Saturday 6 December 2014

ஹாசிம் அன்சாரி
அயோத்தியில், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில், கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து, பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதன் முக்கிய மனுதாரர் 93 வயதான ஹாசிம் அன்சாரி ஆவார். அவருக்கும், பரமன்ஸ் ராம்சந்திர தாஸ் என்பவருக்கும் இடையேதான் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.


திடீர் விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கில் இருந்து விலகுவதாக முக்கிய மனுதாரர் ஹாசிம் அன்சாரி திடீரென அறிவித்துள்ளார். இதனால், இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அயோத்தியில், ஹாசிம் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தி வழக்கு, அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் இதில் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றன.
குறிப்பாக, உத்தரபிரதேச மந்திரி அசம்கான், இப்பிரச்சினையில் அதிக ஆதாயம் அடைந்துள்ளார். அவர் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி அமைப்பாளராக இருந்தார். திடீரென அதை விட்டு விலகி, அரசியல் ஆதாயத்துக்காக, சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விட்டார்.
2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வந்தபோது, கோர்ட்டுக்கு வெளியே பேசி சுமுக தீர்வு காணலாம் என்று நான் கூறினேன். ஆனால், அசம்கான் போன்ற அரசியல்வாதிகள்தான், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதை அசம்கான் விரும்பவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வேண்டுமானால், அசம்கான், தொடர்ந்து வழக்கை நடத்தட்டும். டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் நான் பங்கேற்க மாட்டேன். அன்று அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்து விடுவேன்.
ராமர் கோவில்
அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், தற்போது தற்காலிக கூடாரத்துக்குள் ராமர் கோவில் உள்ளது. அதற்கு பதிலாக அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். மக்கள், மாளிகையில் வசிக்கும்போது, கடவுள் மட்டும் கூடாரத்தில் இருக்கலாமா?
அசம்கான், சித்ரகூட்டில் உள்ள 6 கோவில்களுக்கு சென்றுள்ளார். ராமர் கோவிலுக்கு செல்வதற்கு மட்டும் ஏன் அவர் வெட்கப்பட வேண்டும்? அயோத்தியில், ஏற்கனவே ராமர் கோவில் இருப்பதாக அசம்கான் கூறியுள்ளார். பிறகு ஏன் இந்த வழக்கை நடத்தி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் முட்டாள்களாக்க வேண்டும்?
இவ்வாறு ஹாசிம் அன்சாரி கூறினார்.


0 comments:

Post a Comment