Wednesday 12 March 2014

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பெரம்பலூர் மற்றும் குன்னம் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் மூடப்பட்டன.
பாராளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தனிக்குழு உறுப்பினர்கள், பறக்கும் படை, வட் டாட்சியர்களுக்கான விளக்க கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகளை கண்காணிக்கும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சீல் வைப்பு
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் கடுமையாக கண்காணிக்கப் பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டும் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டும், வருகின்றன. தலைவர்களின் சிலைகள் துணிகளால் மறைக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பெரம்பலூர் மற்றும் குன்னம் வட்டாட்சியர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறை நகல் புத்தகம்
மேலும். தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட சிறப்பு தனிக்குழு உறுப்பினர்கள், பறக்கும்படையினர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு விதிமுறை நகல்கள் புத்தகமாக வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் அலுவலரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (வளர்ச்சி) சிவக்குமார் புதிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைவருக்கும் விரிவாக எடுத்துரைத்தார்.

நன்றி-தினத்தந்தி.

0 comments:

Post a Comment