Wednesday 23 July 2014


இந்தியா ஜனநாயகக் குடியரசாக மட்டுமல்ல, செக்யூலர் குடியரசாகவும் (Democratic Socialistic Secular Republic) உள்ளது. செக்யூலர் என்பதற்குத் தரப்பட்ட விளக்கம் மதங்களுக்கு அரசு அப்பாற்பட்டது என்பதாகும்.
செக்யூலரிசம் என்பது மதச் சார்பற்றது, சமயச் சார்பற்றது, மார்க்க சார்பற்றது என்ற அர்த்தம் பெற்றது. சார்பற்றது பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அது மதத்திற்கு எதிரானது என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது நமது துரதிருஷ்டம். இந்தப் புரிதல், அரசே மதத்திற்கு எதிரானது என எண்ணுமாறு செய்துவிட்டது.
இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள். இவர்கள் 70 சதவீதம் பேர். எண்ணிக்கையில் சொன்னால் 80 கோடி பேர். இவர்களோடு ஒப்பிடுகிற பொழுது இஸ்லாமியர்கள் 14 சதவீதம். ஏறக்குறைய 15 கோடி பேர். இவர்களைச் சிறுபான்மையினர் என்கிறோம்.
இஸ்லாம் மதத்தின் ஆட்சி நடக்கும் பாகிஸ்தானின் ஜனத்தொகை 19 கோடி. இதே போல்தான் முஸ்லிம் நாடான வங்கதேசத்தின் ஜனத்தொகை 15 கோடி. அந்த நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். அங்கு ஹிந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்களைச் சிறுபான்மையினர் (Religious Minority) என்றே அரசியல் சட்டப்படி கூறுகிறோம்.
முஸ்லிம்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்கள் இந்தியாவில் 3 கோடி பேர். சீக்கியர்கள் 2 கோடி பேர், பெளத்தர்கள் 1 கோடி பேர், ஜைனர்கள் 40 லட்சம் பேர். இவர்களெல்லாருமே சிறுபான்மையினர் - அதாவது 80 கோடி ஹிந்துக்களோடு ஒப்பிட்டால்.
மதச்சார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானது என்ற புரிதலால், ஹிந்து மதத்தினர் பெரும்பான்மையாக இருந்தும், சிறுபான்மையினரைப் போல சிறப்பாக நடத்தப் படுவதில்லை.
உதாரணத்திற்கு, ஒரு தொடக்கப் பள்ளியையோ, உயர்நிலைப் பள்ளியையோ அல்லது தொழில் கல்லூரியையோ ஹிந்து பெயர் கொண்ட ஒருவர் நிறுவினால், அந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்களைச் சுழற்சி முறையில்தான் நிரப்பியாக வேண்டும். அதுவும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலிலிருந்துதான் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறையில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பணி இடங்களை, அவர்களில் தகுதியானோர் கிடைக்கும் வரை வேறு ஜாதியினரை நியமிக்காமல் வைக்க வேண்டும்.
இதேபோன்ற கல்வி நிலையத்தை ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லிமோ, சீக்கியரோ நிறுவினால், இத்தனை விதிகளும் அவர்களுக்குப் பொருந்தாது. இதுதான் சமயச்சார்பற்ற அரசு நடவடிக்கையாக இங்கே நீடித்து வருகிறது.
சமயச் சார்பின்மை (Secularism) கோட்பாட்டிற்கு எதிரானதாக, ஹிந்து மதத்தை வகுப்புவாதம் (Communal) எனப் பேசுகின்றனர். வகுப்புவாதம் என்றால் ஹிந்து வகுப்புவாதம் மட்டும்தானா உள்ளது? மற்ற மத வகுப்புவாதங்கள் இல்லையா?
செக்யூலர் - கம்யூனல் என்ற இந்த இரண்டு சக்திகள் அரசியல் தளத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படுகின்றன. செக்யூலர் என்பது ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகள் என்றும், கம்யூனல் என்பது ஹிந்து மதத் தீவிரவாத சக்திகள் என்றும் பேசப்படுகின்றன.
வாஜ்பாயை பிரதமராக்கிய மக்கள், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை, தேசியவாதியாகத்தான் பார்த்தார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திரமோடியை பிரதமர் ஆக்கியிருக்கும் மக்களும், அவரை வகுப்புவாதியாகப் பார்க்கவில்லை. தேசியத் தலைவராகவே பார்க்கிறார்கள்.
இந்திய அரசியலில் இந்த செக்யூலரிசம் என்பது நடைமுறையில் ஹிந்து மதத்திற்குப் பாதகமாகவும் சிறுபான்மை மதங்களுக்குச் சாதகமாகவும் கையாளப்பட்டுவிட்டது ஒரு மிகப்பெரிய துயரம்.
செக்யூலரிசத்தை நாம் எங்கிருந்து பெற்றோம் என்பதைப் பற்றி அறிஞர்கள் பலர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர் கே.என். பணிக்கர், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குள் இதை நேருஜிதான் புகுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் கிறிஸ்துவ மதத்திற்குக் கீழ்ப்படிந்துதான் இங்கிலாந்து ஆட்சி நடந்தது. அன்றைக்கு ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்கள் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வந்தன. தேவாலயங்களை மீறி அரசாங்கம் செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை மத குருமார்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.
அரசாங்கம் சுயேச்சையாகச் செயல்பட வேண்டுமானால், இந்தத் திருச்சபைகளின் ஆதிக்கத்திலிருந்து அரசாங்கத்தை விடுவித்தாக வேண்டுமென்று தீர்மானித்த அறிஞர்கள் செக்யூலரிசம் என்ற சிந்தனையை உருவாக்கினார்கள்.
செக்யூலரிசத்தைப் பின்பற்றும் ஓர் அரசு, மதத்திற்கு மரியாதை செய்ய வேண்டுமே தவிர, அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றனர். இதுதான் ஐரோப்பாவில் நடந்தது.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ஜவாஹர்லால் நேரு போன்றவர்களை இப்புதிய கருத்து கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.
இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இது வெறும் குடியரசாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் சமதர்மக் குடியரசாகவும் கலாசார ரீதியில் சமயச் சார்பற்ற குடியரசாகவும் உருவாக வேண்டும் என்று நேருஜி விரும்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதைகளும் அதை ஏற்று அவ்வாறே செய்தார்கள்.
செக்யூலரிசத்தை "மதச் சார்பற்ற கோட்பாடு' என்றே நாம் பிரசாரப்படுத்தி வந்துள்ளோம். மதச்சார்பற்ற அரசு என்பதை மதத்திற்குச் சம்பந்தமில்லாத அரசு என்றும், "சம்பந்தமில்லாதது' என்ற வார்த்தையை "அக்கறையில்லாத' என்றும் காலப்போக்கில் "எதிரானது' என்றும் சில சக்திகள் ஆக்கிவிட்டன.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும், கடவுள் நம்பிக்கையுள்ள மத போதகர்களும் செக்யூலரிசத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
செக்யூலர் அரசு என்பது மத அக்கறையற்ற அரசு அல்ல. மதங்களுக்கு எதிரான அரசும் அல்ல. சிறுபான்மை மதத்தாரை அச்சுறுத்தும் அரசும் அல்ல. உண்மையில் செக்யூலரிசத்தை சமயச் சார்பற்றது என்பதைவிட, சமய சமத்துவ முடையது என்றே கூற வேண்டும்.
தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளில் இன்னின்ன பொருள்கள் இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துத் தேர்தலைச் சந்திப்பது ஒரு மரபாகவே ஆகிவிட்டது.
இலவசத்தால் எப்படி வாக்குவங்கி உருவாக்கப்படுகின்றதோ, அதேபோல கிறிஸ்தவ மதத்தாரின் வாக்குகளையோ, முஸ்லிம் மதத்தாரின் வாக்குகளையோ ஒன்று திரட்டுவதற்கு அரசியல் கட்சிகள் ஓர் உபாயத்தைக் கையாளுகின்றன.
நாங்கள் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசு வேலையிலும் கல்வி நிலையங்களிலும் ஒதுக்குவோம் என்று கூறப்பட்டதையும், அது சட்ட விரோதமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதையும் பலமுறை கண்டிருக்கிறோம்.
ஆந்திராவில் முன்பிருந்த காங்கிரஸ் அரசு 30 சதவீத இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மத ரீதியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஒதுக்கியது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 25 சதவீதமாகக் குறைந்தது.
இந்த இடஒதுக்கீடு வசதியான முஸ்லிம்களுக்கு அல்ல என்றும், ஏழ்மை நிலையிலுள்ள சுமார் ஒரு கோடி முஸ்லிம்களுக்கு மட்டுமே என ஆந்திர அரசு விளக்கம் அளித்தது. ஆந்திர அரசு அறிவித்த இந்த மத ரீதியான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதேபோல கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்தபோது, தமிழ்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகளே அதை நிராகரித்துவிட்டதும் நினைவு கூரத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ. கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியோ, எதிர்க்கட்சி ஆகக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கிறது.
இந்தத் தோல்விக்கான காரணத்தை சென்ற மாதம் பிரேதப் பரிசோதனை செய்த, கை சுத்தத்துக்குப் பெயர் பெற்ற பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணி, திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சி.கே. கோவிந்தன் நாயரின் நினைவுநாள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், "காங்கிரசின் மதச்சார்பின்மையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சற்றுச் சரிந்துள்ளது. இதை நாம் பரிசீலிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாகும்.
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பதில் கட்சி சறுக்கலைச் சந்தித்ததாக மக்கள் மனதில் சந்தேகம் இருக்கின்றது. அனைத்துப்பிரிவு மக்களுக்கும் சமநீதி கிடைக்கவில்லையோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதை நீக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.
இது காலம் கடந்து பேசப்பட்ட மகத்தான உண்மை. இவருடைய பேச்சை ஒரு பிரதான வாக்கு மூலமாகவே எடுத்துக் கொண்டு, சுராஜ்குண்டில் புதிய பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அரசியல் போதனை செய்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தலைவர் எல்.கே. அத்வானி, கிறிஸ்தவர் ஏ.கே. அந்தோணியின் பேச்சைக் கபடமில்லாத ஒரு வெள்ளைப்பேச்சு' (Plain - Speak) என்று வர்ணித்திருக்கிறார்.
அதோடு நிற்காமல், காங்கிரஸ் கட்சி, தான் கடைப்பிடித்து வந்த செக்யூலரிசத்தை அமில சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி, பா.ஜ.க. எப்போதும் கூறி வந்த ஒன்றை நினைவு படுத்தியுள்ளார்.
செக்யூலரிசத்தில் போலி, அசல் என இரண்டு உண்டு. காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்தது போலி செக்யூலரிசம் (Pseudo Secularism). பா.ஜ.க. கடைப்பிடித்தது மத சமத்துவமான அசல் செக்யூலரிசம். அசல் செக்யூலரிசத்தில் வாக்கு வங்கி இல்லை, இடஒதுக்கீடு இல்லை, சலுகை இல்லை, சிறுபான்மை - பெரும்பான்மை என்ற வரையறை இல்லை.
ஏ.கே. அந்தோணி பேசியதை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்களும் பேசினால்தான், அந்தோணியின் பேச்சுக்கு மரியாதை ஏற்படும். அந்தோணியை வழிமொழிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களோ, இல்லையோ, நாடு நலம் பெற நாம் பேச வேண்டும்.
கட்டுரையாளர்: பொறுப்பாசிரியர், ஓம் சக்தி மாத இதழ்.

0 comments:

Post a Comment