Monday 17 March 2014

''அலோபதி டாக்டர்களின் படிப்பில், சந்தேகம் இருந்தால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் செய்யலாம்,'' என, அதன் உறுப்பினர் செந்தில் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மருத்துவ கவுன்சிலில் அரசு, தனியார் அலோபதி டாக்டர்கள், ஒரு லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். 4970 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இதில் 998 அரசு ஸ்கேன் மையங்கள் தவிர, மீதி தனியாரிடம் உள்ளன. பி.சி.பி.என்.டி.டி., சட்டத்தின் கீழ், பதிவு பெறாத சென்னையைச் சேர்ந்த 15 மையங்கள் மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மையம் மீது, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. இதில் 8 மையங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, அந்த டாக்டர்களின் இரண்டாண்டு கால மருத்துவ சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், 8 டாக்டர்களின் மருத்துவ சேவை, விரைவில் ரத்து செய்யப்படும். புதிதாக ஸ்கேன் மையங்களை லைசென்ஸ் பெறாமல், துவக்க முடியாது. ஏற்கனவே லைசென்ஸ் பெற்ற மையங்கள், முறையாக மறுபதிவு செய்ய வேண்டும். இடைவெளி விட்டு மறுபதிவு செய்தால், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். மறுபதிவு உடனே செய்யாமல், தொடர்ந்து ஸ்கேன் மையங்களை நடத்தினால், அது குற்றம். தற்போது மாவட்ட அளவில் பொது மருத்துவத் துறை இணை இயக்குனரிடம் லைசென்ஸ் அனுமதி, மறுபதிவு செய்யலாம். ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் பதிவு விவரங்கள், தனிப் படிவங்களில் சேகரிக்க வேண்டும். 'டிவி'க்களில், மருத்துவம் சார்ந்த சேவை செய்ய, 'ஸ்க்ரோலிங்' முறையில், விளம்பரம் செய்வது தவறு. சிகிச்சைக்காக மட்டுமின்றி, இந்த விளம்பரம் குறித்து, யார் புகார் செய்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாத படிப்பைத் தவிர, சில டாக்டர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் படிப்பு என, பெயர் பலகையில் எழுதியிருந்தாலும் புகார் செய்யலாம். டாக்டர்கள் படிப்பில் சந்தேகம் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி ஹை ரோடு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளரிடம் புகார் செய்யலாம். tnmedicalcounsil.org என்ற இணையதளத்தில், விவரங்களைப் பெறலாம், என்றார்.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment