Tuesday 9 December 2014


அமைவிடம்:
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஊட்டத்தூர் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூரின் மேற்கில் மிக மேடான மலை போன்ற உயரமான இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் வழக்கில் மேட்டுக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் சோழர்காலத்தில் கட்டப்பட்டது என்பதால் சோழீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கின்றனர்.
கோவிலின் அமைப்பு.

கருவறை அர்த்தமண்டபம், முன் மண்டபம், திருச்சுற்று மாளிகை ஆகிய கட்டிடப் பகுதிகளுடன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. திருச்சுற்று மாளிகையின் மேற்கு பகுதி மட்டும் தற்போது உள்ளது. மற்ற பகுதிகள் இடிந்து விழுந்துவிட்டன. அதேபோல் முன்மண்டபத்தின் எதிரில் இருந்த நந்தி, பலிபீடம், அம்மன் சன்னதி ஆகியனவும் இடிந்து கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. விமானப் பகுதியும் இடிந்துவிட்டது. சிவலிங்கம் தரையில் புதைந்து ருத்ர பாகம் மட்டும் பார்க்கும்படியாக உள்ளது.

உபானம், ஜகதி, முப்பட்டை, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை சுவர்ப்பகுதி, பிரஸ்தம், பூதகண வரிசை, அதற்குமேல் கர்ணக் கூடு, வியாள வரி ஆகிய கட்டிகக்கூறுகள் கொண்டதாக மிக கம்பீரமான கட்டுமான எழிலுடன் இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கற்கள் நன்கு இழைக்கப்பட்டு அழகாக விளங்குகிறது. சுவர்களில் தேவகோஷ்டங்கள் ஏதும் இல்லை. முன்மண்டப தெற்கு வாயில் சோபானமண்டபம் போல் படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. சிங்கமுக தூண்களும் இக்கோவிலை அலங்கரித்துள்ளன. அம்மன் சன்னதியில் அம்பாள் சிற்பம் இல்லை. விநாயகர் சிற்பம் மட்டுமே உள்ளது. சொர்ணாம்பிகை என்னும் பெயர் அம்மனுக்கு இருந்ததாக ஊர் பெரியோர்கள் கூறுகின்றனர்.

கல்வெட்டுகள் காலம் கட்டியவர் கோவிலின் பெயர் :
இக்கோவில் முன்மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு இரண்டாம் குலோத்துங்கனின் 13 ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. இதன்படி இக்கல்வெட்டு கி.பி. 1146 -ல் இன்றைக்கு 868 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைமையுடையது ஆகும்.

அரியலூர் அரசு கலைக்கல்லுரி வராற்றுத்துறை வெளியிட்ட ஊட்டத்தூர் சிவன்கோவில் வரலாறு.

நன்றி- https://www.facebook.com/saravanan.sivathanu

0 comments:

Post a Comment