Monday 6 January 2014



பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையே சாரும்.
எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட, போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012 2013 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்; சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்தப் பணியாளர்கள்; ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்கள்; பல்கலைக்கழக மானியக்குழு, அனைத் திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள்; அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

நன்றி-தி இந்து.

0 comments:

Post a Comment