Saturday 12 April 2014

தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் பாரிவேந்தர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்துவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜா சிதம்பரம்.

கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை, தன்னாட்சி நிறுவனமாக மாற்றி விவசாயிகளின் விளைபொருளுக்கும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றிக்கும் மத்திய அரசு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கரும்பில் கிடைக்கும் சர்க்கரை, பாகாஸ், மொலாசஸ், மின்சாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வகையில், ஏற்கெனவே பிறப்பித்த அரசாணையை திருத்தம் செய்து கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்.
கிணறுகளிலிருந்து வெட்டி எடுக்கும் கிராவல், ஏரி, வண்டல் மண் ஆகியற்றை சிறு கனிமங்கள் பட்டியலிலிருந்து நீக்கி, கட்டணமின்றி விவசாயிகள் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேட்டூரிலிருந்து வரும் உபரிநீரை நாமக்கல், தாத்தங்கார்பேட்டை, துறையூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பும் வகையில் பாசன திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். ஏற்கெனவே ஆட்சி செய்த கட்சிகளுக்கு வாக்களித்து விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதாரம் உயரவில்லை. எனவே, நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஐஜேகே வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கப் பொறுப்பாளர்கள் பி. மாணிக்கம், வி. நீலகண்டன், ஏ. மணி, பி. கணேசன், எ. மணிவேல், என்.பி. அன்பழகன், வி. விஸ்வநாதன், எஸ்.ஆர். முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment