Sunday 9 March 2014

கீழக்கரை: துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவ விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ராமலிங்கம் (41). துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, மகனுடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். மற்றொரு மகன், சில மாதங்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நடராஜன் ராமலிங்கம் கடந்தாண்டு ஜூனில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்குச் சென் று விட்டார். தொடர்ந்து 9 மாதமாக கோமா நிலையிலேயே உள்ளார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் கோமா நிலையில் இருந்து இவர் மீளவில்லை. இதையடுத்து, இவரை தாயகம் கூட்டிச் செல்ல அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. இவர் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள், துபாயில் சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர். இவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்க கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் உள்ளனர்.தமிழக அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் இவரை அனுமதித்து சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என துபாய் ஈமான் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி-தினகரன்

0 comments:

Post a Comment