Sunday 26 January 2014


ஓட்டல் மற்றும் கடைகளில், நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருட்களில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத பொருட்களை, கலப்படம் செய்கின்றனர். இதை தெரிந்து கொள்ளாமல், சுவைக்காக விரும்பி சாப்பிட்டு, உடலை கெடுத்துக் கொள்கிறோம். காசு சம்பாதிக்க,
உயிரோடு விளையாடும் கயவர்களை, அடையாளம் கண்டு, தண்டனை பெற்றுத்தர
வேண்டிய, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
சாதாரண ஓட்டல்கள் முதல் பெரிய, நடுத்தர ஓட்டல்கள் வரை, பல வித உணவுகளை சமைத்து மக்களுக்கு வழங்குகின்றன. நடைபாதைக் கடைகளில், உணவு வகைகள், பாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவு வகைகளை சாப்பிடும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
தரமற்ற, கலப்பட உணவை சாப்பிட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்று டாக்டர் கூறும்போது தான், புரிந்து கொள்ள முடிகிறது. பெருங்காயத்தில் கோந்துக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கின்றனர். சர்க்கரையில் சுண்ணாம்புத் துாளும், மஞ்சள் துாள் மற்றும் துவரம்பருப்பில் 'மெட்டானில்' என்ற மஞ்சள் ரசாயனமும் கலப்படமாக சேர்க்கின்றனர்.
மிளகாய்த் துாளில் மரத்துாளை நனைத்து பொடியாக்கி, நிறமேற்றி, செங்கல் பொடியையும் சேர்க்கின்றனர். காபித் தூளில் சிக்கரி, புளியங்கொட்டையை பவுடராக்கி சேர்க்கின்றனர்.
கொத்துமல்லித் துாளில் குதிரைச்சாணத் துாள் கலப்படம் செய்யப்படுகிறது. சீரகத்தில் புல்விதை, நெய்யில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வனஸ்பதி,
உருண்டை வெல்லத்தில் 'மெட்டானில்'ரசாயனம், பாக்குத்துாளில் மரத்துாள், பாலில் மைதா அல்லது பார்லியை மாவு என கலப்பட பட்டியல் நீள்கிறது. இதே போல, நாம் அன்றாடம்
சாப்பிடும் மாத்திரை மற்றும் மருந்துப் பொருட்களில் போலிகள்
ஊடுருவியுள்ளன.
தரமான பொருட்களை தரமான இடத்தில் சாப்பிடுவதால் மட்டுமே, நம் உடலை நாம் பேணி பாதுகாக்க முடியும், அவசரத்துக்காகவும், பசிக்காகவும், எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, ரோட்டோர கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம்.
'தரமற்ற, சுகாதாரமற்ற
ஓட்டல்களிலும் உணவுகளை சாப்பிட்டால், நாம் எளிதாக நோயின் பாதிப்புக்கு தள்ளப்படலாம். அதனால், மக்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதோடு, வளரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வகைகளை தான் வழங்க வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
குமாரசாமி கூறுகையில், ''தரமற்ற உணவுகளால், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவை நேரடியாக பாதிப்புக்குள்ளாகின்றன. இதை கவனிக்காமல் விட்டால், நரம்புமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு தளர்ச்சியும், மூளைசெயலிழப்பு, ப க்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. மனிதன் வாயை பேச்சிலும், உணவிலும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது,''என்றார்.
கலப்பட உணவுக்கு எதிரான கண்காணிப்பு ஒருபுறம் இருந்தும், தண்டனை பெற்றுத்
தர வேண்டிய, உணவுப்பாதுகாப்பு ஆய்வாளர்களும் அதிகாரிகளும், வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
'கலப்படம் உறுதியானால் கடும் நடவடிக்கை'கோவை மண்டல உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்டபோது, ''உணவுபாதுகாப்பு அலுவலர்கள் சரியான முறையில் ஆய்வுப்பணி மேற்கொள்கின்றனர். உணவுப்பாதுகாப்பு சட்டவிதிகளின்படி, கலப்படம் இருப்பது ஊர்ஜிதமானபின்பே நடவடிக்கை கடுமையாக இருக்கும். கால தாமதமானலும், கலப்படம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக உணவுப்பொருள் உற்பத்தி செய்வதை நிறுத்த முடியும்,'' என்றார்.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment