Thursday 17 April 2014

சாகித்ய அகடமி விருதுபெற்ற நாவல் ஆசிரியர் ஜோ டி குரூஸ், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவரது, 'ஆழி சூழ் உலகு' நாவலை, ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய முன்வந்த பதிப்பகமும், மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட முடித்து விட்ட மொழிபெயர்ப்பாளரும், அந்த பணியை கைவிட்டு விட்டதாக அறிவித்தனர்.

இதற்கு எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. தமிழ் எழுத்தாளர்கள், 'தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:
ஜெயமோகன், எழுத்தாளர்:
எழுத்தாளர்களுக்கு இடதுசாரி பதிப்பகத்தார் விடுக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். இது அவர்களின் பாசிச போக்கை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பகங்களில், 90 சதவீத பதிப்பகங்கள், இடதுசாரி கொள்கையைக் கொண்டதாகவே உள்ளன.
இவர்களுக்கு, வெளிநாட்டு பணம் வருகிறது. பணம் கொடுக்கும் நாடுகள், மோடி பிரதமராவதை ஏற்கவில்லை. அதனால், மறைமுகமாக இதுபோன்ற காரியங்களை, இந்தியாவில் உள்ள பதிப்பகங்கள் மூலம், எழுத்தாளர்களுக்கு எதிராக செய்கின்றனர்.
சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களில் கூட கருத்துக்களை வெளியிட்டு, சிறைக்கு சென்ற எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஜோ டி குரூசின் புத்தகத்தை வெளியிட மறுப்பது அராஜகப் போக்கையே காட்டுகிறது.
நாஞ்சில்நாடன், எழுத்தாளர்:
ஜோ டி குரூஸ் ஒரு படைப்பாளி. அவருக்கு அரசியல் கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது. அவரது அரசியல் நிலைப்பாட்டுக்காக, அவரது படைப்பை நிராகரிப்பது நியாயமற்றது. குரூஸ் எழுதிய, 'ஆழி சூழ் உலகு' மிகச் சிறந்த படைப்பு. ஐந்தாண்டுகளுக்கு முன், அந்த நாவல் வெளிவந்தபோது, அதை போற்றியவர்கள் தான் இப்போது நிராகரிக்கின்றனர்.
ஒரு படைப்பாளி, தன் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் பெற்றவன். ஆனால், அவனது அரசியல் கருத்து, இப்படித் தான் இருக்க வேண்டும் என சொல்வது அராஜகம். இந்த போக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. அதேநேரத்தில், ஒரு புத்தகத்தை வெளியிடவும், அதை மொழிபெயர்க்கவும், பதிப்பாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் முழு உரிமை உண்டு.
பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்: ஜோ டி குரூசின் தமிழ் நாவலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதை, 'நவயானா' பதிப்பகம் மறுத்துள்ளதை ஏற்க முடியாது. இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் நிலைப்பாட்டுக்காக, இப்படியொரு முடிவை அந்த பதிப்பகம் எடுத்திருக்கக் கூடாது.
ஆனால், ஒவ்வொரு பதிப்பகமும் தனக்கென சில கொள்கைகளை வைத்துள்ளது. அவர்களது கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்களை, எதிர் கொள்கை உடையவர்களின் புத்தகங்களை வெளியிடக் கூடாது என, முடிவு செய்திருப்பர். அந்த வகையில், மோடியை ஆதரிக்கும், ஜோ டி குரூஸ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர்கள் வெளியிடாமல் இருக்கலாம்.
இதுபோன்ற முடிவுகள், பதிப்புலகில் வழக்கமான ஒன்று தான்.
சாருநிவேதிதா, எழுத்தாளர்:
இந்தியாவில் எழுத்தாளராக இருக்க வேண்டுமானால், அவர் இந்துத்துவா எதிர்ப்பாளராகவும், மோடி எதிர்ப்பாளராகவும் இருக்க வேண்டும் என, பதிப்பாளர்கள், 'பிளாக் மெயில்' செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோ டி குரூசின், நாவலை மொழிபெயர்த்து, ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம் என, பதிப்பாளர் தான், அவரை நாடி சென்றார். அப்படியிருக்கையில், குரூசின் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு, அவரது புத்தகத்தை வெளியிட மாட்டோம் என்று, சொல்வது, எழுத்தாளர்களை அச்சுறுத்துவதாகும்.
இது, உளவியல் ரீதியாக, எழுத்தாளர்களுக்கு, மிரட்டல் விடுப்பதற்கு சமம். 1947ம் ஆண்டு, பாகிஸ்தான் பிரிந்தபோது நடந்த இனப்படுகொலையையும், இந்திரா இறந்தபோது நடந்த சீக்கியர் படுகொலையையும் பேச யாரும் தயாராக இல்லை. அப்படியிருக்கையில், பா.ஜ.,வுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் என, படைப்பாளிகள் மீது சிலர் மறைமுக தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
ஜோ டி குரூஸ் இந்த தாக்குதலுக்கு இப்போது இரையாகியுள்ளார். மோடியை பல ஆண்டுகளாக ஆதரித்து வரும் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை, பதிப்பாளர்கள் இனி வெளியிடுவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வா.மு.கோமு, எழுத்தாளர்:
ஒரு படைப்பாளிக்கு சொந்த கருத்துக்கள் ஆயிரம் இருக்கும். அதில், அரசியல் கருத்தும் ஒன்று. ஆனால், ஒரு படைப்பை உருவாக்கும்போது, படைப்பாளி கட்சிக்காரனாக இருப்பதில்லை. எனவே, படைப்புக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அரசியல் இல்லாமல், முழுக்க முழுக்க மக்கள் ஏற்கும் படைப்பாக இருந்தால் தான், ஒருவரின் படைப்பு பாராட்டப்படும்.
அப்போதுதான், அந்த படைப்பை, மொழிபெயர்ப்பு செய்கிறோம் என, பதிப்பகங்கள் முன்வருகின்றன. அதன்பின், அவர் இந்த கட்சியை சேர்ந்தவர் என, சொல்லி புத்தகத்தை வெளியிடமாட்டோம் என, சொல்வதில் நியாயமில்லை. அவர்கள் வெளியிடாவிட்டால், இன்னொரு, பதிப்பகம் வெளியிடும்.
வா.மணிகண்டன், எழுத்தாளர், (வலைப்பூவில் எழுதியிருப்பது):
மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அதை தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார்.
தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ டி குரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், கிரீஷ் கர்னாடும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ டி குரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.
இங்கு மோடி ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம்.
அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறுபோட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகின்றனர்.
தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகின்றனர். ஆனால் மோடிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்து விடுகிறார்கள்.

'கருத்தில் மாற்றம் இல்லை:
அதனால் கவலையும் இல்லை'
இதுகுறித்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கூறியதாவது:
டில்லியைச் சேர்ந்த, குறிப்பிட்ட பதிப்பகம், என் மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டை ரத்து செய்துள்ளதை, தனது இணையதளத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எழுத்தாளனுக்கு, சமூக பொறுப்பு அவசியம்.
கடந்த, 12 ஆண்டுகளாக, குஜராத்துக்கு தொழில்ரீதியாக சென்று வருகிறேன். அந்த அனுபவத்தில், என்னுடைய கருத்தை வெளியிட்டேன். இது, ஒருநாள் இரவில், எடுக்கப்பட்ட முடிவல்ல. எனது கருத்தில், எந்த மாற்றமும் இல்லை. எனது புத்தகத்தின், ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடும் திட்டம் ரத்தானதால், கவலை இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.


நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment