Wednesday 5 March 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப். 24-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் மார்ச் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் உள்ளன.
98,323 ஆண் வாக்காளர்களும், 99,170 பெண் வாக்காளர்களும், இதரர் ஒருவர் என மொத்தம் 1,97,494 வாக்காளர்கள் உள்ளனர். லால்குடி சட்டப்பேரவை தொகுதியில் 232 வாக்குச்சாவடிகள் உள்ளன. 94,449 ஆண் வாக்காளர்களும், 96,872 பெண் வாக்காளர்களும், இதரர் 10 பேர் என மொத்தம் 1,91,331 வாக்காளர்கள் உள்ளனர்.
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,02,802 ஆண் வாக்காளர்களும், 1,05,545 பெண் வாக்காளர்களும், இதரர் 5 பேர் என மொத்தம் 2,08,352 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி சட்டப்பேரவை தொகுதியில் 244 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,02,215 ஆண் வாக்காளர்களும், 1,04,171 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,06,386 வாக்காளர்கள் உள்ளனர்.
துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் உள்ளன. 99,371 ஆண் வாக்காளர்களும், 1,02,833 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,02,204 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், 1,26,229 ஆண் வாக்காளர்களும், 1,30,612 பெண் வாக்காளர்களும், இதரர் 10 பேர் என மொத்தம் 2,56,851 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன.
6,23,389 ஆண் வாக்காளர்களும், 6,39,203 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 26 பேர் என மொத்தம் 12,62,618 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் குறித்த புகார்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1800-4257031 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக, அல்லது 89036 89581 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதன்கிழமை (மார்ச் 5) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
பேட்டியின்போது, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான உதவித் தேர்தல் அலுவலர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, தேர்தல் திட்டமிடலுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் தா. மலையாளம், தேர்தல் செலவு கணக்கிற்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகாயினி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment