Friday 16 May 2014


1984க்குப் பிறகு, முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னால், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 16ஆவது மக்களவை மேலும் பல புதிய சரித்திரங்களைப் படைக்க இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த தலைமுறையின் தலைமையில் அமைய இருக்கும் முதல் மத்திய அரசு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்கள் அனைவருமே அடிமை இந்தியாவில் பிரிவினைக்கு முன்பு பிறந்தவர்கள். 1950இல் பிறந்த நரேந்திர மோடி பிரதமராவதன் மூலம், தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதேபோல, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கப் போவதும்கூட ஒருவிதத்தில் சரித்திர நிகழ்வுதான். 1977இல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அது கட்சிகளின் கூட்டணியாகக் காட்சி அளித்ததே தவிர, ஒரு கட்சியாக இயங்கவில்லை. கேரள மாநிலத்தையும், ஒரு சில வடகிழக்கு மாநிலங்களையும் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது என்பதும் முதல் முறை நிகழ்வு.

இந்தியாவின் பல பகுதிகளில் மோடி அலை அடித்தது என்றால், கேரளம், தமிழகம், ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நரேந்திர மோடியின் தாக்கம் காணப்பட்டது என்பதுதான் உண்மை. 50 நிமிடமே பிரசாரம் செய்த வதோதராவில், இந்தியத் தேர்தல் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 5,70,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட வாராணசியில் மெளனப் புரட்சியாக வெற்றி. நரேந்திர மோடி மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இவை வெளிச்சம் போடுகின்றன.

நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, என்னென்ன விமர்சனங்கள், எத்தனை எத்தனை எதிர்ப்புகள். அவை அனைத்தையும் பொய்யாக்கி, இந்தியா முழுவதும் புயல்போலச் சுற்றி அலைந்து, பா.ஜ.கவுக்கு சாதகமான பேரலையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கும் நரேந்திர மோடியைப் பாராட்டியே தீரவேண்டும். சுதந்திர இந்திய சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு மாநில முதல்வரால் தேசியத் தலைவராக, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் மோடி.

2002 குஜராத் கலவரத்தை நரேந்திர மோடியுடன் இணைத்து, அவர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டார் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியவர்கள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்கள் வாக்காளர்கள். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்தியும்கூட, அவரை "மரண வியாபாரி' என்று வர்ணித்து, சிறுபான்மை இனத்தவர் மத்தியில் பீதியை எழுப்பிய போலி மதச்சார்பின்மைவாதிகளின் பிரசாரத்தை மக்கள் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்பது போன்ற தவறான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 17% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் நம்பிக்கையால் இஸ்லாம் மதத்தினரே தவிர, பிறப்பாலும் உணர்வாலும் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்பது அரசியல் ஆதாயம் தேட சிலர் எழுப்பும் அனாவசிய பீதியல்லாமல் வேறொன்றுமில்லை.

அரசமைப்புச் சட்டம்தான் எனது புனித நூல் என்று நரேந்திர மோடி நமக்களித்த சிறப்புப் பேட்டியில் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையிலும், அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான பிரதமராக தான் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது போலி மதச்சார்பின்மை வாதிகளின் பொய்ப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வலிமையான, ஊழலில்லாத இந்தியா உருவாகட்டும். இளைஞர்களின் இந்தியா வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடட்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக தான் இருப்பதை உணர்ந்து, "சப்கா சாத், சப்கா விகாஸ்!'(அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக!) என்கிற கோஷத்துடன் ஆட்சியில் அமர இருக்கும் நரேந்திர மோடிக்கு நமது வாழ்த்துகள்!

0 comments:

Post a Comment