Saturday, 28 December 2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 04.01.2014 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுகளுக்கும், பெரும் காயம் மற்றும் சிறு காயம் அடைந்த நபர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாலைவிபத்து நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 04.01.2014 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
                வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்முகாம் நடத்தப்படவுள்ளது. எனவே சாலைவிபத்தில் இறந்த நபரின் வாரிசுதாரர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது குடும்ப அட்டை நகல், வாரிசுச்சான்று, இறந்த நபருக்கான இறப்புச்சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் தவறாது இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தொழில்பயிற்சி(ITI) , வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தகவல்
பட்டயபடிப்பு முடித்துள்ள பதிவுதாரர்கள்   இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு தரேஸ் அஹமது இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                                தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் விவரங்கள் யாவும் இணையதளத்தின் வழி ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் முழுமைப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின்  பதிவு விவரங்களையும் சீரான கால இடைவெளிகளில் குறிப்பிட்ட தகுதி பதிவுதாரர்களின் வகைபாடுகள் வாரியாக இணையதளத்தில் சரிபார்த்து முழுமைப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                                எனவே பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து வகையான தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) முடித்துள்ள பதிவுதாரர்களுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள (Dip. In Agri/Hortculture) பதிவுதாரர்களுக்கும்  தங்களது பதிவு அடையாள அட்டையின் இணையதள கணினிப் பிரதி ஒன்றினை   www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டையில் பதியப்பட்டுள்ள கல்வித்தகுதிகள்  மற்றும் இதர குறிப்புகள் யாவும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் மட்டும் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகளுடன்  11.01.2014ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு  நேரில் வந்து  தங்களது பதிவு விவரங்களை இணையதளத்தில் விடுபாடின்றி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். விபரங்கள் விடுபாடுள்ள பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
 இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Friday, 27 December 2013



ரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன.புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர்.28 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன. மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார்.
அருந்ததி ராய்
இந்து கும்பலால் ஜாஃப்ரியின் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர் என விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரைடை அவுட்லுக் பத்திரிகையில் வெளியிட்டார். கூடவே மோடி இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக ஜாஃப்ரி கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்றும் சொல்லி கோடி காட்டினார். ஆனால் ஜாஃப்ரியின் மகன் ஏற்கனவே ஆசியன் ஏஜ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்போது இந்தியாவில் வாழ்ந்த அவரது வாரிசு தான் மட்டுமே அவரது இதர சகோதர சகோதரிகள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்றும் கூறினார்.பகிரங்கமாக அசிங்கப்பட்ட அருந்ததி ராய் இப்படி பச்சையாக பொய் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது.ஆனால் பொய்க்கு மன்னிப்பு கேட்பதில்கூட அருந்ததிராயால் பொய் சொல்ல முடியும்.
நச்சல்களுடன் அருந்ததி ராய்
‘அன்று சமன்புராவில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து பெண்களில் ஜாஃப்ரியின் மகள்கள் இல்லை.’ ஆனால் மார்ச் 2002 முதல் வாரம் வரை இந்த பலாத்காரம் குறித்த செய்திகள் சமன்புராவிலிருந்து கலவரங்களை ரிப்போர்ட் செய்த பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. மார்ச் இரண்டாவது வாரம் முதலே வர ஆரம்பித்தன. பிப்ரவரி 28 கலவரங்கள் குறித்த செய்திகள் மார்ச் 1 ஆம் தேதி வந்த ரிப்போர்ட்கள் எதிலும் அவை இல்லை. ஒரு கட்டத்தில் இந்த போலி மதச்சார்பின்மை சக்திகளின் பிரச்சார பொய்கள் எந்த அளவு இருந்தது என்றால், ஏப்ரல் 2002 இல் நஃபீஸா ஹுசைன் எனும் (மோடிக்கு எதிரான) தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் பல அமைப்புகளையும் ஊடகங்களையும் சிறுபான்மை சமுதாய பெண்கள் கலவரங்களில் சந்தித்த வன்முறைகளை பல மடங்கு அதிகரித்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். உண்மையில் நடந்தது என்ன? காவல்துறை விரைந்து வந்தது. தீயணைக்கும் படையும் வந்தது. ஆனால் காவல்துறை ஒரு பெரிய கலவரக் கும்பலை எதிர்க்க வேண்டி இருந்தது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. கலவரக் கும்பலில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டனர். கலவரக் கும்பலால் தீயணைப்பு படை வேன் நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் மேல் காவல்துறை குல்பர்காவில் வாழ்ந்த 250க்கும் அதிகமான இஸ்லாமியரில் 200 பேரை காப்பாற்றினார். அவர்களால் காப்பாற்றப்பட முடியாமல் போன ஐம்பதுக்கும்அதிகமான இஸ்லாமியரில் ஜாஃப்ரியும் ஒருவர்.இந்த படுகொலை குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகள் செய்ய ஆரம்பித்த புனைவுகளில் 2006 க்கு பிறகுதான் ஜாஃப்ரியின் மனைவி தனது கணவர் முதலமைச்சர் மோடிக்கு தொலைபேசி உதவி கேட்டதாகவும் ஆனால் அதை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டார்.2002 இல் இருந்து 2006 க்குள் நானாவதி கமிஷன் முன்னால் சாட்சியமளித்த போது ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் ஸாக்கியா ஜாஃப்ரி, மோடிக்கு எதிராக இயங்கும் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட், தீஸ்டா செதால்வத் ஆகியோர் இணைந்து மோடிக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்கினார்கள். குல்பர்கா கலவர படுகொலையில் மோடிக்கு பங்கு உண்டு என்பதாக ஒரு பிரச்சார மாயையை அவர்கள் உருவாக்கினார்கள். இது நீதித்துறைக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் ஒரு தனி சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது.
சஞ்சய் பட்

சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:
சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.
இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.
மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்?
எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.
இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார்.ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை. 

நன்றி-http://www.tamilhindu.com
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம்  - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: 



லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம். அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருக்க வேண்டும்
லஞ்சம் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்று நினைப்பது முறையான செயல் அல்ல. எனவே பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் 94441-75000 என்ற எண்ணிலோ, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளரிடம் 94450-48952, 94450-48862 என்ற எண்களிலோ அல்லது அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday, 26 December 2013

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில்  இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்களை மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம். இடைத்தரகர்களை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
                விவசாயிகளுடனான வேளாண் உற்பத்திக்குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2013) நடைபெற்றது.
                இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
வேளாண் விளைபொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் ஈட்டும் இடைத்தரகர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியர் தலைமையில் விரைவில் குழு அமைக்கப்படும். விவசாயிகளும் இடைதரகர்களை நம்பாமல் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளைபொருட்களை இடைதரகர்கள் யாருமின்றி நேரடியாக பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக அதிக விலைக்கு  விற்பனை செய்திடலாம்.  ஒழுங்குமுறை கூடத்தில் மிககுறைந்த வாடகையில் இருப்பு வைத்திடலாம்.
பருத்தி பயிர்கள் நோய்தாக்குதலுக்கு உள்ளானதற்கு வழங்கப்பட்ட விதைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவசாயிகள் கருதுவதால் அந்த விதைகளை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டில் தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் 5,000 ஹெக்டேரில்  தோட்டக்கலை பயிர்களை பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு விவசாயிகள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.ஏ. சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு. திரு. வே. அழகிரிசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள், விவசாய சங்ககங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
      செய்தி வெயீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 22.12.2013 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28.12.2013 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிலம் வாங்கும் திட்டம்,  இருபாலருக்குமான நிலம் மேம்பாடு திட்டம்,  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பெட்ரோல் டீசல் கேஸ் மற்றும் சில்லரை விற்பனை நிலையம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்  மருத்துவமனை, மருந்துக்கடை, கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாரா கடனுதவி விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி. உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 இலட்சமாக இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல் டீசல் கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.
இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கும் , தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எமுதுவோருக்கும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை. பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க மனுதாரரின் வயதுவரம்பு 25லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
                இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள்  http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். மனுதாரரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அரியவாய்ப்பை தகுதியுடைய நபர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

Tuesday, 24 December 2013


பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்ககாவல் படைக்கு வரும் ஜனவரி-8 , 2014 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதற்கான தகுதிகள் 1௦ ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் 20 முதல் 45  வரை வயது உள்ளவராக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்களது கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும்.
அம்மா திட்டம் (AMMA ‘Assured Maximum Service to Marginal People in All Villages’) வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஒரு சீரிய திட்டமாகும் . தமிழக முதல்வர் அவர்களின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தில் , வருவாய் துறையினர் 27-12-2013 , வெள்ளிக்கிழமை அன்று திருவாலந்துறை மற்றும் அகரம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அங்கேயே அதற்க்கு தீர்வு காண்பார் கள். இத்திட்டத்தின் கீழ்...........

1. பட்டா மாறுதல்,
2. குடும்ப அட்டை திருத்தம்,
3. பிறப்பு மற்றும் இறப்புச் சான்று,
4. சாதிச்சான்று , வருமான சான்று மற்றும் இருப்பிடச் சான்று.
5. வாரிசுச் சான்று,
6. முதல் பட்டதாரிச் சான்று,
7. முதியோர் உதவித்தொகை, மேலும் விவசாயிகளுக்கானபல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் வருவாய்துறையில் உள்ள பிற சலுகைகளுக்கும் இம்முகாமில் விண்ணப்பிக்கலாம்.
திரு.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.
பெரம்பலூர் சார் ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி அவர்களின் சிறப்பு  மனுநீதி நாள் நிறைவு நாள் விழா (26-12-2013) வியாழக்கிழமை  காலை 11மணி அளவில்  வாலிகண்டபுரம் கிராமம் , ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேப்பந்தட்டை வட்டாட்சியர் இரா.திருஞானம் அவர்கள் இப்பகுதி வாழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, 23 December 2013

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.12.2013 அன்று நடைபெறவுள்ளது.  மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) திரு. எம்.ஏ.சுப்பிரமணியன்  அவர்கள் தகவல்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.12.2013 அன்று காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) திரு. எம்.ஏ.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
சங்க சித்திரம் ஒன்று உள்ளது. பாரி தனது தேரை கானகத்தில் ஓட்டிச் செல்கிறான். ஒரு இடத்தில் அந்த தேரின் மீது ஒரு முல்லைக் கொடி படர்ந்துவிடுகிறது. அதை பார்த்த பாரி அந்த தேரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறான். இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது? எதன் உருவகம் அது?  நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி இதுதான். அந்த தேர் ஒரு அரசின் திட்டங்களை உருவகிக்கிறது. அதன் மூலமாகவே ஒரு அரசு செல்கிறது. அதன் மீது படரும் கொடி என்பது என்ன? இந்த சிந்தனையின் தூல உருவம் நமக்கு சுதந்திரத்துக்கு பின் உருவான இந்தியாவிலிருந்தே கிடைக்கிறது.
சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயகத்தன்மையுடன் எல்லாவிதமான விதிகளுக்கும் அப்பால் அதில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் அந்த மரபு. இந்த நவீன மரபு சிறிது சிறிதாக திரண்டு வந்து இன்று நாம் அனைவராலும் ஊழல் என அழைக்கப்படும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது. உண்மையில் இது அதிகார பகிர்ந்தளிப்புதான். எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது. சீன இந்திய போரின் போது உளவுத்துறையால் தேச பாதுகாப்பு எனும் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட சில ரெய்ட்களின் போது நேருவின் காப்புரிமை கணக்குகள் சோவியத் வங்கிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இதை கேட்டு நம் நாட்டின் இறுகிய தேசிய வாத குறுமனக்குழுக்கள் அதிர்ந்திருக்கலாம். ஆனால் இது உண்மையென்றால் நேரு எத்தனை தொலை நோக்குடன் சர்வதேச பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதன் நீட்சியே இன்று சுவிட்சர்லாந்து வரை இந்திய செல்வம் பரந்து விரிந்து மானுடத்தை தழுவியிருக்கிறது. இந்திய மக்களின் உழைப்பின் பயனால் லாபம் அடைவது சுவிஸ் வங்கிகள் என்றால் அதிலுள்ள கடைநிலை ஊழியனும் லாபம் அடைவானே. ஆக சுவிஸ் வங்கியை சுத்தம் செய்யும் ஒரு கடைநிலை ஊழியன் உறிஞ்சும் தேநீரில் இந்திய உழவனின் பணமும் உள்ளது என்பது எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி. எனவேதான் காந்தி கூட லண்டன் சென்ற போது அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தங்கினார்.
கேரளாவில் இது குறித்த ஒரு ஆழமான காந்திய-மார்க்ஸிய புரிதல்பாடு உள்ளது. ஒரு சிறிய சூரிய மின் சக்தி திட்டத்திலும் கூட ஊழல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இதுதான நவீன ஜனநாயகத்தன்மை. இந்த ஊழலின் விளைவாக ஊடகங்கள் அந்த திட்டத்தை குறித்து பரபரப்பாக பேசுகின்றன.  பெண்கள், இளைஞர்கள். அரசியல்வாதிகள் என பலதரப்பு மக்கள் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளனர். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையை அது காட்டுகிறது. சிறிது யோசித்து பாருங்கள். இந்த ஊழலின் அளவு பத்து கோடி ரூபாய் என்கிறார்கள். சின்ன திட்டத்திற்கு ஏற்ற கச்சிதமான ஊழல். காந்திய பொருளாதார அறிஞர் ஷீமேச்சர்’ சிறியதே அழகானது’ என கூறினார்.


ஆனால் குஜராத்தில் நடப்பதை பாருங்கள். 16 லட்சம் அலகுகள் கொண்ட சுத்தமான மின்சக்தியுடன் 90 லட்சம் லிட்டர்கள் நீர் ஆவியாகி செல்வதையும் இது தடுக்கும். நர்மதா நதியின் நீர்வழிகளின் ஒட்டுமொத்த நீளம் 19000 கிலோ மீட்டர்கள். இதில் பத்து சதவிகிதம் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் 2200 மெகாவாட் சக்தி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதில் எந்த ஊழலும் இல்லை. அதாவது அதிகார பகிர்ந்தளிப்பு இல்லை. அதை அளிக்க மோடியால் முடியவில்லை . என்பதுதான் உண்மை.  இதைத்தான் சர்வாதிகாரம் என்று சொல்கிறோம். சிலர் சொல்கிறார்கள் மோடியை எதிர்த்து குஜராத்தின் தலைநகரிலேயே பிரசுரங்களை மக்களால் எளிதாக விநியோகிக்க முடிகிறதே என்று. இது ஜனநாயகத்தை குறித்த மிகவும் மேலோட்டமான அபத்தமான வாசிப்பு. இணையம் முழுக்க நிரம்பியுள்ள மோடி ஆதரவாளர்களால் இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத்தான் நிகழ்த்த முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் அதிகாரம் செடி போல படர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்கையில் அந்த செடிகளில் கனியாக தோன்றுவது ஊழல். அது இல்லாமல் மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்துவதென்பதே ஒருவித பாசிச மனநிலைதான்.  


யோசித்து பாருங்கள். கேரளாவின் இந்த சோலார் ஊழலால் இனி எத்தனையோ திரைப்படங்கள் வரக்கூடும். அழகிய பெண். விலை போகும் அரசியல்வாதி, பின்னால் இருக்கும் சோகம், அந்த அரசியல்வாதியின் ஆதி இச்சையான அந்த பெண்ணின் பின்னால் இருக்கும் சோகம்,தனிமை, இதனை பயன்படுத்தும் ஒரு வியாபார உள்ளம்… எத்தனை அருமையான நாவல்கள், எத்தனை எத்தனை திரைப்படங்கள்… இவையெல்லாம் பெரும் அறக் கேள்விகளை  வாசகன  மனதுக்குள்ளும் பார்வையாளரின் அந்தரங்கங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கும். இந்த கேள்விகளின் மூலமாகத்தான் நாம் அறத்தை நோக்கி ஒரு சமுதாயமாக நகர முடியும்.  ஆனால் எல்லா செயல்திட்டங்களும் மக்களுக்காகத் தீட்டப்பட்டு ஊழலில்லாமல் குஜராத் போல அரசு நிர்வாகம் நடந்ததென்றால் அந்த சமுதாயத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? அந்த சமுதாயத்தில் வாழும் கலைஞன் என்ன அறச்சீற்றத்தை அடைய முடியும்? மீண்டும் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா எனும் கேள்விக்கா நாம் திரும்ப செல்வது?
எனவேதான் சொல்ல வேண்டி உள்ளது. ஊழலே இல்லாமல் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் மூலம் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் நற்பயன்கள் மட்டுமே கிடைக்கும் ஒரு நிர்வாகத்தை மோடி அளித்துவிடுவார். ஊடகங்களுக்கு யார் வாழ்வளிப்பார்கள்? ஊடக இந்தியா, ஊழல்களால் கொழித்த உயர்குடி இந்தியா எதிர்நோக்கும்  மிகப் பெரிய அபாயம் எது என்றால் நிச்சயமாக அது மோடிதான். இதில் இரண்டுவித கருத்துக்கு இடமே இல்லை.

நன்றி- http://www.tamilhindu.com

Sunday, 22 December 2013


vkalathur வ,களத்தூரில் வரும் ஜனவரி 8 மற்றும் 9  தேதிகளில் ஊரக விளையாட்டுபோட்டி நடைபெற உள்ளது. இதற்கென நமது ஊராட்சிக்கு ரூபாய் . 2௦௦௦௦/- ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் , சுய உதவிக்குழு உறுப்பினர்கள்  மற்றும் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் . போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 3௦-12-2௦13 க்குள் தங்களது பெயரை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
       பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 27-ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு மற்றும் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மது கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் 1 கார், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை எனது உத்தரவின்பேரில், மதுவிலக்கப் பிரிவுக் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் டிச. 27-ல் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகின்றன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் டிச. 23 முதல் 26ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நன்றி - தினமணி.

