Wednesday 29 January 2014

பெரம்பலூர் மாவட்ட ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குரலிசை, நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜன. 30) நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஜவகர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குரலிசை, நடனம், ஓவியப் போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் 5- 8, 9- 12, 13- 16 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் குரலிசை (வாய்ப்பாட்டு), நடனம், ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
குரலிசைப் போட்டிகளில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட அனுமதிக்கப்பட மாட்டாது. நடனப் போட்டிகளில் பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
ஓவியப் போட்டிகளில் பங்கேற்போர், போட்டிக்குத் தேவையான பொருள்களை கொண்டு வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் காலை 9.30 மணி முதல் மாணவ, மாணவிகள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டிகளில் 9-12, 13-16 வயதுப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். 

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment