Saturday 22 November 2014



 உலக இந்து சம்மேளனம் (World Hindu Congress) நேற்று தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போனாலும் அரசியல் மொழியை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது போலிருக்கிறது. போகட்டும். இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று.
* தொடக்க விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டது உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள் அனைவரையும் பெருமைப் பட வைக்கும் விஷயம். சிறப்பிடம் தந்து அவரை இந்த விழாவுக்கு அழைத்த அமைப்பாளர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள். “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. குறிப்பிட்டார். தம் மக்களின் வாழ்வுரிமைப் பிரசினையை, “இந்துக்களின் துயரம்” என்று தமிழ் மாகாண முதல்வர் ஒருவர் உலக அரங்கில் முன்வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான பௌத்தர்கள் வாழும் நாடான இலங்கையின் அரசு, இதுவரை மரியாதைக்குரிய தலாய் லாமா அவர்களை சீனாவில் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு தன் நாட்டுக்கு அழைக்கவில்லை என்பதையும் குத்திக் காட்ட அவர் மறக்கவில்லை. காலனிய ஆட்சி கிறிஸ்தவ மதமாற்றங்களின் மூலம் இலங்கைத் தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க முயன்றதையும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
world_hindu_congress_2014_1
* 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல். இந்த அடைமொழி நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அந்த ஆட்சி தற்காலிக கூட்டணிகளின் பிடிமானத்தில் அமைந்த ஒன்று. எனவே, இந்தப் புகழுரைக்கு இப்போதைய அரசே முற்றிலும் தகுதியுடையதாகிறது. * இந்துக்கள் ஒன்றிணைந்து பாரதத்தை உலக குருவாக ஆக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்தார். “ஒரு உண்மையான இந்து ஒவ்வொரு வேற்றுமையிலும் ஒருமையைக் காண்கிறான். வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைக் காணும் இந்த இந்து தர்மத்தின் இயல்பே நமது சமூகத்தை சமநிலையுடனும் அமைதியாகவும் வைத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
* உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார். இந்துக்களுடனும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்களுடனும் நீடித்த அன்புடனும் பரிவுடனும் இருப்பவர் அவர். சீனத்தின் வல்லாதிக்கத்தால் உரிமை இழந்து அலையும் திபெத்திய மக்களுக்கு இந்து தேசம் அன்பும் ஆதரவும் அளித்து வருவதை என்றும் மறக்காதவர். இந்து, பௌத்த மதங்களிடையேயான நல்லுறவுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்பவர். பௌத்தத்தின் பெயரால் இந்துப் பண்பாட்டின் மீதும், இந்து தெய்வங்களின் மீதும் வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் பகுத்தறிவு ஜந்துக்களும், அம்பேத்கரிய புரட்சியாளர்களும், சிங்கள இனவெறியர்களும் பௌத்த ஞானத்தின் நடமாடும் திருவுருவாகத் திகழும் தலாய் லாமாவின் கூற்றுக்கு செவிமடுக்கப் போவதில்லை தான். ஆயினும், இந்த முக்கிய நிகழ்வில் அவர் தனது கருத்தைத் தெளிவாக இவ்வாறு முன்வைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
* 50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். 45 தனிப்பட்ட அமர்வுகளில் 200 பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர்.
* இளைஞர் சக்தி, பொருளாதாரம், அரசியல், கல்வி, அமைப்புகள், மகளிர், ஊடகம் ஆகிய துறைகளை மையப் படுத்தி தனித்தனி மாநாடுகள் இந்த சம்மேளத்தினூடாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
Hindu Youth Conference
Hindu Economic Conference
Hindu Political Conference
Hindu Educational Conference
Hindu Organizational Conference
Hindu Women Conference
Hindu Media Conference
இந்துக்களைப் பாதிக்கும் அடிப்படையான பிரசினைகளை மனதில் கொண்டு மிகச் சரியாக இந்தத் துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் அமைப்பாளர்கள். இந்த மாநாடுகளில் நடைபெறும் விவாதங்கள் இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் பல பகுதிகளில் ஒடுக்கப் பட்டு துயருறும் இந்துக்களின் மீட்சிக்கும், உலக நன்மைக்கும் வலு சேர்க்கட்டும்.
ஸங்கச்சத்வம், ஸம் வதத்வம் – ஒன்றிணைந்து பயணிப்போம், ஒன்றிணைந்து மொழிவோம்.
யதோ தர்ம: ததோ ஜய: – அறம் எங்குளதோ, அங்குளது வெற்றி.
2014ம் ஆண்டின் உலக இந்து சம்மேளனம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
சம்மேளனத்தின் வலைத்தளம்: http://www.worldhinducongress.org/
சம்மேளனம் குறித்த செய்திகள்:
http://www.thehindu.com/…/unite-to-make-…/article6623672.ece
http://samvada.org/20…/news/vhp-world-hindu-congress-begins/
http://lokmarg.com/hindus-persecuted-in-sri-lanka-wigneswa…/
‪#‎WorldHinduCongress‬ ‪#‎WorldHinduCongress2014‬

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

0 comments:

Post a Comment