Wednesday 26 March 2014

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர் என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாகவே தங்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கியிருக்க வேண்டும். இதுகுறித்த விவரத்தை வேட்பு மனுதாக்கலின் போது முறையாக தெரிவிக்க வேண்டும். வேட்பாளர் செலவிடும் தொகை இந்த வங்கிக் கணக்கின் மூலமாகவே பணப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு கொடி மற்றும் 8க்கு 4 என்ற அளவிலான பதாகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் வர நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே, கூட்டமாக வரக் கூடாது.
அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாராத்திற்காக பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் எஸ்பி சோனல் சந்திரா, டிஆர்ஓ ராஜன் துரை, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன் ரெட்டி, ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மலையாளம், கார்த்திகாயினி, சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசியல் கட்சிகளின் சார்பில், (திமுக) முருகேசன், (அதிமுக) சேகர், (பாமக) கண்ணபிரான், (காங்) சையது பதோருதீன்,  தமிழ்ச்செல்வன், (பாஜக) அன்புதுரை, (மதிமுக) துரைராஜ், (பகுஜன் சமாஜ்) காமராஜ், (தேமுதிக) யுவராஜ், (தேசிய வாத காங்கிரஸ்) குணசேகரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment