Tuesday 21 January 2014


குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 01 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் 01.02.2014 மற்றும் 15.02.2014 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, 01.02.2014 அன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஆகிய வட்டங்களுக்கும், 15.02.2014 அன்று ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய வட்டங்களுக்கும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
                இம்முகாமில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கியதற்கான சான்று, குடியிருப்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளின் பெயர்களை சேர்க்க அவர்களின் பிறப்புச்சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும்.
                குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்வோர் பெயர் சேர்க்கப்படவேண்டிய அல்லது பெயர் திருத்தப்படவேண்டிய நபருக்கான பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி நிலையத்தில் படித்துவருவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும். குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் பெயர் நீக்கப்பட வேண்டிய நபரின் திருமண அழைப்பிதழ் அல்லது இறப்புச்சான்றிதழ் நகலை கொண்டு வரவேண்டும். மனுவுடன் அசல் குடும்ப அட்டை தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்பங்கள் சிறப்புமுகாம் நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

0 comments:

Post a Comment