Saturday 29 November 2014


புதுடெல்லி: திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் பேசும்போது, ''திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், தி.மு.க. உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இந்நிலையில், இதற்கு உடனடியாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, ''தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், திருக்குறளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-நியூஸ் விகடன்.

0 comments:

Post a Comment