Saturday, 21 December 2013




தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரும்பு உற்பத்தியைப் பெருக்க
பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வரு
கிறது. ஒவ்வொரு ஆண்டும்
கரும்புக்கான, நியாயமான மற்றும் ஆதாய
விலையை மத்திய அரசு உயர்த்தும்
போதெல்லாம், கரும்பு விவசாயிகளின்
நலனைக் கருத்தில் கொண்டு, மாநில
பரிந்துரை விலையை தொடர்ந்து வழங்கிக்
கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், 2011-2012 ஆம்
ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 1,450
ரூபாய் கொடுக்கப்பட வேண்டும்
என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த
போது, போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில
அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய்
உயர்த்தி 2,100 ரூபாயாகவும்; 2012-2013
ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன்
ஒன்றிற்கு 1,700 ரூபாய் என மத்திய
அரசு நிர்ணயித்த போது, போக்குவரத்துச்
செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான
மாநில அரசின் பரிந்துரை விலையை 650
ரூபாய் உயர்த்தி 2,350 ரூபாயாகவும்
வழங்க ஆணையிட்டேன்.
தற்போது, 2013-2014 ஆம் ஆண்டிற்கான
கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும்
ஆதாய விலையாக டன் ஒன்றிக்கு 2,100
ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் நலன்கள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு, மத்திய
அரசு அறிவித்த விலையைக் காட்டிலும்,
2013-2014 ஆம் ஆண்டிற்கான மாநில
அரசின் பரிந்துரை விலையாக டன்
ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு 100
ரூபாய் உட்பட 550 ரூபாய்
உயர்த்தி வழங்க நான்
ஆணையிட்டுள்ளேன். இதன்மூலம்,
கரும்பு விவசாயிகளுக்கு டன்
ஒன்றிக்கு 2,650 ரூபாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவிலான இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
அதன் விபரம் வருமாறு: 




பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று  www.perambalur.nic.in என்ற முகவரியில் பிரத்தியேக இணையதளம் செயல்பட்டு வருகிறது. தற்போது தேசிய தகவல் மையத்தின் மூலம் புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்புடைய அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் முக்கியச்செய்திகள், அனைத்து அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பெரம்பலூர் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களும், முக்கியமான திட்டங்கள் குறித்தும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தேவையான தகுதிகள் குறித்த விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் ஆன்லையின் மூலம் பல்வேறு தேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள முகவரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களின் அன்றாட நிகழ்வுகள் குறித்த செய்திகளும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பொதுமக்கள் இந்த இணையதளத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கி.கண்ணதாசன், தேசிய தகவல் மைய அலுவலர் திரு.ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பெரம்பலூர்.

Friday, 20 December 2013

“மற்றவர்கள்  செய்கிறார்களோ இல்லையோ, எனது சீர்திருத்தக் கருத்தை தினசரி வாழ்க்கையில் முதலில் நான் செயல்படுத்துவேன் என்று களமிறங்குபவரே உண்மையான சீர்திருத்தவாதி” என்கிறார் வீர சாவர்க்கர் [1].  இந்தக் கூற்றுக்கு ஏற்றபடியே அவர் வாழ்ந்தும் காட்டினார்.
1925ம் ஆண்டு தொடங்கி ரத்னாகிரி மாவட்டத்தின் பல பகுதிளில் சுற்றுப் பயணம் செய்து தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிரான பிரசாரங்களை செய்து வந்தார். கிராமங்களில் கூட்டு பஜனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். கிராமப் பள்ளிகளில் தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப் படும் நடைமுறையை நிறுத்தக் கோரினார். மஹார், சமார், பால்மீகி சமுதாய மக்களிடம் அவர்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான சிறு பொருள் உதவிகளையும் அவரது தொண்டர்கள் செய்தனர். ரத்னாகிரி ஹிந்து சபா அமைப்பின் சார்பாக 1932ம் ஆண்டு அப்பகுதியின் நிர்வாகியாக இருந்த லாமிங்டன் என்ற பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிக்கு ஒரு மனுவை சாவர்க்கர் அனுப்பினார் –  “எல்லா சாதி மாணவர்களையும் ஒன்றாக பள்ளிகளில் அமரவைத்து கல்வி கற்பிக்க வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கையிலும் அவர்கள் சாதியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இது தொடர்பாக 1923ல் அரசு இயற்றிய சட்டத்தையே அமுல்படுத்த வேண்டும்.  தாழ்ந்த சாதி மக்களுக்கான சிறப்பு பள்ளிகள் என்று நீங்கள் இப்போது கொண்டு வரப் போகும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரினார் [2].

பள்ளிகள் போன்ற பொது இடங்களில் மட்டுமல்லாது, வீட்டளவிலும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார். இதற்காக தசரா, மகர சங்கராந்தி ஆகிய பண்டிகைகளின் போது தாழ்த்தப் பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று இனிப்புகளை சாப்பிடுவதையும், வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மாயி யமுனாபாய் (சாவர்க்கரின் மனைவி) அனைத்து சாதி இந்துப் பெண்களையும் அழைத்து  மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார். தாழ்த்தப் பட்ட சாதி மகளிருக்கு  மற்ற சாதிப் பெண்கள் குங்குமம் வைப்பது, அதே போல அவர்களிடம் குங்குமம் வைத்துக் கொள்வது என்ற இரண்டு விஷயங்களையும் அந்த நிகழ்ச்சிகளில் நடைமுறைப் படுத்தினார்.
சாவர்க்கர் ஒரு சிறந்த மராத்தி நாடகாசிரியரும் கூட. பிரபல மேடை நாடக சபைகள் அவரது நாடங்களை நிகழ்த்தும் போது, தாழ்த்தப் பட்ட சமூக நண்பர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளின் அனுமதிச் சீட்டுகளை இலவசமாக வழங்கினார். அவர்கள் சமூகத்தில் எல்லாருடனும் கலந்து பழகுவதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும் என்று மிகச் சரியாகவே அவர் கருதினார். வங்கியிலிருந்து கடன் பெற்று, தாழ்த்தப் பட்ட மக்கள் இசைக்குழு (musical band) அமைக்க உதவினார். ஆனால், 1930களில் கூட, ரத்னாகிரியின் விட்டல் ஆலய கமிட்டியினர் கோயில் திருவிழாவின் போது முஸ்லிம் இசைக்குழுக்களை அழைத்து வந்தார்களே தவிர, இந்து தலித் இசைக்குழுவை அனுமதிக்கவில்லை! இப்படித் தான் இருந்தது அன்றைய பொது சமூக மனநிலை. [3]
1933ம் ஆண்டு, மே 1ம் நாள் அனைத்து இந்துக்களுக்குமான ஒரு தேநீர் விடுதி மற்றும் சிற்றுண்டிச் சாலையை ரத்னாகிரியில் சாவர்க்கர் தொடங்கினார். இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகம் இது தான். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வரவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக சாவர்க்கர் விதித்திருந்தார். இந்த எளிய செயலைச் செய்வதற்குக் கூட அந்தக் காலகட்டத்தில் மிகவும் துணிச்சல் வேண்டியிருந்தது. திலகரின் சீடரும் பிரபல மராத்திய எழுத்தாளருமான என்.சி.கேல்கர் சாவர்க்கரை சந்திக்கப் போய் அங்கு தேநீர் குடித்தார் என்பதற்காக புனே நகரின் சனாதனி இந்துக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். சாவர்க்கரின் படைப்புகள் அனைத்தையும் தொகுத்தவர்  எஸ்.ஆர்.தாதே. அவர் முதல் முறையாக சாவர்க்கரை சந்திக்கச் சென்ற அனுபவத்தை பின்னாளில் விவரிக்கும் போது, தான் தேநீர் குடிப்பதை பல சாக்கு போக்குகள் சொல்லி மறுத்ததையும், சாவர்க்கர் விடாப்பிடியாக இருந்து தேநீரை அருந்த வைத்ததையும் பதிவு செய்கிறார். அந்த உணவகம் எப்போதும் நஷ்டத்தில் தான் ஓடியது. ஆயினும் சாவர்க்கர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு அதைத் தொடர்ந்து நடத்தினார். அதுவும் பிரிட்டிஷ் அரசு அளித்து வந்த 60 ரூபாய் மாதாந்திரப் படித் தொகையில் அவரது குடும்பம் முழுவதுமே வறுமையில் வாழ்ந்து வந்த காலத்தில். 


1930களில் சமபந்தி போஜனம் என்பது நினைத்துப் பார்க்க் முடியாத ஒரு செயலாகவே பலருக்கு இருந்தது. தீண்டாமையை தீவிரமாக எதிர்த்து வந்த காந்திஜி கூட  சமபந்தி போஜனம், கலப்பு திருமணம் போன்றவை அவசியமானவை, சாத்தியமானவை என்று தான் “கனவிலும் கருதவில்லை” என்று 1932ல் அறிவித்தார். சமபந்தி போஜனங்களில் கலந்து கொண்ட சாதி இந்துக்கள் அவர்கள் குடும்பங்களிலும், சமூகங்களிலும் கடுமையாக வெறுக்கப் பட்டார்கள். பரிகாரங்கள் செய்தாலன்றி அவர்கள் குடும்பத்துடன் திருமண உறவு கொள்ள மாட்டோம் என மற்ற ஆசாரவாதிகள் அறிவித்தனர். இவ்வளவற்றையும் மீறி சாவர்க்கர் சமபந்தி போஜன நிகழ்ச்சிகளை நடத்தினார். 1931ம் ஆண்டு காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட 35 காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுவிக்கப் பட்டதைக் கொண்டாடும் வகையில் சமபந்தி போஜன நிகழ்ச்சியை ரத்னாகிரியில் ஏற்பாடு செய்தார். 1934ல் கொங்கண் சமாசார் என்ற பத்திரிகையை சாவர்க்கர் தொடங்கினார். அதன் தொடக்க விழாவில் நடந்த சமபந்தி போஜன நிகழ்வில் அனைத்து சாதி இந்துக்களுடன் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர்.  1936ம் ஆண்டு பிரபல நடிகர்-பாடகர் பாலகந்தர்வா தனது கலை நிகழ்ச்சிக்கு சாவர்க்கரை அழைத்த போது, நிகழ்ச்சியின் இறுதியில் சமபந்தி போஜனம் இருந்தால் மட்டுமே வருதாக சாவர்க்கர் கூறி விட்டார். அவ்வாறே அந்த நிகழ்ச்சியும் நடந்தது. இந்தியா முழுவதும் பிறகு பல இடங்களில் நடந்த இத்தகைய சமுதாய சமத்துவ நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக சாவர்க்கரின் செயல்கள் அமைந்திருந்தன.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தாழ்த்தப் பட்ட டாக்ரா (Dhakra) சமூகத்து மக்களை ஆரிய சமாஜ “சுத்தி” சடங்கு வழியாக சாவர்க்கர் தாய்மதம் திரும்பச் செய்தார். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மற்ற இந்துக் குடும்பங்கள் மணமுடிக்க வேண்டும் என்பதை முனைந்து செயல்படுத்தினார். இத்தகைய ஒரு பெண்ணின் திருமணத்தில் தானே அவளது தந்தையாக இருந்து “கன்யாதானம்” செய்து வைத்தார். மாங்க் (maang) சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாவர்க்கர் வீட்டிலேயே அவரது மகள் போல வளர்ந்தாள்.  பல தாழ்த்தப் பட்ட சமூக மக்களுக்கு  எழுதப் படிக்க கற்பிக்கும் வகுப்புகளை தனது வீட்டிலேயே சாவர்க்கர் நடத்தினார். அந்த மாணவர்களுக்கு மற்ற பாடங்களுடன் காயத்ரி மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.
1933 பிப்ரவரி 22 அன்று “தீண்டாமை” அரக்கனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியை பெரிய அளவில் விளம்பரம் செய்து ரத்னாகிரியில் சாவர்க்கர் நடத்தினார். டாக்டர் அம்பேத்கரின் மஹாட், நாசிக் சத்தியாகிர போராட்டங்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். 1933 நவம்பர் 13 அன்று ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அம்பேத்கரை  ரத்னாகிரிக்கு வருமாறு சாவர்க்கர் அழைப்பு விடுத்தார்; ஏதோ காரணங்களால் அம்பேத்கர் வர முடியாமல் போயிற்று. 1930ல் முதல் முறையாக தாழ்த்தப் பட்ட இந்துக்களும் கலந்து கொண்ட ‘கணேச உத்சவ்’ விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினார். அந்த விழா நிகழ்ச்சிகளில் தாழ்த்தப் பட்ட சாதிகளின் கலைஞர்கள் கீர்த்தனங்கள் பாடினர். அப்பாடகர்களை மற்ற சாதி இந்துக்கள் மாலை அணிவித்து கௌரவித்தனர். அனைத்து சாதி பெண்களும் கலந்து கொண்ட சமபந்தி போஜனம் இந்த விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது.
ஆலய பிரவேச இயக்கங்கள் தொடங்கியிராத காலகட்டம் அது. எந்த விதத்திலும் சாதிப் பாகுபாடுகள் இல்லாத ஒரு புதிய இந்து ஆலயத்தை முன்னுதாரணமாக நிறுவ வேண்டும் என்ற சாவர்க்கரின் திட்டத்திற்கு அவரது சகாக்களான பாகோஜி சேத் கீர், டாக்டர் மகாதேவ் கண்பத் ஷிண்டே, காசிநாத் லட்சுமண் பாருலேகர் ஆகியோர் எல்லா ஒத்துழைப்பும் தருவதாகக் கூறினர்.  1929ம் ஆண்டு மகாசிவராத்திரி தினத்தன்று டாக்டர் குர்தகோடி (Dr. Kurtakoti)  சங்கராசாரியார் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.  இந்த சங்கராசாரியார் சாதியத்தை முழுமையாக எதிர்த்த சிறந்த ஆன்மீகத் தலைவராவார். அந்த விழாவில் சாவர்க்கர் கோயில் குறித்த தனது சிந்தனைகளை வெளியிட்டார் -

Bhagoji Seth Keer

“காசி, பூரி, துவாரகை, ராமேஸ்வரம் முதற்கொண்டு அனைத்து கோயில்களும் எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்கள் தரிசனம் செய்ய திறந்து விடப் படவேண்டும். அதுவே எனது எண்ணம். பிறப்பு அடிப்படையிலான  சாதி வேறுபாட்டைக் காட்டி எந்த ஒரு இந்துவுக்கும் அந்த உரிமை மறுக்கப் படக் கூடாது. இந்தக் கொள்கையை ஒட்டுமொத்த இந்து சமூகமும் கட்டாயம் ஏற்றுக் கொள்ளத் தான் போகிறது. ஆனால் அதுவரை காத்திருக்காமல், உடனடியாக இத்தகைய ஒரு கோயிலை நாம் உருவாக்கிக் காட்டியாக வேண்டும்..
கட்டிட காண்டிராக்டரான பாகோஜி சேத் தலைமையில் உருவாகும் அறக்கட்டளை இக்கோயிலைக் கட்டும். ஸ்ரீ லஷ்மி நாராயணர், புனிதமான சிவலிங்கம், குருபாதுகைகள் ஆகிய தெய்வங்கள் இக்கோயிலை அலங்கரிக்கும். பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்திர சமூகங்களிலிருந்தும், இப்போது தீண்டாதார் ஆக உள்ள சாதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கோயில் கமிட்டியில் இருக்க வேண்டும். கோயிலின் அர்ச்சகர் இதில் எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்..”
என்று தனது வரைவை முன்வைத்தார்.
“இந்த வரைவை நாம் செயல்படுத்த முடியவில்லை என்றால் புதிய கோயில் கட்டுவதற்கே அவசியமில்லை. தனது பழைய கோயில்களை பாதுகாக்கும் துணிவும் சக்தியும் இல்லாத ஒரு சமூகத்திற்கு புதிய கோயில்களைக் கட்ட எந்த அதிகாரமும் இல்லை.. இந்தக் கோயில் அந்த சக்தியைத் தூண்டும் ஒரு கேந்திரமாக அமையும். மஹார், சமார் என்று தீண்டாதார் ஆகிவிட்ட சமூகம் மட்டும் இன்று தாழ்ந்தவர்களாக, “பதிதர்களாக” இல்லை. ஒட்டுமொத்த இந்து சமூகமுமே அன்னிய ஆட்சியின் கீழ் தாழ்ந்து போய் இருக்கிறது.  தாழ்வுற்று நிற்கும் இந்த ஹிந்து தேசத்தை மீட்கும் தெய்வத்தை, ஹிந்துக்கள் இழந்து விட்ட அனைத்தையும் அவர்கள் திரும்ப்ப் பெறச் செய்யும் ஒற்றுமை தெய்வத்தை நான் “பதித பாவன” என்று அழைப்பேன்”
என்று முழங்கினார். விழாவின் முடிவில் சாவர்க்கர் இயற்றிய இந்து ஒற்றுமை கீதம் பாடப் பட்டது.

பதிதபாவன மந்திர், ரத்னாகிரி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் (1920களின் கணக்குப் படி) மிக அருமையாக கோயில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த செலவில் பெரும்பகுதியை பாகோஜி சேத் அளித்தார். எனவே அவரது கரங்களால் பூஜைக்குரிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட வேண்டும் என்று சாவர்க்கர் விரும்பினார்.
வேத சடங்குகளை செய்வதற்கு தகுதியற்றது என்று கருதப் பட்ட “பண்டாரி” சாதியைச் சேர்ந்தவர் பாகோஜி சேத். அவரது குடும்பத்தின் பூஜைகள், சடங்குகள் அனைத்தும் வேத மந்திரங்கள் இல்லாமல் புராண ஐதிக சுலோகங்கள் மட்டுமே ஓதி நடத்தப் பட்டன. இந்தத் தடையையும் சாவர்க்கர் உடைக்க விரும்பினார். அனைத்து சாதிகளுக்கும் வேதம் கற்கவும், வேத சடங்குகள் செய்யவும், கோயில்களில் பூஜை செய்யவும் உரிமை உள்ளது என்பதற்கான சாஸ்திர ஆதாரங்களை விளக்கி கட்டுரைகள் எழுதினார். காசி, நாசிக், புணே போன்ற இடங்களில் இருந்து வேத பண்டிதர்களை அழைத்து இது பற்றி கருத்துக் கூற வேண்டினார்..  பண்டிதர்கள் அனைவரும்  பாகோஜி சேத் எந்த தீய குணங்களும் இல்லாத உத்தமமான மனிதர் என்பதை ஏற்றனர். ஆனால், அவர் வேத சடங்குகள் செய்ய தகுதியற்றவர் என்றும், அனைத்து சாதியினரும் வேதம் கற்க உரிமையில்லை என்றும் அறிவித்து விட்டனர். இவ்விஷயத்தில் குர்தகோடி சங்கராசாரியாரின் கருத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.
Shankaracharya Dr. Kurtakoti, President of Hindu Mahasabha, Prayag 1924 and Lahore 1936


தன் காரணமாக கோயிலின் பிரதிஷ்டை தடைபடுகிறதே என்று பாகோஜி சேத் கீர் மனமுடைந்தார்.  இரண்டு வருடங்கள் முன்பு தான் மும்பையில் அனைத்து இந்து சாதிகளுக்குமான மயான பூமியை பல எதிர்ப்புகளுக்கு இடையில் அவர் நிறுவியிருந்தார்.  பண்டிதர்களின் சொற்படியே செய்யலாம் என்று  இறைஞ்சினார். ஆனால் சாவர்க்கர் தன் முடிவில் பின்வாங்கவே போவதில்லை என்று அறிவித்தார் – “ஊரில் எத்தனையோ பழைய கோயில்கள் உள்ளன. நாம் ஒரு புதிய கொள்கையை நிறுவுவதற்காக இந்தப் புதிய கோயிலை நிறுவுகிறோம்.  இப்போது இந்த பண்டிதர்களின் அழுத்தத்தால் நம் உறுதியிலிருந்து பின்வாங்கினால் இது முழுவதுமே அர்த்தமற்றதாகி விடும். நாம் திட்டமிட்ட படி நம் நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்றார். தர்மம் அதன் குழந்தைகளைக் கைவிடவில்லை. வேறு சில வேத பண்டிதர்கள் வழிகாட்ட பாகோஜி சேத் வேத சடங்குகளை செய்தார்.


1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் கணேச சாஸ்திரி மோதக் என்ற சிறந்த வேத பண்டிதரின் தலைமையில் ஹோமங்கள் நடைபெற்று, பதிதபாவன தெய்வங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள்  பிரதிஷ்டாபன விழாவில் கலந்து கொண்டு ஆலயத்திற்குள் சென்று தெய்வங்களை வணங்கினர். சமார், மஹார் சாதிகளைச் சேர்ந்த மக்கள் சங்கராசாரியார் குர்தகோடி அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினர். இதற்கு முன் சங்கராச்சாரியார் என்றழைக்கப் படும் சன்னியாசிகளின் காலில் விழுந்து வணங்குவது கூட அவர்களுக்கு தடை செய்யப் பட்டிருந்தது!  பதிதபாவன கோயிலின் உருவாக்கம் சமூக சீர்திருத்தங்களில் சாவர்க்கர் கொண்டிருந்த பேருறுதியை என்றென்றும் பறைசாற்றும்.  இன்றும் புணே, மும்பை, கோல்ஹாபூர் என்று பல ஊர்களில்  இதே பாணியில் அமைந்த பதிதபாவன ஆலயங்களை நாம் காணமுடியும்.
சாவர்க்கரின் இந்த அரிய சமுதாய சமத்துவப் பணிகளை அவரது அரசியல் எதிரிகளாக இருந்தவர்களும் மனம் திறந்து பாராட்டினர். பிரம்ம சமாஜ தலைவர் விட்டல் ராம்ஜி ஷிண்டே, சத்யசோதக் மண்டல் என்ற பகுத்தறிவு இயக்கத்தை நிறுவிய மாதவ் ராவ் பகல் ஆகியோர் தாங்கள் நினைத்துப் பார்க்க்க் கூட முடியாத விஷயங்களை சாவர்க்கர் செய்து காட்டியிருக்கிறார் என்று வாழ்த்தினர். அம்பேத்கர் சாவர்க்கரை பாராட்டியதை சென்ற பாகத்திலேயே பார்த்தோம்.
பதினைந்து ஆண்டுகள் கொடுஞ்சிறை வாழ்க்கைக்குப் பின்னர்,  பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் சமரசமற்ற சமுதாய சமத்துவப் போராளியாக சாவர்க்கர் திகழ்ந்தார். புகழ், பணம், அரசியல் அதிகாரம், பிராபல்யம் எதைப் பற்றிய எண்ணமும் இல்லாமல்,  சிந்தனைச் சிற்பியாக மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடும் ஒரு சிப்பாயாகவும் வேலை செய்தார்.
அவருக்கு உத்வேகமூட்டியது எது? “ஒரு கொள்கை தேச நலனுக்கு உகந்ததா இல்லையா என்று சீர்தூக்கிப் பார்த்துத் தான் அதை ஆதரித்துப் பரப்பவோ, நிராகரிக்கவோ வேண்டும்; அதன் காரணமாக மக்கள் மத்தியில் புகழ் கிடைக்குமா அல்லது எதிர்ப்பு வருமா என்பதை வைத்து அல்ல” இதுவே சாவர்க்கரின் உறுதியான தீர்மானமாக இருந்தது [4].  இது எப்போதும் தன் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக இக்கருத்தை ஒரு சம்ஸ்கிருத சுபாஷிதமாக சுருக்கி எழுதி வைத்திருந்தார் – “மக்களிடம் புகழ் அல்ல, மக்களின் நலனே உயர்வானது, இலட்சியமாகத் தகுந்தது” (வரம் ஜனஹிதம் த்யேயம், கேவலா ந ஜனஸ்துதி).
எல்லா சமூகப் போராளிகளும் நினைவில் கொள்ள வேண்டிய சுபாஷிதம் அது.

இந்தக் கட்டுரைக்கான அனைத்து தகவல்களையும் தந்து உதவிய http://www.savarkar.org/ இணையதளத்திற்கு நன்றி.
சான்றுகள்:
[1] 1935, Hindutvache panchapran or The Spirit of Hindutva; Samagra Savarkar vangmaya, Vol. 3, p.75; hereafter abbreviated as SSV 3:75)
[2] 1937,Balarao Savarkar, Hindu Samaj Sanrakshak parva, Veer Savarkar Prakashan, Mumbai, 1972, p. 159
[3] Balarao Savarkar, ibid, p. 217
[4] Balarao Savarkar, ibid, p. 159

நன்றி-http://www.tamilhindu.com


ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 20.12.2013 முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
          பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வருகிற 20 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வாரந்தோறும் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 31,100  எக்டர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் முதிர்ச்சி மற்றும்  அறுவடை நிலையில் உள்ளது. விவசாயிகள் தங்களது பருத்தி மகசூலை வெளி வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால் எடை குறைவு, குறைவான விலை போன்றவற்றால் அவர்களின்  வருவாய் குறைகிறது.
எனவே விவசாயிகள் பருத்தி மகசூலுக்கு  நல்ல விலை பெற வேண்டும் இதன்மூலம்  அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பெரம்பலூர்  வடக்கு மாதவி சாலையில் காந்தி நகரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இங்கு நடப்பாண்டில் வருகிற வெள்ளிக்கிழமை (20.12.2013) முதல் ஏலமுறையில் பருத்தி விற்பனை துவங்கப்பட உள்ளது. இந்த விற்பனை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.  
 இங்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 2000 மெ.டன் கொள்ளளவு உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் ரூ.31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
                விவசாயிகளுக்கு இலவச தராசு வசதி, சரியான எடைமற்றும் மறைமுக ஏலம் மூலம் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் இதன்மூலம் விவசாயிகள் அதிக வருவாய் பெறமுடியும். மேலும் விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. தரகு, கமிஷன் கிடையாது. பிற சந்தைகளில் நிலவும் விலை விபரங்களை இங்குள்ள டிக்கர் போர்டு கருவி மூலம்  அறிந்து கொள்ளும வசதி உள்ளது. விலை குறைவாக இருக்கும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிடங்கில்  இருப்பு  வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம்.
                விளைபொருட்களை இருப்பு  வைத்து பொருளீட்டுக்கடன் ரூ. 2 லட்சம் வரை பெறலாம். இவ்வாறு பெறப்படும் கடனுக்கு முதல் 15 நாட்களுக்கு வட்டி இல்லை. 16ம் நாள் முதல் 6 மாதம் வரை மிக குறைந்ந வட்டி (5%) மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும்  ஒரு ஆண்டில் குறைந்தது ஒரு மெ.டன்  அளவு விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவர் நலத்திட்டத்தின் மூலம் இலவச காப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விபத்து காலங்களில்  ரூ.50,000 முதல் ரூ.1 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை பெற முடியும். மக்காச்சோளம் கதிர் அடிக்கும் கருவி 1மணி நேரத்திற்கு ரூ.96க்கும், ரோட்டவேட்டர் கருவி 1 மணி நேரத்திற்கு ரூ.23க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.   
  எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற விளைபொருட்களை வெள்ளிக்கிழமை தோறும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டுவந்து விற்று நல்ல விலையும் அதிக வருவாயும் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு :  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
         
        
       தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன் கார்டு மீண்டும் , மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரேசன்கார்டு இந்த டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை இந்த ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று 2 வது முறை நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவில் வரும் 2014 டிசம்பர் வரை நடப்பில் இருக்கும் ரேசன்கார்டு நீட்டிக்கப்படுகிறது. இதற்கென உள்தாள் அந்தந்த ரேசன்கடைகளில் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகள் 2014 -15 ல் தான் வழங்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நன்றி- தினமலர்.

தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை நடத்தப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தேசிய அடையாள அட்டை  (ஆதார் ) பதிவு விடுபட்டவர்களுக்கு பதிவு செய்திட இரண்டாம் கட்ட முகாம் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக  18.01.14 வரை நடத்தப்படுகிறது என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் 13.12.13 முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் 1 முதல் 21 வார்டு பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்திலும், பெரம்பலூர் குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் வட்டத்தைச்சேர்ந்த குரும்பலூர், வேப்பந்தட்டை வட்டத்தை சேர்ந்த பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் ஆகிய   குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் (RI) அலுவலகத்திலும் தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட முகாம்கள் கிராமம் மற்றும்  வார்டு வாரியாக 18.01.14 வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெறும்.
இந்த முகாம்கள் தங்கள் பகுதியில் எந்த தேதியில் நடத்தப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
இம் முகாமிற்கு பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று, அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர். 

வ,களத்தூர் உறவுகளே, நீங்கள் வாலிகண்டபுரம் வருவாய் ஆய்வாளரை (RI) அனுகி பதிவு செய்துகொள்ளுங்கள் .