டத்தை தடைசெய்யும் நிலைக்கு அரசும் அதன் எந்திரமும்  கொண்டுவந்து சேர்த்தன. இந்த குழப்பம் வ.களத்தூரில் மட்டுமல்லாமல் , பல ஊர்களில் பலவிதமாக நடந்து வந்த இந்த மாடுபிடி நிகழ்வுகளை  , ஜல்லிக்கட்டு என்ற ஒரு வரையறைக்குள்  அடக்கி,  அனைத்துவிதமான மாடுபிடி நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கும் முடிவுக்கு அரசு வந்துநின்றது. இதனால்தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மாடுபிடி நிகழ்வுகள் நடைபெறமுடியாத அளவுக்கு அரசு கெடுபிடிகளை அதிகமாக்கியது.

         நமது ஊர் முக்கிய பிரமுகர்களின் முன்முயற்சியின் காரணமாக, மாடு பிடி நிகழ்வு முழுவதுமாக தடைசெய்யப்படமால், மாடுகளை பிள்ளையார் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிகளில் தீப ஆராதனை காட்டி , வ.களத்தூர் தேரடி திடலில் அனைத்து மாடுகளையும் கொண்டு வந்து நிறுத்தி,  தீப ஆராதனை காட்டி அவரவர் வீடுகளுக்கு திரும்ப ஓட்டிச்செல்லும் ஒரு புதிய நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக அரசின் அனுமதியுடன் காவல்துறையின் முழு  பாதுகாப்புடனும்  நடைபெற்று வந்தது.

vkalathur வ.களத்தூர் தேரடி திடல்  

         வ.களத்தூர் தேரடிதிடல் நமது உரிமைக்கான ஒரு அடையாளம் . அதில் நமது உரிமையை நிலைநாட்ட, வருடம்தோறும் விழாக்களை கோலாகலமாக நாம் இத்திடலில் நடத்திவருகிறோம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக, மாட்டுக்கு  தீப ஆராதனை காட்டும் நிகழ்வு, காணும் பொங்கல் அன்று நம் ஊரில் ஏற்பட்ட சில இறப்பு காரணமாக  நடத்தப்படவில்லை .
      இந்த வருடம் கண்டிப்பாக மாடுகளுக்கு தேரடி திடலில் தீபாரதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே பதிலாக இருந்தது . இந்த வருடம் மாடுகளுக்கு தீபாராதனை காட்டும் நிகழ்வு நடத்தப்படாததற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன . மாடுகளுக்கு  கோமாரி நோயினால் நடத்தப்படவில்லை என்றார்கள், நமது ஊரில் குழந்தை இறந்ததுதான் காரணம்  என்றார்கள். மக்கள் ஆளாளுக்கு ஒரு பதிலை தந்துகொண்டிருந்தார்கள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரும் பதில் சொன்னதாக தெரியவில்லை .

      வருடம் தோறும் மாடு பிடி நிகழ்வுகளுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதிக்கான விண்ணப்பம் ஊர் மக்களின் சார்பாக, ஊர் முக்கியஸ்தர்களால் காவல்துறையிடமும் , மாவட்ட நிர்வாகத்திடமும்  கொடுக்கப்பட்டுவிடும். மேலும் ஊர் பொதுக்கூட்டமும் இது தொடர்பாக பிள்ளையார் கோவிலில் நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

             மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு பொங்கல் கூவிய பிறகு பிள்ளையார் கோவிலுக்கு மாடுகளை கொண்டு வந்து தீப ஆராதனை செய்யும் நிகழ்வும் நடைபெறவில்லை. ஊரில் ஆளாளுக்கு ஒன்றாக பேசினார்களே ஒழிய கேட்க வேண்டியவர்களிடம் யாரும் கேட்டதாக தெரியவில்லை .

vkalathur மேட்டுச்சேரியில் மாடுபிடி நிகழ்ச்சி
      சரி எப்படியாவது மாடு பிடி நடக்கும் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே கிட்டியது. ஆனால் அதே வேளையில் மேட்டுச்சேரி , வன்னாரம்பூண்டி மற்றும் ராயப்பா நகரில் மாடுபிடி நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதனை கண்டு வ.களத்தூர் இளைஞர்கள் , சுற்றுவட்டார கிராமங்களுக்கு முன்மாதிரியாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவந்த மாடு பிடி நிகழ்வு வ.களத்தூரில் நடைபெறாதது குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். இப்படியே விட்டால் நமக்கென எந்த  ஒரு பண்பாட்டு பாரம்பரியமும் மிஞ்சாது என்ற மனக்குமுறலில், பொங்கல் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்த்தை கண்கூடாக காணமுடிந்தது. இளைஞர்களின் மன எரிமலை எப்போது வெடிக்கும் என்பது விரைவில் நடக்கும் ஊர் பொதுக்கூட்டத்தில் தெரியும்.

இவண்-வ.களத்தூர் நலவிரும்பி.

குறிப்பு-( இது கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும் வ.களத்தூர் செய்தி இதற்கு பொறுப்பல்ல.)
     

0 comments:

Post a Comment