Monday 17 March 2014

:''குஜராத்தில், 2002ம் ஆண்டு நடந்த மத கலவரத்திற்கு, அம்மாநில, பா.ஜ., முதல்வர், நரேந்திர மோடியை குறை கூற முடியாது; இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது,'' என, மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதான கட்சிகளில் ஒன்றான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.

மத்திய அரசில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சி, முக்கிய அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிர மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, அரசு நடத்துகின்றன.

நெருங்கிய நட்பு:



தேசிய அரசியலில் பிரபலமாக விளங்கும் சரத் பவாருக்கு, அனைத்து கட்சி தலைவர்களுடன், நெருக்கமான நட்பு உள்ளது. குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியுடன், அவர் நெருங்கிய நட்பு வைத்துள்ளார்.மோடி பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு, ஜூலையில் அறிவிக்கப்பட்டதும், மோடிக்கு ஆதரவாக, சரத் பவார், ஐ.மு.கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என, செய்திகள் கிளம்பின.

மோடி -- பவார் சந்திப்பு:



அது உண்மை தான் என்பதை உணர்த்தும் வகையில், சில மாதங்களுக்கு முன் திடீரென, மோடியை சந்தித்து பேசினார், சரத் பவார். இந்த சந்திப்பு, தேசிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, மோடி தலைமையிலான, பா.ஜ.,வின், தேசிய ஜனநாயக கூட்டணியில், சரத் பவார் சேர உள்ளதாக, செய்திகள் வெளியாயின.அதற்கு அப்போதே பதிலளித்த சரத் பவார், 'மத்திய விவசாய அமைச்சர் என்ற முறையில், மோடியை சந்தித்து பேசினேன். இதில், வேறு ரகசியம், எதுவும் இல்லை' என, கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் அளித்த பேட்டி ஒன்றில், 'குஜராத் கலவரத்தில், அம்மாநில முதல்வர், மோடி குற்றமற்றவர் அல்ல; அந்த பயங்கர கலவரத்தில், மோடியின் பங்கு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. மோடி, குற்றமற்றவர் என, நற்சான்றிதழ் கொடுத்திருப்பது தவறு' என, குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், தனியார், ஆங்கில செய்தி, 'டிவி'க்கு, சரத் பவார் அளித்த பேட்டியில், கூறியதாவது:

தோழமையுடன்:



காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், எங்களின், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இப்போதும், தேர்தலுக்கு பிறகும், மிகவும் முக்கிய கட்சியாக விளங்கும். குஜராத் முதல்வர், நரேந்திர மோடியுடன், நல்ல நட்பு உள்ளது. அவரிடம் மட்டுமல்ல, அனைத்து கட்சி தலைவர்களுடன் தோழமையுடன் உள்ளேன். என்னைப் பொறுத்தமட்டில், அரசியலில் பகைமை என்பது இல்லை.முதல்வர், மோடி தலைமையிலான, குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட கலவரத்தில், மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த கலவரங்கள் தொடர்பாக, அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை.இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. கோர்ட்டின் தீர்ப்பை, நான் ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு மாறுபட்ட தகவல் கிடைத்து இருக்கலாம்; அது பற்றி எனக்கு தெரியாது. நான், கோர்ட் சொன்னதன் அடிப்படையில், என் கருத்தை தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

'குஜராத் கலவரத்திற்கு, மோடி பொறுப்பாளி ஆக மாட்டார்' என, சரத் பவார் கூறியுள்ளதன் மூலம், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஒருவேளை அவர், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மோடியுடன் கூட்டணி சேர்வதற்கான, அச்சாரமாக, சரத் பவாரின் இந்த கருத்தை கருதலாம் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'கரசேவகர்கள்':



கடந்த, 2002ல், குஜராத்தின், கோத்ரா என்ற இடத்தில், இந்து அமைப்பினர் பயணம் செய்த ரயில், எதிர்தரப்பினரால் எரிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட, 'கரசேவகர்கள்' இறந்தனர். அதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த வன்முறையின் போது, இருதரப்பிலும், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.இதில், காங்கிரஸ் முன்னாள், எம்.பி., எசான் ஜாப்ரி உட்பட, 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி உட்பட, 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்த, சிறப்பு விசாரணைக்கு குழு, நரேந்திர மோடி உட்பட, ?58 பேரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்தது.அதை எதிர்த்து தொடரப்பட்ட, மேல் முறையீட்டு மனுவையும், ஆமதாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து, மோடி குற்றமற்றவர் என, கூறியது.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment