Friday 16 May 2014


புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த, 1984ல், இரண்டு எம்.பி.,க் களுடன் இருந்த, பா.ஜ.,வுக்கு இப்போது, தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் மோடி. வரலாற்றுச் சாதனையாக, இப்போது, 283 இடங்களில், பா.ஜ., மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி வியூகம்
இந்த வெற்றியால், மத்தியில் நிலையான ஆட்சி அமைய உள்ளதால், பா.ஜ.,வினர் மட்டுமின்றி, தொழில் துறையினர் உட்பட அனைத்து துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மோடி தலைமையிலான, இந்த வெற்றிக்கு, ராஜஸ்தான் (25), குஜராத் (26), டில்லி (7), இமாச்சல பிரதேசம் (4), கோவா (2) ஆகிய மாநிலங்களில், அனைத்து தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றியதும் காரணம். அதுபோல், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் கூட் டணி பலத்தால், ஆந்திராவிலும், கர்நாடகாவில், கட்சியிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கிய எடியூரப்பாவை மீண்டும், பா.ஜ.,வுக்கு கொண்டு வந்த அரசியல் வியூகத்தாலும், பா.ஜ., வின் வெற்றி, இந்த முறை கணிசமாக இருந்தது.முக்கியமாக, வட கிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமில், யாருமே எதிர்பாராத வகையில், அங்குள்ள, 14 தொகுதிகளில், 7ல், பா.ஜ., வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது; ஆளும் காங்கிரசால், மூன்று இடங்களைத் தான் பிடிக்க முடிந்தது.அதேபோல், நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகளை கொண்ட, உ.பி.,யில், 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வின் இந்த சாதனைக்கு, மோடியின் வலதுகரமாக வர்ணிக்கப்படும், மாநில, பா.ஜ., பொறுப்பாளர் அமித் ஷாவின் தேர்தல் அணுகுமுறை மற்றும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.மேலும், இறுமாப்புடன் இருந்த பீகார், முதல்வர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாருக்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில், அந்த மாநிலத்தின் மொத்தமுள்ள, 40 இடங்களில், பெரும்பான்மையான இடங்களை (22) பா.ஜ., கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது.ஆளும் ஐக்கிய ஜனதா தளம், எதிர் அணியில் இருந்த காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளால், ஒன்றிரண்டு இடங்களில் தான் வெற்றி பெற முடிந்துள்ளது.மாநில ஆளும் கட்சிகளான, தமிழகத்தின், அ.தி.மு.க., மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற, அந்தக் கட்சிகளின் கனவு தகர்ந்துள்ளது.'மோடி பிரதமராகி விடக் கூடாது' என, திட்டமிட்டு அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்ட காங்கிரஸ், இரட்டை இலக்கங்களுடன் முடங்கி விட்டது. இன்று வரை ஆளும் கட்சியாக இருக்கும் அக்கட்சியால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கதி?
லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டுமானால், மொத்த இடங்களில், 10 சதவீத வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேற்று இரவு வரை வந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தால்,
காங்கிரஸ் கட்சிக்கு, 44 இடங்கள் தான் கிடைத்துள்ளன. 54 இடங்களில் வெற்றி பெற்றால் தான், 10 சதவீத இடங்கள் என்ற கணக்கு வரும். போகிற போக்கைப் பார்த்தால், காங்., 54யைத் தொடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியே இல்லாத லோக்சபா அமையும் என, இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற சூழ்நிலை, பிரதமராக இருந்த இந்திரா கொலை செய்யப்பட்ட பிறகு, 1984 பொதுத் தேர்தலில் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அனுதாப அலையால், ராஜீவ் தலைமையில் காங்கிரஸ், 415 இடங்களைக் கைப்பற்றியது. 10 சதவீத இடங்களை எந்த கட்சியும் பெறாததால், எந்தக் கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை.

திராவிட கட்சிகள் இன்றி 18 ஆண்டுக்கு பின் மத்தியில் ஆட்சி
கடந்த 1996ல், இருந்து, திராவிட கட்சிகளின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைந்ததில்லை. இதில் தி.மு.க.,விற்கே பெரும் பங்கு இருந்து உள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த நிலை, தற்போது, பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளதால், மாறிஉள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில், 37 எம்.பி.,க்களை பெற்ற போதிலும், அ.தி.மு.க.,வுக்கு மத்திய அரசில் இடம் பெறும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி யொரு தெளிவான தீர்ப்பை, தேசிய அளவில், மக்கள் எழுதி விட்டனர். எனவே, அ.தி.மு.க., பெற்றுள்ள வெற்றி, அக்கட்சியின் பலத்தை நிரூபிக்க மட்டுமே உதவியிருக்கிறது. கூடுதலாக, தேசிய அளவில், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் தேடித் தந்திருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பது எப்போது?
பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்து, பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங், இன்று மதியம், 12:45 மணியுடன் அந்த பெருமைமிகு பதவியில்இருந்து வெளியேறுகிறார்.மோடி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக, மன்மோகன் சிங், இன்று மதியம்,ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜினாமா கடிதம் அளிக்கிறார். அதன் பிறகு, சம்பிரதாய முறையில், செய்தியாளர்களை சந்தித்து, பேசுகிறார். அதன் பிறகு, இப்போதைய பிரதமர் இல்லமான, 7, ரேஸ்கோர்ஸ் வீட்டில் இருந்து, 3, மோதிலால் நேரு சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்கிறார்.மோடி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார் என்பது உட்பட, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், டில்லியில் பரபரப்பாக துவங்கியுள்ளன.

ஆறு மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை அள்ளிய பா.ஜ.,:குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், கோவா மற்றும் டில்லி என, ஆறு மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ என, நான்கு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி முதல்வராக உள்ள, குஜராத் - 26, பா.ஜ., ஆளும் ராஜஸ்தான் - 25 மற்றும் கோவா - 2, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சல பிரதேசம் - 4 மற்றும் உத்தரகண்ட் - 5, மாநிலங்களில், மொத்தமுள்ள, 69 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் உட்பட, சில தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
*ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள, 25 தொகுதி களிலும், பா.ஜ., வெற்றி பெற்றதால், அந்த மாநிலத்தில் போட்டியிட்ட, ஐந்து மத்திய அமைச்சர்களான, சச்சின் பைலட், ஜிதேந்திர சிங், சந்திரேஷ் குமாரி, நமோ நாராயணன் மீனா மற்று கிரிஜா வியாஸ் ஆகியோரும், தற்போதைய காங்கிரஸ், எம்.பி.,க்கள் ஆறு பேரும் தோல்வி தழுவினர்.
*ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில், சுயேச்சையாகப் போட்டியிட்ட, பா.ஜ., அதிருப்தி வேட்பாளர், ஜஸ்வந்த் சிங்கும் தோல்வியை தழுவினார்.
*தலைநகர் டில்லியில், ஏழு தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
 *சாந்தினி சவுக் தொகுதி யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், ஹர்ஷ்வர்த்தன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, ஆஷுதோஸ், மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
*இதுபோல், புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் மீனாட்சி லேகியும், மேற்கு டில்லியில், பர்வேஷ் வர்மாவும், வடகிழக்கு டில்லி யில், மனோஜ் திவாரியும், வடமேற்கு டில்லியில், உதித் ராயும் என, ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.*அதேபோல், யூனியன் பிரதேசங்களான, அந்தமான் நிகோபார், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றிலும், பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
*அந்தமானில், பா.ஜ., வேட்பாளர் பிஷ்ணுபாடா ராய் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர், குல்தீப் ராய் சர்மாவை தோற்கடித்துள்ளார். சண்டிகரில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான,பவன்குமார் பன்சாலை விட, பா.ஜ., வேட்பாளர் கிரண் கெர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
*தாத்ரா நகர் ஹவேலியில், பா.ஜ., வேட்பாளர், படேல் நடுபாய் கோமன்பாய், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தெல்கர் மோகன்பாய் சஞ்சிபாயை தோற்கடித்து, சாதனை படைத்துள்ளார்.
*டாமன் டையூவில், காங்கிரஸ் வேட்பாளர், கேதன் தயாபாய் படேலை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., வேட்பாளர், படேல் லாலுபாய் பாபுபாய் வெற்றி பெற்றுள்ளார்.

காங்., கூட்டணி அரசு தோல்விக்கு காரணங்கள்
*முந்தைய வாஜ்பாய் அரசின் சாதனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை.
*அமைச்சர்கள் மீதும் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், 1 லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து, 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அடுக்கான ஊழல் புகார்கள்.
*வாஜ்பாய் அரசு அறிவித்த நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமில்லாதது என ராகுல் அறிவித்தது.
*இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு, மத்திய, காங்., கூட்டணி அரசு முழு அளவு துணை நின்றதால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி.
*தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியுள்ள தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
*சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள், நம் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், நம் ராணுவ வீரர்களை கொடூரமான முறையில் கொல்வதும் கடும் அதிருப்தியை, மத்திய அரசு மீது ஏற்படுத்தியது.
*அன்றாட வீட்டு உபயோக பொருட்களான சமையல் எண்ணெய், சர்க்கரை, பெட்ரோல், டீசல் போன்றவை, 350 சதவீதம் வரை விலையை உயர்த்தியது.
*பயங்கரவாதிகளை ஒடுக்க, பா.ஜ., கொண்டு வந்த, 'பொடா' சட்டத்தை, காங்., அரசு ரத்து செய்ததால், குண்டு வெடிப்பு சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியது.
*காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு இடதுகரை சானல்களில் இருந்து முறைப்படி தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தண்ணீரை பெற்றுதர மறுத்தது.இன்னும் பல.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment