Friday 2 May 2014

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் (மே 3) தமிழகம் முழுவதும் 60 மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது.
தமிழகம் முழுவதும் 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் விநியோகிகப்படுகின்றன.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. வளாகம், புரசைவாக்கத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பகுதியில் உள்ள பாரதி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்களை விற்பனை மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்-லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விற்பனை மையங்களில் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 250 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 500 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது -செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25 - என்ற பெயருக்கு வரைவோலை எடுத்தோ செலுத்தலாம்.
தபால் மூலம் பெற விரும்புபவர்கள் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினராக இருந்தால் ரூ. 450 செலுத்தியும், இதர பிரிவினர் ரூ. 700 செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி என்ன? பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி.சி. மற்றும் பி.சி.ஏ.) 45 சதவீத மதிப்பெண்ணுடனும், எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். v.kalathur seithi

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment